Monday, September 29, 2014

வங்கித் தேர்வுகளில் ரீசனிங் பகுதியில் கேட்கப்படும் கேள்விகள்


undefined


வங்கித் தேர்வுகளுக்கான தேர்வுகளில் ரீசனிங் பகுதியில் கேட்கப்படும் கேள்விகள்

போட்டியாளரின் பகுத்தாராயும் திறன், தர்க்கத் திறன் (Logical skill), ஏதாவது ஒரு வரையறையின் அடிப்படையில் கொடுக்கப்பட்டிருக்கும் படங்கள், குறியீடுகள், எண்களில் இருந்து தரவுகளையும், தகவல்களையும் புரிந்துகொள்ளும் திறன் (Ability to interpret) போன்ற திறமைகளை ஆராயும் வகையில் இந்தப் பகுதியில் வினாக்கள் கேட்கப்படுகின்றன.

ஒழுங்குபடுத்துதல் (Arrangement), தொடர் முடிவை கண்டுபிடித்தல் (Sequential Output Tracing), முடிவுக்கு வருதல் (syllogisms), தகவல் ஆய்வு (Data), சிக்கலான ஆராய்வு (Critical Reasoning), மாறுபட்டதை கண்டறிதல் (Odd-man out), காட்சி ஆராய்வு (Visual Reasoning) என ரீசனிங் பகுதியில் பல்வேறு பிரிவுகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும்.

கேள்விகளின் தன்மை

ஒழுங்குபடுத்துதல் பிரிவில் 12 முதல் 15 கேள்விகள் வரை கேட்கப்படுகின்றன. விடையளிக்க சற்று அதிக நேரம் எடுக்கும் பகுதி இது. இருப்பினும், கொடுக்கப்பட்டிருக்கும் படங்கள், அட்டவணைகள், தரவுகளை புரிந்துகொண்டால் விரைவாக விடையளித்து முழு மதிப்பெண்ணும் பெற்றுவிட முடியும். இப்பகுதியின் கேள்விகளுக்கு விடையளிக்க, விஷயங்களைப் புரிந்துகொள்ளும் திறன் இருந்தாலே போதும்.

தொடர்பு முடிவு கண்டுபிடிக்கும் பகுதியில் 4 முதல் 6 கேள்விகள் வரை கேட்கிறார்கள். எண்கள் அல்லது எழுத்துக்களைக் கொண்டு கேள்விகளை உருவாக்கியிருப்பார்கள்.

அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கக்கூடியதாகவும் இந்தப்பகுதி அமையும். சில நேரம் ஒரு கேள்விக்குக் கூட விடையளிக்க முடியாததாகவும் இப்பகுதியில் வினாக்கள் அமைந்துவிடுவது உண்டு.

கேள்விகளின் தன்மை பிடிபட்டுவிட்டால் பிறகு விடையளிப்பது எளிது. இதற்கு ஒருமுகப்படுத்தும்திறன் மிகவும் முக்கியமானது. ஒருசிறு தவறுகூட ஒட்டுமொத்தமாக அனைத்து கேள்விகளுக்கும் சரியாக விடையளிக்க முடியாமல் செய்துவிடும்.

விதிமுறை

முடிவுக்கு வருதல் பகுதியில் (syllogisms) 6 முதல் 8 கேள்விகள் இடம்பெறுகின்றன. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் ஒன்றுக்கொன்று இருக்கும் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. வாக்கியங்களைப் புரிந்துகொள்வதுடன் கேள்விகளின் தன்மையை நன்கு புரிந்துகொண்டு அதற்கேற்ப விடையளிக்க வேண்டியது அவசியம்.
ஏதாவது ஒரு விதிமுறை அடிப்படையில் பதில் அளிக்கக்கூடிய வகையில் வினாக்கள் அமைந்திருக்கும். அந்த விதிமுறை தெரியாமல் இப்பகுதி கேள்விகளுக்கு விடையளிக்க முடியாது.
தரவு (Data Sufficiency) பகுதியில் 4 முதல் 6 வினாக்கள் வரை கேள்விகள் இடம்பெறும். மேற்கண்ட பகுதியைப் போன்றே இதிலும் வாக்கியங்கள் கொடுக்கப்பட்டு கேள்விகள் கேட்கப்படும்.
ஆனால், கேள்விகள் கணிதம் சார்ந்து இல்லாமல் தர்க்கம் (Logic) தொடர்பானவையாக அமைந்திருக்கும். கேள்வியில் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கங்களை நன்கு புரிந்துகொண்டுவிட்டாலே பாதி விடையளித்தது போல்தான்.

கேள்வியின் அடிப்படை

விஷூவல் ரீசனிங் பிரிவில் 5 முதல் 10 வினாக்கள் வரை கேட்கிறார்கள். ஐந்தாறு படங்களைக் கொடுத்து அந்த தொடரின் தொடர்ச்சி எது, அல்லது அந்த தொடர்ச்சிக்குப் பொருந்தாதது எது என்ற வகையிலான கேள்விகள் இடம்பெறுகின்றன. கூர்ந்து உற்றுநோக்கும் திறன் இருந்தால் எளிதாக விடையளித்துவிடலாம்.

எண்களின் கூட்டல், கழித்தல் கொண்ட படங்கள், கடிகார முள் திசை பக்கம் நோக்கி அல்லது எதிர்திசை நோக்கிய நகர்தல், ஏதாவது கூடுதல் அடையாளம் இருத்தல் அல்லது ஏதாவது ஒன்று விடுபடுதல் என்பன போன்று படங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். படங்களின் அடிப்படை தன்மை பிடிபட்டுவிட்டால் விரைவாக விடையளித்துவிடலாம். அடிப்படைத்தன்மை புரியாவிட்டால் உடனடியாக அடுத்த கேள்விக்கு சென்றுவிடுவதுதான் புத்திசாலித்தனம்.

ஆய்வுத்திறன்

ரீசனிங் பகுதியில் கடினமான பிரிவாக கருதப்படுவது 'கிரிட்டிக்கல் ரீசனிங்' பிரிவுதான். பகுத்தாராயும் திறமை அதிகளவில் சோதிக்கப்படும் இப்பகுதியில் 6 முதல் 8 வினாக்கள் இடம்பெறுகின்றன. கேள்வியில் என்ன கேட்டிருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டு தர்க்கம் மற்றும் ஆங்கில அறிவைப் பயன்படுத்தி விடையளிக்க வேண்டியதிருக்கும்.

அனுமானங்கள், காரணங்கள்-விளைவுகள், செயல்பாட்டு போக்கு, வாதங்களை உறுதிபடுத்தும் மற்றும் பலவீனப்படுத்தும் தன்மை, கண்டிப்பாக சரியா? அல்லது தவறா?, சரியாக இருக்கலாமா? அல்லது தவறாக இருக்கலாமா? என குழப்பும் வகையில் வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும்.
வெறுமனே தகவல்களை தெரிந்து வைத்திருப்பதுடன் ஆராய்ந்து பார்க்கும் திறனையும் வளர்த்துக்கொண்டால் ரீசனிங் பகுதியில் அதிக மதிப்பெண்கள் எடுப்பதில் சிரமம் இருக்காது. வினாக்களுக்கு விடையளித்துப் பயிற்சி பெறும்போது, அவற்றின் அடிப்படை விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அது தேர்வின்போது கைகொடுக்கும்.