Saturday, December 10, 2011

தூக்கமும் கண்களை தழுவட்டுமே..!

'கட்டாந்தரையில் துண்டை விரித்தேன்... கண்ணில் தூக்கம் சொக்குமே... அது அந்த காலமே!

மெத்தை விரித்தும், பன்னீர் தெளித்தும்... கண்ணில் தூக்கம் இல்லையே... இது இந்த காலமே!'

- தூக்கத்தின் ரகசியத்தைப் பளிச்சென போட்டு சொல்லும் பாடல் வரிகள்தான் இது!

கடின உடல் உழைப்பும், உயிரியல் கடிகாரத்தை மீறாத வாழ்க்கை முறையையும் கொண்டவர்களுக்கு தூக்கம் என்பது வரம்! ஆனால், கடின உடல் உழைப்பு இல்லாத அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் பலருக்கும் நிம்மதியானத் தூக்கம் என்பது கனவே. இதே பிரச்னை இவர்களுக்கு தொடர்ந்து நீடித்தால், உடலும் மனமும் சோர்ந்துவிடுவதோடு புதுப்புது நோய்களையும் வரவழைத்துவிடும். தூக்கத்தின் மூலம் உடல் ஆரோக்கியம்  பெறுவது பற்றி விரிவாய்  சொல்கிறார் 'ஸ்லீப் மெடிசின்' டாக்டர் மதனமோகன்.

''நம் வாழ்க்கையில் மூன்றில் ஒரு பகுதியைத் தூங்கியே கழிக்கிறோம். உடம்புக்குத் தேவையான ஓய்வும், புத்துணர்ச்சியும் தூக்கத்தில் மட்டும்தான் கிடைக்கிறது. ஏ.சி. அறை, சொகுசு மெத்தையில் தூக்கத்தைத் தேடினாலும், இயல்பான வாழ்க்கை முறையை பின்பற்றும்போதுதான் தூக்கமும் கண்களைத் தழுவும் என்பதே மருத்துவ உண்மை!

இரவில், ஏழு முதல் எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம். நல்ல ஆழ்ந்த தூக்கம் தூங்குபவர்கள் ஆறு மணி நேரம் தூங்கினாலே போதும். நன்றாகத் தூங்கி எழுபவர்களுக்கு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இருக்காது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

படுக்கை அறையிலும் லேப்டாப், செல்போன் சகிதம் அலுவலகம் நடத்துபவர்களும் பகலில் தூக்கம் இரவில் வேலை என்று வாழ்க்கை முறையையே தலைகீழாக மாற்றிக் கொண்டவர்களும் இன்றைய நாளில் பெருகிவிட்டார்கள். இதனால், சுறுசுறுப்பின்மை, கவனமின்மை போன்ற தொல்லைகளுக்கு ஆளாகி, நல்லத் தூக்கமின்றி தவிப்பவர்களும் ஏராளம்.

பாலில் உள்ள டிரிப்டோபன் அமினோ ஆசிட்டுக்கு (Trypto-phan amino ac)  தூக்கத்தை வரவழைக்கும் சக்தி இருப்பதால், படுக்க செல்லும் முன் மிதமான சூட்டில் ஒரு கிளாஸ் பால் அருந்தலாம். வாழைப்பழம், ஓட்ஸ், தேனிலும் இந்த அமிலம் அதிக அளவில் இருக்கிறது. டீ, காபி போன்ற பானங்கள் தூக்கத்தை விரட்டியடிக்கும். எனவே, தூங்குவதற்கு ஐந்து மணி நேரம் முன்பாகவே பானங்கள் அருந்துவதை நிறுத்திக் கொள்வது நல்லது. புகை, மது போன்ற தீயப் பழக்கங்களும் தூக்கத்துக்கு எதிரான செயல்கள்தான். வயிறுமுட்ட, சாப்பிட்டுவிட்டு தூங்குவதும் நல்லதல்ல. குறைந்தபட்சம் தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாகவே சாப்பாட்டை முடித்துக் கொள்ளவேண்டும். இரவில் தூங்குவதற்கு ஐந்து மணி நேரத்துக்கு முன்பே உடற்பயிற்சியும் செய்து முடித்துவிடுவது நல்லது!'' என்று நிம்மதியான உறக்கத்துக்கு வழிகாட்டிய டாக்டர், குறட்டை மற்றும் தூக்கமின்மை பிரச்னை குறித்து தொடர்ந்து பேசினார்.

''நிம்மதியான உறக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆனால், தூக்கமின்மையோ சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், இதய நோய், வலிப்பு... போன்ற பிரச்னைகள் வருவதற்கு வழி வகுக்கும்.

உறங்கும்போது நம் சுவாசப் பாதை தசைகள் தளர்வாகி மூச்சுப் பாதையைத் தடுப்பதால்தான் குறட்டை ஏற்படுகிறது. இதனால் சில சமயங்களில் நுரையீரலுக்குப் போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகும் அபாயமும் உண்டு! குறட்டையை சாதாரணப் பிரச்னையாகக் கருதாமல், உரிய சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம்.

படுக்கை அறை என்பது உறங்குவதற்கு மட்டுமே. வீடு, அலுவலகப் பிரச்னைகள் பற்றிப் பேசுவது, கணக்கு வழக்கு பார்ப்பது, பட்ஜெட் போடுவது இவற்றையெல்லாம் படுக்கையறையில் வைத்துக் கொண்டால், நித்திரை கெடுவதோடு மன நிம்மதியும் போய்விடும். எனவே படுக்கையில் சாய்வதற்கு முன்னரே, அன்றையப் பொழுதில் நடந்த நிகழ்வுகளையும் அடுத்த நாள் செய்யவேண்டிய வேலைகளையும் மனதுக்குள்ளேயே ஓட்டிப்பார்த்துக் கொள்ளுங்கள். இந்த எண்ண ஓட்டங்களை முழுவதுமாக ஓட்டிப் பார்த்துவிட்டு நிம்மதியாகப் படுக்கையில் சாய்வதே ஆழ்ந்த தூக்கத்துக்கு அழைத்துப் போகும்!'' என்று முடிக்கிறார் டாக்டர் மதனமோகன்.