Monday, April 16, 2012

விருப்பமே வெற்றிக்கு மூல காரணமாகிறது.


டைப்புத் தெய்வமான பிரம்மதேவன் ஒருநாள் தன்னுடைய பாதத்தின் அருகில் ஒரு தானிய மணி கிடப்பதைக் கண்டார்.

'இது உருவாக யார் காரணம்?' எனக் கேட்டார்.

விவசாயி ஒருவன் முன்னால் வந்து, ''நான்தான்'' என்றான். அத்துடன், ''விதைக்காமல் எந்தப் பயிரும் விளைய முடியாது'' என்று அதற்கான காரணத்தையும் விளக்கினான்.

மறுகணம் சூரியக் கடவுள் தோன்றி, ''தானியம் உருவாக நானே காரணம். ஏனெனில், எனது ஒளி இல்லாமல் பயிர்கள் விளையாது'' என்றார்.

அடுத்து மழைக் கடவுள் தோன்றினார். ''உரிய பருவத்தில் மழை பெய்யவில்லை என்றால், அதுவும் போதுமான அளவு மழை இல்லையெனில், எந்தப் பயிரும் வளராது. ஆகவே, இந்தத் தானியம் உருவாக நான்தான் காரணம்'' என்றார்.

இறுதியாக பிரம்மதேவன் சொன்னார்... ''தானியம் உருவாவதில் நீங்கள் ஒவ்வொருவரும் முக்கியமானவர்களே!''

ஆனாலும், இவர்களில் ஒரே ஒருவர் மட்டும் மிக மிக அவசியமானவர். அவர்தான் விவசாயி. அவரே பயிர்களை விலைமதிப்புள்ளதாக உருவாக்குகிறார். அவர் இல்லையெனில், காட்டில் நெற்கதிர்கள் வெறும் களையாக வளர்ந்து, யாருக்கும் பயனின்றிப் போயிவிடும்!

வணிகத்திலும் அப்படித்தான்.

ஒரு வியாபாரத்தில் முதலீடு செய்யும்போது, அது வெற்றி பெறுமா என்று யாருக்கும் தெரியாது; வெற்றி என்பது எப்போதுமே யூகத்தால் அறியப்படுவதே!

சரி... இறுதியில் வணிகத்தின் வெற்றிக்கு யார்தான் காரணம்?

தொழில்முனைவோரா, ஊழியர்களா, வங்கிக்காரர்களா, ஜனங்களா அல்லது சந்தை நிலவரமா?

இதில் ஒருவரை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்ல இயலாது. ஆனால், நிறைவாக தொழில்முனைவோர்தான் காரணகர்த்தாவாகத் தெரிவார். அவர்தான் ஓர் எண்ணத்தை செயல் வடிவத்துக்குக் கொண்டு வருகிறார். அவருக்கு விருப்பம் இல்லாதபட்சத்தில், தனது சந்தேகங்களையெல்லாம் களைந்து தொழில் முனைய அவர் முன் வராது இருந்திருந்தால், அந்த வியாபாரம் வடிவம் பெற்றிருக்காது.

'எல்லாவற்றுக்கும் முன்னால் எது இருந்தது?' என்றொரு கேள்வியை எழுப்புகிறது ரிக் வேதம். நிறைய ஆராய்ந்த பிறகு, மூச்சுக்கும் முன்னால் தோன்றியது காமா (ஆசை அல்லது விருப்பம்) என்னும் முடிவுக்கு வருகிறது. ஆசை மட்டும் இல்லையென்றால், உருவம் இல்லாததில் இருந்து உருவம் வந்திருக்க முடியாது; 'அசத்'திலிருந்து 'சத்' வந்திருக்க முடியாது; இருளில் இருந்து ஒளிக்கு வந்திருக்க முடியாது; அவநம்பிக்கையிலிருந்து நம்பிக்கையை அடைந்திருக்க முடியாது!

இங்கே... தொழில்முனைவோரின் இருப்பிடமே ஆசையின் பிறப்பிடம். ஆக, அவரில்லாமல் வியாபாரம் உருவாகியிருக்க முடியாது.

இளைஞர் ஒருவன் தன் தந்தையிடம் கேட்டான்... ''நம் குடும்பத்தின் செழிப்புக்குக் காரணம் என்ன அப்பா?''

''நமது தொழில் என்ன என்று உனக்குத் தெரியும். நாம் சுரங்கத்திலிருந்து தோண்டி எடுக்கும் உலோகத்தை, வாடிக்கையாளர்கள் அவர்களுடைய தயாரிப்புத் தேவைக்காக வாங்குகிறார்கள் என்பதையும் நீ அறிவாய்.

என் பாட்டனார் முதலில் சாதாரண வியாபாரியாகவே இருந்தார்.

அவர் தொழில் துறையில் ஈடுபட விரும்பியபோது, அந்தத் தொழிலானது பூமியுடன் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும் என விரும்பினார். காரணம், அதுதான் பிற தொழில்களுக்கு ஆதாரமாக இருக்கும் என்று கருதினார். அவருடைய குடும்பம் அவரை ஆதரித்தது. மூலதனத்தைத் திரட்டினார். தனது மொத்த செல்வத்தையும் இந்தச் சுரங்கத் தொழிலில் முதலீடு செய்தார். அவரது அந்த விருப்பமும் துணிவுமே நாம் இன்றைக்கு இருக்கும் இந்த நிலைமைக்கும் செழிப்புக்கும் காரணம்'' என்றார் தந்தை.

ஆமாம்... வெற்றிக்குப் பலரும் துணை நின்றிருக்கலாம். ஆனால், அடிப்படையில் ஒருவரது விருப்பமே, அந்த வெற்றிக்கு மூல காரணமாகிறது.