Monday, January 12, 2015

குழந்தைகளை மீட்போம்!

கார்ட்டூன் சேனல் ஒன்று நடத்திய ஆய்வு முடிவு, இந்தியாவில் அதிகளவில் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது. கவலைப்படும் சதவீதத்தில் 7 - 11 வயதுக் குழந்தைகள் அதிக அளவில் செல்போனுக்கு அடிமையாகியுள்ளனர். செல்போன் கையில் இல்லாத நேரங்களில் டிவியும், கார்ட்டூன்களும், கம்ப்யூட்டர் கேம்ஸ்களும் குழந்தைகளை நகர விடாமல் உட்காரவைத்துள்ளன. மாலை நேரங்களில் தெருக்களில் விளையாடும் குழந்தைகளைக் காணோம். போன தலைமுறைக் குழந்தைகள், தாங்கள் விளையாடிய விளையாட்டைப் பற்றிப் பேசினால், இந்த தலைமுறைக் குழந்தைகள் கார்ட்டூ்ன் சேனல்களில் தோன்றும் ஒரு கேரக்டர் பெயரைத்தான் கூற முடிகிறது.
 
குழந்தைகள் விளையாடாமல் வரும் உடல்நலப் பிரச்னைகள் ஒருபக்கம் என்றால், இந்த எலெக்ட் ரானிக் பொருட்கள் அவர்களிடம் ஏற்படுத்தும் மனச்சிக்கலும் பெரியது.'குழந்தைகளை ஒரு அறையில் விட்டால், ஃபேன் ஓடுவதையும், ஜன்னல் ஸ்க்ரீன் அசைவதையும் மட்டும் அவ்வளவு நேரம் பார்ப்பார்கள். இதனால், அவர்களின் மனநிலை அமைதியுடன் இருக்கும். ஆனால், டிவி, கம்ப்யூட்டரைப் பார்க்கும்போது நொடிக்கு ஒருமுறை வண்ணங்களின் அசைவுகள், சத்தங்களால் அவர்களின் மனநிலை மாறுகின்றன. அடம்பிடிக்கும் குழந்தையை சமாளிக்கவும், வயிறு நிறைய உணவை ஊட்டவும், தொந்தரவு செய்யாமல் இருக்கவும், பெற்றோரே குழந்தைகளை எலட்ரானிக் கேட்ஜெட்களுக்கு அடிமையாக்கிவிடுகிறார்கள். இயற்கையை ரசிப்பதைப் பற்றி சொல்லித்தராமல், சுற்றுலா சென்ற இடத்திலும் ஆளுக்கொரு மொபைல்போனோடு இருந்து குழந்தை கையிலும் ஒன்றைத் திணித்து விட்டிருக்கிறோம். இயற்கை என்றால் என்ன என்று கேட்கும் நிலைக்கு குழந்தைகளை வைத்துள்ளோம்.

வெயிலில் விளையாடாமல் பெரும்பாலான குழந்தைகளுக்கு இன்று வைட்டமின் டி குறைபாடு உள்ளது. மூன்று வயதில் மூக்குக் கண்ணாடி, ஆறு வயதில் தொப்பை, 10 வயதில் பூப்பெய்துதல், 12 வயதில் பாலியல் ஆர்வம் என்கிற விபரீதங்களுக்கு இந்த எலெட்ரானிக் பொருட்களே காரணம் என்பதை பெற்றோர் உணர வேண்டும். திரையில் இருக்கும் நண்பர்களுக்காக, நிஜத்தில் இருக்கும் மனிதர்களின் உணர்வுகள் மதிக்கப்படுவதும் இல்லை, கவனிக்கப்படுவதும் இல்லை. பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதால், குழந்தைகளிடம் நேரம் செலவழிப்பதும் குறைந்துவிட்டது. வீடியோ கேம்களில் யாரையாவது அடித்தால் நமக்கு 200 மார்க். போலீஸை ஏமாற்றி காரை வேகமாக ஓட்டி சென்றுவிட்டால் நாம்தான் ஹீரோ என்பதில் இருந்து குழந்தைகள் என்ன கற்றுக்கொள்வார்கள்? விளையாட்டில் தோல்வி ஏற்படும் நேரத்தில் ரீசெட்செய்து, மறுபடியும் முதலில் இருந்து விளையாடுகின்றனர். ஆனால், நம் வாழ்க்கையை என்றும் ரீசெட் செய்துகொள்ள முடியாது. வாழ்க்கையில் பிரச்னைகள் வந்தால், அதை சமாளிக்கவும், எதிர்கொள்ளவும் தெரியாமல் திணறிவிடுகிறார்கள். ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் குறுக்குச் சிந்தனை, வன்முறை நிறைந்த குணம் என மாறிப்போவது ஆபத்து!

குழந்தைகளை மீட்பது எப்படி?

ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் மட்டுமே டி.வி பார்க்க அனுமதியுங்கள். அதுவும் சிந்திக்கக்கூடிய நிகழ்ச்சிகளாக இருக்கட்டும். அதைப் பார்த்த பின்பு, எது நிஜம், எது கற்பனை என்பதையும் புரியவைக்க வேண்டும். கார்ட்டூன்களில் வன்முறை நிறைந்தவற்றைத் தவிர்க்கலாம். எலெக்ட்ரானிக் பொருட்களிடம் இருந்து குழந்தைகளை மீட்பதற்கு முன், நீங்கள் அதில் இருந்து விடுதலைபெறுங்கள்.

குழந்தையின் வெளித்தோற்றத்தை மட்டுமின்றி அறிவு, திறமை, செயல்கள், உணர்வுகள் போன்ற அனைத்து விஷயங்களையும் பாராட்டுங்கள். அமைதியாக வேலையை செய்து கொண்டிருந்தாலோ, மகிழ்ச்சியாக குழந்தைகள் உணர்ந்தாலோ பாராட்டுங்கள். இதனால், வெளியிலிருந்து வரும் பிரச்னைகள் பெரிதாகத் தெரியாது.

குழந்தைகள் உங்களிடம் எதிர்பார்ப்பது அன்பை மட்டுமே. குழந்தைகளுடன் இருக்கும் நேரத்தை அதிகப்படுத்துங்கள். கடைக்கு அழைத்துச் செல்லுங்கள். அவர்களுடன் பரமபதம், பல்லாங்குழி, கண்ணாமூச்சி என ஏதாவது விளையாடுங்கள். வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வை, பரமபதத்தைவைத்து விளக்கலாம்.

குழந்தைகளிடம் எந்த மாற்றத்தை நீங்கள் விரும்புகிறீர்களோ, முதலில் அதை நீங்கள் செய்யுங்கள். நல்ல பழக்கங்களை நீங்கள் முதலில் தொடங்கி, பின்பு குழந்தைகளுக்குச் சொல்லித்தரலாம். குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசாது. ஆனால், கேட்ட வார்த்தையைப் பேசும் என்பதால், வார்த்தைகளில் அதிகக் கவனம் தேவை.