Tuesday, September 10, 2013

'கெடுதல்' என்று கருதப்பட்ட காபியின் நல்ல மருத்துவக் குணங்கள்

ன்றாடம் உபயோகிக்கும் உணவுப் பொருட்கள் பலவற்றையும், இங்கே கடுமையாக விமர்சிக்கிறேன். ஒரு மாறுதலுக்காக, 'கெடுதல்' என்று இதுவரை கருதப்பட்ட காபி, மிக நல்ல மருத்துவக் குணங்கள் கொண்டது 

காபியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேதிப்பொருட்கள் இருக்கின்றன. அதில் முக்கிய இடம் வகிப்பது, கேஃபின். காபியின் பற்பல நல்ல குணங்களுக்கும், சில கெட்ட குணங்களுக்கும் காரணமாக அமைவது இந்த கேஃபின். இன்னொரு முக்கியமான வேதிப்பொருள், 'ஃபீனாலிக்ஸ்' என்று அழைக்கப்படும் 'ஆன்டி - ஆக்ஸிடென்ட்ஸ்' குழுமத்தைச் சேர்ந்தது. தற்போது காணப்படும் பல்வேறு வியாதிகளும் (சர்க்கரை, புற்று உட்பட) 'ஃப்ரீ ரேடிகல்ஸ்' என்ற ஆக்ஸிஜன் சிதைவுப் பொருட்களால்தான் உண்டாகின்றன. இந்த சிதைவுப் பொருட்களை உறிஞ்சி எடுத்து, உடலைத் தூய்மைப்படுத்தும் பொருட்கள்தான் 'ஆன்டி - ஆக்ஸிடன்ட்ஸ்'. இவை காபியில் அபரிமிதமாக இருப்பதாக இப்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

காபியினால் விளையும் நன்மைகளையும், கட்டுப்படுத்தப்படும்/தடுக்கப்படும் வியாதிகளையும் பட்டியலிட்டால் நீங்கள் அசந்து போவீர்கள்! அது மிகமிக நீளமானதொரு பட்டியல். இங்கே ஒருசிலவற்றை மட்டும் பார்க்கலாம்.

கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் 'நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்' என்ற பிரபல மருத்துவ இதழில், ஒரு கட்டுரை வெளியானது. தினமும் 2-3 கப் காபி குடிப்பவர்களின் மரண விகிதம் 10-15 சதவிகிதம் குறைகிறது என்ற உண்மை, 12 வருடங்களாக 4 லட்சம் பேரிடம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவில் தெரிந்தது. ஆண்களைவிட பெண்களிடம் இந்த நன்மை அதிகமாகத் தெரிந்திருக்கிறது.

உலகம் முழுவதையும், குறிப்பாக நம் நாட்டை பயமுறுத்தி வரும் சர்க்கரை நோயையும் காபி தடுக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா? காபியில் உள்ள குளோரோஜெனிக் அமிலம், டிரைகோனாலின், குவினின் மற்றும் மெக்னீசியம் போன்ற வேதிப்பொருட்கள் இன்சுலின் போலவே வேலை செய்து, சர்க்கரை உணவுப் பொருட்களைச் செரிமானம் செய்து, திசுக்களுக்குச் கொண்டு செல்கின்றன. ஆகவே, சர்க்கரை நோய் வருவதை 25 முதல் 50 சதவிகிதம் வரை குறைக்க முடியும் என்று 'சயின்ஸ் டெய்லி' இதழ் கூறுகிறது.

உற்சாகத்தைத் தூண்டி, உடல் உழைப்பை மிகுதியாக்கும் திறன் காபிக்கு உண்டு. ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களில் 75 சதவிகிதத்துக்கும் அதிகமானோரின் சிறுநீரில் கேஃபின் உள்ளது என்பதே இதற்கு சாட்சி என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

காபியிலிருக்கும் 'கேஃபிஸ்டால்' என்கிற வேதிப்பொருள் ரத்தத்தில் கொழுப்பை அதிகப்படுத்தும். அதனால் ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு அதிகமாகலாம் என்று வலுவான ஒரு கருத்து முதலில் இருந்தது. ஆனால், 2-3 கப்புக்கு மிகாமல் அருந்தினால்... கெடுதல் இல்லை - இதயத்துக்கு நல்லதுதான் என்பது தற்போதைய கருத்து.

'காபி குடிப்பதன் மூலம் மனஅழுத்த வியாதி, வெகுவாகக் குறையும். குறிப்பாக, பெண்களுக்கு. தற்கொலைகளை 50% வரை குறைக்க முடியும்' என்கிறது ஹார்வேர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சி.

இவ்வளவு நல்ல குணங்களையுடைய காபியினால் கெடுதல்கள் என்று ஏதாவது வந்தால், அதற்கு காபிக்கொட்டை தூளுடன் கலக்கப்படும் மற்ற கொட்டைகளும், காபியில் கலக்கும் சர்க்கரை, பால், பாலுக்கு மாற்றுப் பொருளான 'கிரீமர்', கிரீமரில் கலக்கப்படும் பல்வேறு கெமிக்கல்களும்தான் காரணம்.

காபியில் சுவைக்காக கலக்கப்படும் இன்னொரு பொருள், சிக்ரி. காபி 70 சதவிகிதமும், சிக்ரி 30 சதவிகிதமும் கலக்கப்படும். இதை ஒரு கலப்படப் பொருளாகவே பலரும் முதலில் நினைத்தனர். உண்மையில் ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவத்தில் மிக அற்புதமாகக் கருதப்படுகிறது சிக்ரி. மூலிகைச் செடியான காசினியின் வேரிலிருந்து கிடைக்கும் பொடிதான் இது. சுவைக்குச் சுவை, அதோடு உடலுக்கு - முக்கியமாக ஈரல், குடல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளுக்கும் நன்மை கிடைக்கும்.

காபி நன்கு கொதிக்கும்போதுதான் நன்மை பயக்கும். அப்போதுதான் பல நல்ல வேதிப்பொருட்கள் காபி கொட்டையிலிருந்து கசிந்து வெளிவரும். கொதிக்கும் காபியை ஃபில்டரில் செலுத்தும்போது கேஃபிஸ்டால் போன்ற சில கெட்ட பொருட்கள் வடிகட்டப்பட்டு விடும். எஸ்பிரஸோ காபியும், இன்ஸ்டன்ட் காபியும்கூட நல்லதுதான். ஆனாலும், கொதிக்கும் காபியை டபராவில் ஆற்றிக் குடிப்பதுதான் மிகவும் சுவையானதும், சுகமானதும், நல்லதும்கூட. அப்போதுதான் நிறைய நுரை வரும் - அதில் நல்ல வேதிப்பொருட்கள் நிறைய மிதந்து வரும்.

சத்துக்கள் மிகவும் செறிந்துள்ள உணவுகளை 'சூப்பர் உணவுகள்' (Super Foods) என்று அழைக்கிறோம். மிகவும் சிறியதான அந்தப் பட்டியலில் தற்போது காபியும் இடம்பெற்றிருக்கிறது!


அதிகபட்சம் 4 கப்!

'அல்ஸைமர்' முதியவர்களைத் தாக்கும் ஞாபக மறதி நோய், 'பார்க்கின்ஸன்' (முதியவர்களைத் தாக்கும் உடல் நடுக்க நோய்), ஈரல் நோய்கள், பித்தப்பை கற்கள், பல வகையான புற்றுநோய்கள், ஆண் மலட்டுத்தன்மை, 'கவுட்' என்கிற மூட்டுவலி உள்ளிட்ட பலவற்றுக்கும் நல்ல மருந்து இந்த காபி என்கின்றன பல்வேறு ஆராய்ச்சிகள். 2 முதல் அதிகபட்சமாக 4 கப் வரை மட்டுமே அருந்த வேண்டும் என்பது முக்கியம். கர்ப்பிணிகள், 2 கப்புக்கு மேல் குடித்தால், குறைப்பிரசவம் போன்றவை நேரலாம். எனவே, அவர்கள் டீ அருந்தலாம்.

இந்தியா வந்த கதை!

எத்தியோப்பியாதான் காபியின் பூர்விகம். காபிக் கொட்டைகளை பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வறுத்து கொதிக்க வைத்துச் சாப்பிட்டால் கூடுதல் சுவை என்பது அவர்களின் கண்டுபிடிப்பு. எத்தியோப்பியாவில் இருந்து ஏமன், எகிப்து, துருக்கி, பிரேசில் என்று இது பரவியது. 1670-ல் இன்றைய கர்நாடக மாநில பகுதியைச் சேர்ந்த பாபா பூடான் என்கிற முஸ்லிம் பெரியவர், மெக்காவுக்கு 'ஹஜ்' பயணம் சென்றார். அவர், ஏமன் நாட்டின் வழியாக திரும்பியபோது, காபியைச் சுவைக்க நேரிட்டது. நம் ஊரிலும் இது கிடைப்பதற்கு என்ன வழி என்று யோசித்தவர், பச்சைக் காபி கொட்டைகளை இடுப்பு பெல்ட்டில் மறைத்து எடுத்து வந்தார். மைசூர் அருகில் சந்திரகிரி மலையில் அவற்றை விதைத்தார். அனைத்தும் முளைத்தன. இந்தியாவில் காபி வேரூன்றியது இப்படித்தான்.