Monday, September 29, 2014

குழந்தைகள் வீட்டில் கற்கும் பாடம்

குடும்ப வன்முறை குறித்த சக்திவாய்ந்த நான்கு நிமிடக் குறும்படம் ஒன்றை It's time to act on Our Watch என்ற பெயரில் செப்டம்பர் 4-ம் தேதி வெளியிட்டுள்ளது. பார்ப்பதற்கு பால்மனம் மாறாதவர்களாகத் தோன்றும் ஏழெட்டு வயதுக் குழந்தைகளிடம், “நீங்கள் பெரியவர்களான பிறகு என்ன செய்வீர்கள்?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் அதிர்ச்சிகரமான பதிலைச் சொல்லியிருக்கிறார்கள். “என் மனைவி என்னைப் புண்படுத்தினால் அவளை அடிப்பேன்” என்று ஒரு சிறுவன் சொல்கிறான். இன்னொரு சிறுவனோ, “என் மனைவியை வேறு ஆடவர்களுடன் பழகாதே” என்பேன் என்கிறான். ஒரு சிறுமி, “பெரியவள் ஆனபிறகு என் கணவன் அடிப்பான். நான் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆவேன்” என்கிறாள். குடும்ப வன்முறைக்கான சூழ்நிலையை, அது நியாயம்தான் என்ற கருத்தை குழந்தைகள் தங்கள் வீட்டுச் சூழலிலேயே உருவாக்கிக் கொள்கிறார்கள் என்பதை எச்சரிக்கும் வீடியோவாக இது இருக்கிறது. இந்த வீடியோவில் ஆஸ்திரேலிய பிரபலங்களும் கருத்து சொல்லியுள்ளார்கள். குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இடமாக வீடு இருக்கும்போது அவர்களுக்கு நல்ல சிந்தனையை வளர்க்க வேண்டிய கடமையும் பொறுப்பும் பெற்றோருக்கு இருக்கிறது. அதைச் சரியாகச் செயல்படுத்தும்போதுதான் வரும் தலைமுறையினர் சரியான பாதையில் பயணிப்பார்கள்.