Thursday, July 21, 2016

வைரமுத்துவின் ஒரு கவிதை

"வைரமுத்துவின் ஒரு கவிதை"

உன்னைப் பார்த்து உலகம் குரைக்கும் 
தன்னம்பிக்கை தளர விடாதே 
இரட்டைப் பேச்சு பேசும் உலகம் 
மிரட்டும் தம்பி மிரண்டு விடாதே 

ஒவ்வொரு வாயிலும் ஒற்றை நாக்கு 
உலகின் வாயில் இரட்டை நாக்கு 
எனக்கு நேர்ந்த இழிமொழி எல்லாம் 
உனக்குச் சொல்கிறேன் உள்ளத்தில் எழுது 

*********
இன்னிசைத் தமிழை எளிமை செய்தேன் 
இலக்கியம் இல்லை லேகியம் என்றது 
திரைப்பாட்டுக்குள் செழுந்தமிழ் செய்தேன் 
பரிமே லழகரை வரச்சொல் என்றது 

குறுந்தொகை கம்பன் கொட்டி முழக்கினேன்
குண்டுச் சட்டியில் குதிரை என்றது 
எலியட் நெருடா எல்லாம் சொன்னேன் 
திறமை எல்லாம் திருடிய தென்றது 

எளிய தோற்றமே இயல்பென ருந்தேன் 
வடுக பட்டி வழியுது என்றது 
அழகாய் நானும் டைகள் கொண்டேன் 
கழுதைக் கெதற்குக் கண்மை என்றது 

மேடையில் கால்மேல் காலிட் டமர்ந்தேன் 
படித்த திமிர்தான் பணிவில்லை என்றது 
மூத்தவர் வந்தததும் முதலில் எழுந்தேன் 
கவிஞன் நல்ல 'காக்கா' என்றது 

உயர்ந்தோர் பெருமை உவந்து புகழ்ந்தேன் 
காதில் பூ வைக்கிறான் கவனம் என்றது 
விரல் நகத்தளவு விமர்சனம் செய்தேன் 
அரிவாள் எடுக்கிறான் பத்து என்றது 

மற்றவர் சூழ்ச்சியால் மண்ணில் விழுந்தேன்
புத்தி கொழுத்தவன் புதைந்தான் என்றது 
மூச்சுப் பிடித்து முட்டி முளைத்தேன் 
தந்திரக்காரன் தள்ளி நில் என்றது 

பகையைக் கண்டு பைய நகர்ந்தேன் 
பயந்து விட்டான் பாவம் என்றது 
மோதி மிதித்து முகத்தில் உமிழ்ந்தேன் 
விளங்கி விட்டதா மிருகம் என்றது 

*********
பணத்தில் பொருளில் பற்றற் றிருந்தேன் 
வறுமையின் விந்தில் பிறந்தவன் என்றது 
என்னைத் தேய்த்து மண்டபம் கட்டினேன் 
புலவன் இல்லை பூர்ஷ்வா என்றது 

சொந்த ஊரில் துளி நிலம் இல்லை 
இவனா மண்ணின் மைந்தன் என்றது 
தென்னை மரங்கள் தேடி வாங்கினேன் 
பண்ணையார் ஆனான் பாவலன் என்றது 

கயவர் கேட்டால் காசு மறுத்தேன் 
கறக்க முடியாக் கஞ்சன் என்றது 
உண்மை ருந்தால் உறுபொருள் கொடுத்தேன் 
உதறித் திரியும் ஊதாரி என்றது 

மங்கைய ரிடையே மெளனம் காத்தேன் 
கவிஞன் என்ற கர்வம் என்றது 
பெண்கள் சிலருடன் பேசத் தொடங்கினேன் 
கண்களைக் கவனி காமம் என்றது 

விருதுகள் கழுத்தில் வீழக் கண்டேண் 
குருட்டு அதிர்ஷ்டம் கூடிய தென்றது 
மீண்டும் மீண்டும் விருதுகள் கொண்டேன் 
டெல்லியில் யாரையோ தெரியும் என்றது 

திசைகள் தோறும் தேதி கொடுத்தேன் 
அய்யோ புகழுக்கு அலைகிறான் என்றது 
நேரக் குறைவு நிறுத்திக் கொண்டேன் 
கணக்குப் பார்க்கிறான் கவிஞன் என்றது 

*********
அப்படி இருந்தால் அதுவும் தப்பு 
இப்படி ருந்தால் இதுவும் தப்பு 
கத்தும் நாய்க்குக் காரணம் வேண்டாம் 
தன் நிழல் பார்த்து தானே குரைக்கும் 

உலகின் வாயைத் தைத்திடு; அல்லது 
இரண்டு செவிகளை இறுக்கி மூடிடு 
உலகின் வாயைத் தைப்பது கடினம் 
உந்தன் செவிகள் மூடுதல் சுலபம்.