Friday, December 16, 2011

கல்லூரியில் படிக்க உதவித்தொகை எங்கு கிடைக்கும்?

கல்லூரியில் படிக்க உதவித்தொகை எங்கு கிடைக்கும்?


தினசரி வாழ்க்கையில் இயற்பியல் எப்படி பயன்படுத்தப்படுகிறது, இயற்பியலை மாணவர்களுக்கு புரியும் வகையில் எப்படிக் கற்றுத்தரலாம் என்பதிலிருந்து, பள்ளி முதல் கல்லூரி வரை படிக்கும் மாணவர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனங்கள் அளிக்கும் கல்வி உதவித்தொகை குறித்த தகவல்களை வழங்கி வருகிறார் டி.ஜி. வைஷ்ணவா கல்லூரி இயற்பியல் துறை தலைவர் டி.உத்ரா.

ந்த யோசனை எப்படி வந்தது என்று பேராசிரியை உத்ராவிடம் கேட்டபோது, என் மகளுக்கு கதை சொல்ல ஆரம்பித்தபோது, என் பெற்றோர்  எனக்குச் சொன்ன கதை, புத்தகத்தில் நான் படித்த கதைகள் இவற்றை தவிர அவளுக்கு புதிதாக பல விஷயங்கள் கற்றுக்கொடுக்கத் தீர்மானித்தேன். அதன் அடிப்படையில் தினசரி வாழ்க்கையில் அறிவியலை நாம் எந்தெந்த வகையில் பயன்படுத்துகிறோம் என்பதை அவளுக்கு சின்னச் சின்னக் கதைகள் மூலம் சொல்ல ஆரம்பித்தேன். விளையாட்டாக கேட்க ஆரம்பித்த அவள், பிறகு ஒவ்வொரு விஷயத்திலும் உள்ள அறிவியலை அவளாக கேட்டுத் தெரிந்து கொள்ள ஆரம்பித்தாள். அதற்குப் பிறகு என் மகள் தெரிந்துகொண்ட அறிவியலை மற்ற குழந்தைகளும் தெரிந்துகொள்வதற்காக  கை கழுவுதல் ஆரம்பித்து, சமையல் செய்தல் உள்பட எல்லாவற்றிலும் இயற்பியல் விதிகள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பதை இதழ்களில் எழுத ஆரம்பித்தேன்.

இதுதவிர பள்ளி ஆரம்பித்து கல்லூரி வரை படிக்கவரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், பல மாணவர்கள் தங்கள் கல்வியை பின் தொடர முடியாத நிலை இருக்கிறது. இம்மாதிரியான  மாணவர்களுக்கு  பல்வேறு தனியார்  நிறுவனங்கள், அரசு  அமைப்புகள், சமூகத் தொண்டு நிறுவனங்கள் கல்வி உதவித்தொகைகள், பாடப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், சீருடைகள், வழங்கி வருகின்றன. இம்மாதிரியான விஷயங்களை அனைத்து மாணவர்களும் தெரிந்துகொண்டால், இளநிலைப் பட்டப் படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பு உதவித்தொகையை வைத்துக்கொண்டே படித்து முடித்துவிடலாம் என்று கூறும் உத்ரா, இதுவரை 96 அறிவியல் கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு  சர்வதேச அறிவியல் மாநாட்டில், நிறமாலைமானியியல் குறித்த ஆய்வறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார்.

கலை அறிவியல் கல்லூரி , பொறியியல் கல்லூரி, முதுநிலைப் பட்டப் படிப்பு மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி உதவித்தொகைகள் குறித்து உத்ரா தொகுத்துத் தந்த தகவல்கள் இதோ:


ராஜஸ்தான் யூத் அசோசியேஷன்

ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் என்ற அமைப்பு பட்டப் படிப்பு மற்றும் டிப்ளமோ பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் மூன்று ஆண்டுகாலம் படிப்புக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் வாங்குவதற்கான உதவித்தொகை அளிக்கிறது. இந்த உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களாக இருக்க வேண்டும். சாதி, பாலினம் போன்ற எந்த விதிவிலக்கும் இந்த உதவித்தொகைக்கு கிடையாது.

விவரங்களுக்கு: www.ryabookbank.com


ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா டிரஸ்ட்

டிக்கும் ஆர்வமும் அதேநேரம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா டிரஸ்ட். இந்த தனியார் நிறுவனம் சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்களும் சிறந்த கல்வியை பெறவேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் இந்த உதவித்தொகையை அளித்து வருகிறது. இளநிலை பட்டப் படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பு, தொழிற்கல்வி பயின்றுகொண்டிருக்கும் மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இந்த உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள், Jaigopal Garodia Scholarships Centre, Jaigopal Garodia Vivekananda Vidyalaya Trust, U – 6, Seventh Street, Anna Nagar, Chennai. தொலைபேசி எண் : 26206261 என்ற  முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


கௌரவ் ஃபவுண்டேஷன்

சென்னையில் இயங்கி வரும் கௌரவ் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனம், இந்திய மாணவர்களுக்கு ஆய்வு மற்றும்  உயர்கல்வி மேற்கொள்வதற்கு உதவித்தொகை அளித்து வருகிறது. இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இந்தியராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 4 லட்ச ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும். 10 வயது முதல் 50 வயது வரை உள்ள படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே உதவித்தொகைக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இளநிலை பட்டப் படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பு, எம்.பி.பி.எஸ். பி.இ., பி.டெக். படிப்பு மேற்கொள்ளும் மாணவர்கள், சி.ஏ., சி.எஸ்., இன்டீரியர் டெக்கரேஷன், ஃபேஷன்/டிசைன் சம்பந்தமான படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களும் இந்த கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

விவரங்களுக்கு: http://gauravfoundation.org/scholarship.html


எஸ்.கே.டி.பி. தொண்டு நிறுவனம்

சென்னை  தி.நகரில் உள்ள எஸ்.கே.டி.பி. எனும் சமூக தொண்டு நிறுவனம் படிக்க வசதியில்லாத பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளித்து வருகிறது. இளநிலை பட்டப் படிப்பு மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளை உதவித்தொகையுடன் படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.  சென்னை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இந்த நிறுவனம் இந்த ஆண்டில் சென்னையைச் சேர்ந்த 64 மாணவர்களுக்கும் மற்றும் பிற பகுதியைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகையை வழங்கியுள்ளது.

விவரங்களுக்கு : www.skdbassociation.com/scholarships.html


ஸ்ரீ வித்யாசாகர் எஜுக்கேஷனல் டிரஸ்ட்

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ வித்யாசாகர் எஜுக்கேஷனல் டிரஸ்ட் அமைப்பு பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை ஆண்டுதோறும் அளித்து வருகிறது. உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு அல்லது
பிளஸ் டூ வகுப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இளநிலைப் பட்டப் படிப்பில் சேருவதற்கு உதவித்தொகை அளிக்கப்படுகிறது. அதேபோல எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல் தற்போது ஐ.டி.ஐ. கல்வி நிலையத்தில் முதல் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

விவரங்களுக்கு : B-1, Narumukai apartment, Brindavan Nagar Extension, Adambakkam, Chennai – 88 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


சோபியா நிறுவனம்

சென்னையில் உள்ள சோபியா என்ற தனியார் நிறுவனம், கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு இலவச கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறது. பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி பயில விரும்பும் மாணவர்களும் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். கல்லூரியில் முதல் ஆண்டு பயிலும்போதே இந்த உதவித்தொகைப்பெற விண்ணப்பிக்க வேண்டும். இரண்டாம் ஆண்டு அல்லது மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போது, கல்வி உதவித்தொகை கேட்டு புதிதாக விண்ணப்பிக்க முடியாது.

விவரங்களுக்கு : www.sophiascholarship.org


சாகு ஜெயின் டிரஸ்ட்

சாகு ஜெயின் டிரஸ்ட் என்ற அமைப்பு தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வாங்குவதற்காக மாதம்தோறும் ரூ.150லிருந்து ரூ.1000 வரை உதவித்தொகை அளித்து வருகிறது. பிளஸ் டூ தேர்வில் மாணவர்கள்  பெற்ற அதிகபட்ச மதிப்பெண்களைப் பொருத்து இந்த உதவித்தொகை பெறுவதற்குரிய மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விவரங்களுக்கு : http://sahujaintrust.timesofindia.com


ஃபவுண்டேஷன் ஃபார் அகாதெமிக்  எக்ஸலன்ஸ் அண்ட் ஆக்சஸ் நிறுவனம்

புதுதில்லியில் உள்ள பவுண்டேஷன் ஃபார் அகாதெமிக்  எக்ஸலன்ஸ் அண்ட் ஆக்சஸ் நிறுவனம் கலை, வணிகம், அறிவியல், மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் தொழிற்படிப்பு, இளநிலைப் பட்டப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை அளித்து வருகிறது. பயணச்செலவாக ஆண்டுக்கு ரூ.1,000, கல்லூரியில் தங்கியிருந்து படிக்க ஆண்டுக்கு ரூ.9,000, ஆடைகள் வாங்க ஆண்டுக்கு ரூ.1000, புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.  மாணவர்களின் அதிகபட்ச மதிப்பெண்கள் அடிப்படையிலேயே இந்த உதவித்தொகைக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விவரங்களுக்கு: www.faeaindia.org/index.asp


சத்தியகாமா சாரிடபிள் டிரஸ்ட்

பெங்களூருவில் உள்ள சத்தியகாமா சாரிடபிள் டிரஸ்ட் என்ற சமூகத் தொண்டு நிறுவனம் பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று மேல்நிலைப் பள்ளிப் படிப்புக்கு கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் தவிக்கும் ஏழை எளிய மாணவிகள் மற்றும் பிளஸ் டூ வகுப்பு முடித்துவிட்டு பட்டப் படிப்பு மேற்கொள்ளவிருக்கும் பிராமண சமுதாய மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கிறது. பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளில் பெற்ற அதிக மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த உதவித்தொகை பெற மாணவிகள் இந்த உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

விவரங்களுக்கு : www.tamilbrahmins.com


டி.வி.எஸ். சோல்ட்ரி டிரஸ்ட் நிறுவனம்

ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த டி.வி.எஸ். சோல்ட்ரி டிரஸ்ட் நிறுவனம் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறது. பிளஸ் டூ முடித்துவிட்டு உயர்கல்வி மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

விவரங்களுக்கு: www.nellorebrahmins.com


ஸ்ரீபிரகாத் பாரதீய சமாஜ்

மும்பையைச் சேர்ந்த  ஸ்ரீபிரகாத் பாரதீய சமாஜ் என்ற அமைப்பு ஆண்டுதோறும், பிளஸ் டூ முடித்துவிட்டு முழுநேர இளநிலைப் பட்டப் படிப்பு அல்லது முதுநிலைப் பட்டப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுர்வேதம், ஹோமியோபதி, என்ஜினீயரிங், பார்மஸி, கம்ப்யூட்டர் சயின்ஸ், வேளாண்மை, கால்நடை அறிவியல், நர்ஸிங் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் குறைந்தபட்சம் பிளஸ் டூ வகுப்பில் 70 சதவீத மதிப்பெண்களும், இந்திய மாணவர்களாக இருப்பின் 60  சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர் பயிற்சி மற்றும் நர்சிங் படிப்பில் சேரும் மாணவிகள் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால், இந்த இலவச கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

விவரங்களுக்கு : shri brihad Bharatiya samaj, 178 NK Mehta International House, behind LIC Yogakshema, Babubhai chinai Marg, Backbay Reclamation, Mumbai – 400020.


இன்போசிஸ் அறக்கட்டளை

இன்போசிஸ் தொழில்நுட்ப நிறுவனம், இன்போசிஸ்  அறக்கட்டளையின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. பத்தாம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்களுக்கு அதிகம் பெற்ற மாணவர்கள் தங்கள் மேல்நிலைக் கல்வி மற்றும் உயர்கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாணவர்கள் எழுத்துத் தேர்வு மூலம் கல்வி உதவித்தொகை பெற தகுதியுடைய மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விவரங்களுக்கு : www.infosys.com/infosys_foundation/about.htm


தமிழ்நாடு பெண்கள் தன்னார்வ அமைப்பு

சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தமிழ்நாடு பெண்கள் தன்னார்வ அமைப்பு சமுதாயத்தில்  பொருளாதார அளவில் பின்தங்கிய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பள்ளி சீருடை மற்றும் கல்விக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வருகிறது தமிழ்நாடு பெண்கள் தன்னார்வ அமைப்பு.

விவரங்களுக்கு: Womens voluntary service of Tamilnadu, old no.19, New no.6, Near presidency school, Mayor VR Ramanathan Road, Chetpet, Chennai. Phone: 044 – 28361434 , 28361825.


பிரைட் பியூச்சர் ஃபார் பிளைண்ட்

சென்னையைச் சேர்ந்த பிரைட் பியூச்சர் ஃபார் பிளைண்ட் என்ற சமூகத் தொண்டு நிறுவனம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் பார்வைத்திறன் அற்ற மாணவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளுக்கு ஆண்டு தோறும் கல்வி உதவித்தொகை அளித்து வருகிறது. இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிப்பவராக இருக்கவேண்டும் மற்றும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப் படிப்பு மற்றும் பொறியியல் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. கல்விக் கட்டணம், புத்தகச் செலவு மற்றும் சீருடைகளுக்காக இந்த உதவித்தொகை அளிக்கப்படுகிறது.

விவரங்களுக்கு : www.brightfutureforblind.com