Friday, April 1, 2016

அகத்தில் அன்பு கொள்!

ழைய, குழந்தைகளுக்கான கதை ஒண்ணு உண்டுங்க. எல்லாருக்கும் தெரிஞ்ச கதைதான். ஒரு காக்கா தாகத்தால தவிச்சு, தண்ணி தேடிப் பறந்துச்சு. வழியில, ஒரு ஜாடியில கீழே கொஞ்சூண்டு தண்ணி இருக்கிறது தெரிஞ்சுது. காக்காவோட அலகுக்கு அது எட்டலே. சுத்துமுத்தும் பாத்துது காக்கா. அங்கே சின்னச் சின்ன கூழாங்கற்கள் கிடக்கவும், ஒவ்வொண்ணா அலகால எடுத்து வந்து ஜாடிக்குள்ளே போட்டுச்சு. தண்ணி கொஞ்சம் கொஞ்சமா மேலே வரவும், திருப்தியா குடிச்சுட்டுப் பறந்துச்சு.

இது சாத்தியமாங்கிறதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். 'பெட்டிக்கு வெளியே சிந்தித்தல்' என்பதற்கு அருமையான உதாரணம் இது. இதன் தொடர்ச்சியா இன்னும் ரெண்டு மூணு கதைகள்கூட வந்துது.

ஒரு காக்கா கல்லால அந்த மண் ஜாடியின் அடியில ஓங்கித் தட்டவும், ஜாடி உடைஞ்சு, ஓட்டை வழியா தண்ணி வெளியே கசிஞ்சுது. காக்கா ரொம்ப சிரமப்படாம, அதைக் குடிச்சுட்டுப் பறந்துச்சு. இதுல, காக்காவின் சுயநலம்தான் இருக்கு; ஒரு நல்ல ஜாடியை உடைச்சது சரியில்லே; இது குழந்தைகளைக் குறுக்கு வழியில திசை திருப்பற நெகட்டிவ் அப்ரோச் கதைன்னு விமர்சனங்கள் உண்டு.

இன்னொரு காக்கா பறந்து போய், எங்கிருந்தோ ஒரு ஸ்ட்ராவைக் கொண்டு வரும், அதை ஜாடிக்குள்ளே விட்டு தண்ணியை உறிஞ்சிக் குடிக்கும்னும் கதையை டெவலப் பண்ணிச் சொல்வாங்க. ஜாடி உயரத்துக்கு எங்கேயாவது ஸ்ட்ரா இருக்குமா, அப்படியே இருந்தாலும் மனுஷங்க உறியற மாதிரி காக்காவால ஸ்ட்ராவால உறிஞ்சிக் குடிக்க முடியுமான்னெல்லாம் கேள்விகள் எழலாம். ஆனா, நாம இந்தக் கதைகள்லேர்ந்து தெரிஞ்சுக்க வேண்டியது ஒண்ணே ஒண்ணுதான்! மாற்றி யோசித்தல்! பெட்டிக்கு வெளியே சிந்தித்தல்!

https://www.youtube.com/watch?v=03ykewnc0oE இந்த யு.ஆர்.எல். லின்க்கைக் கிளிக் பண்ணிப் பாருங்க; அசந்து போவீங்க! டம்ளருக்குள்ள இருக்கிற பொருளை ஒரு கம்பியால எடுக்க முயற்சி பண்ணுற காக்கா, முடியலேன்னதும் அந்தக் கம்பியைக் கொக்கி மாதிரி வளைச்சு அந்தப் பொருளை எடுக்குது.

காக்கா என்ன, அவ்ளோ பெரிய அப்பா டக்கரா… இல்லே, யாராச்சும் கிரியேட்டிவ்வா யோசனை பண்ணி இப்படி ஒரு ஃபன்னி வீடியோவைத் தயாரிச்சுப் பதிவேத்திருக்காங்களான்னு தெரியலே.
போகட்டும், நாம மேட்டருக்கு வருவோம். 'பெட்டிக்கு வெளியே சிந்திப்பது' பத்திப் பேசிட்டிருக்கோம். அப்படிச் சிந்திக்க நாம பழகிக்கணுமா, அதனால நமக்கு ஏதாவது பிரயோசனம் உண்டானு உங்கள்ல சில பேர் நினைக்கலாம்.

ஒண்ணு ரெண்டு இல்லே… ஏராளமான பயன்கள் உண்டு. வழக்கமான ரூட்டுல சிந்திக்கும்போது, பலமுறை பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கிறதில்லே. அதுவே 'பெட்டிக்கு வெளியே' சிந்திக்கும்போது சுலபமான தீர்வுகள் கிடைப்பதுண்டு.

கடுமையான உழைப்பைக் கொட்டி, வியர்வை சிந்தி ஒரு வேலையை முடிக்கிறதைவிட, அதை சாமர்த்தியமா, அதிக சிரமமில்லாம சுலபமா முடிக் கிறதுதான் புத்திசாலித்தனம். ராப்பகலா வேலை செய்யறவனைவிட, ஜஸ்ட் லைக் தட் ஒரு காரியத்தை சுலபமா முடிச்சுக் கடாசிட்டுப் போறவனைத்தான் கம்பெனிகளும் ஸ்மார்ட் வொர்க்கர்னு கொண்டாடுது. அப்படியான ஸ்மார்ட் வொர்க்கரா ஆகுறதுக்கு இந்தப் 'பெட்டிக்கு வெளியே சிந்தித்தல்' ரொம்பவே உதவும்.

தவிர, 'பேரடைம்' பத்திப் பார்த்தோமே, ஞாபகமிருக்கா? ஒருத்தரைப் பத்தி நாம முன்கூட்டியே முடிவெடுக்கிற மனப்பான்மையைத்தான் 'பேரடைம்'னு சொல்றோம். அதனால பல மனச் சிக்கல்கள், உறவுச் சிக்கல்கள் வர்றதுண்டு. 'பெட்டிக்கு வெளியே' சிந்திக்கும்போது, இந்த 'பேரடைம்' மனப்பான்மையை நாம கழட்டி வெச்சுடறோம்.

மரத்திலிருந்து பழம் விழுந்தா, 'ஆஹா, திங்கிறதுக்கு ஒரு சுவையான பழம் கிடைச்சுது'ங்கிறதோட நம்ம சிந்தனை முடிஞ்சுடும். ஒரு பொருளைப் போட்டா, அது கீழே விழத்தான் செய்யும் என்பது நம்ம மனசுல ஆழமா பதிஞ்சிருக்கு. அதனால, அது அப்படித்தான்னு முடிவு கட்டிடறோம். அதுக்கு மேல நமக்கு யோசிக்கத் தோணறதில்லே. ஆனா, நியூட்டன் கொஞ்சம் வித்தியாசமா சிந்திச்சார். பழம் ஏன் கீழே விழணும், அப்படியே மேலே பறந்து போயிருக்கலாமேனு யோசிச்சார். புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடிச்சார்.

காவல்துறையில் ஒரு சிலர் செய்யும் தவறுகளால், காவல் துறையில் இருக்கிற அத்தனை பேருமே அதிகார துஷ்பிரயோகம் செய்யறவங்கதான்னு நினைக்கிறது; அரசு ஊழியர்கள் அத்தனை பேருமே லஞ்சம் வாங்கறவங்கதான்னு ஒரு முடிவுக்கு வர்றது; ஒரு சாதியிலேயோ, மதத்திலோயோ ஒரு சிலர் செய்யும் தவறுகளால அந்தச் சாதிக்காரர்களே, மதத்துக்காரர்களே அப்படித்தான்னு தீர்மானிக்கிறது... இதெல்லாம் 'பேரடைம்' மனப்பான்மையில் வரும்.

பாண்டவர்கள்னா அந்த அஞ்சு பேரும் நல்லவங்க, துரியோதனாதிகள்னா அவங்க 101 பேருமே தீய எண்ணம் கொண்டவங்கதான்னு நமக்குள்ளே ஒரு அழுத்தமான எண்ணம் பதிஞ்சிருக்கு இல்லியா? நாம என்னிக்காவது துரியோதனனின் நூறு சகோதரர்களில் ஒருவர் கூடவா நல்லவரா இருக்க மாட்டார்னு யோசிச்சுப் பார்த்திருக்கோமா?

துரியோதனனின் சகோதரர்கள் நூறு பேரில் இரண்டு பேர் உத்தமர்கள்; நீதி, நியாயம் பக்கம் நிற்பவர்கள். ஆனா, அவங்களையும் அயோக்கியர்கள் லிஸ்ட்டுல சேர்த்துட்டோம்.

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் சூதாட்டம் நடக்குது. தருமன் தோற்கிறான். இனி பணயம் வைக்க ஏதுமில்லை என்கிற நிலையில், மனைவி திரௌபதியைப் பணயம் வைக்குமாறு சகுனி சொல்றான். தருமனும் அப்படியே செய்து ஆட, மறுபடியும் தோத்துடறான்.  ``சூதாட்டத்தில் `இதைப் பணயம் வை'ன்னு எதிராளி சொல்லக் கூடாது என்பது விதி.ஆனால், சகுனி சொல்லித்தான் தருமன் தன் மனைவியைப் பணயமாக வைக்கிறான். அதனால் அவள் பணயப் பொருள் அல்ல. அது தர்மமும் அல்ல!'' என்று அந்தச் சபையிலேயே அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக் கண்டித்தவன் துரியோதனனின் தம்பி விகர்ணன்.

நல்லா யோசிச்சுப் பாருங்க, பீஷ்மாச்சாரியார், துரோணாச்சாரியார் போன்ற பெரிய மனிதர்கள் எல்லாம் கண்ணெதிரே நடக்குற அநியாயத்தைத் தட்டிக் கேட்கத் துப்பில்லாம, அரசன் எவ்வழி, நாமும் அவ்வழின்னு பம்மிப் பதுங்கி, வாய் மூடி மௌனமா உட்கார்ந்திருக்கிறப்போ, அத்தனை பெரிய சபையில தைரியமா எழுந்து நின்னு நியாயத்தை எடுத்துச் சொல்ல எவ்வளவு தைரியமும் மனத் துணிவும் வேணும்?

ஆனா, அதர்மம் நிறைந்த அந்தச் சபையில் அவன் பேச்சு எடுபடவில்லை. போதாக்குறைக்கு கர்ணன் வேறு இவனை கோடாலிக் காம்புன்னு கேலி செஞ்சு, திட்டினான். அப்பவும், `நீங்க அத்தனை பேரும் நரகத்துக்குதான் போவீங்க' ன்னு சொல்லிட்டு உட்கார்ந்தான் விகர்ணன்.

மகாபாரதப் போர்ல துரியோதனனின் சகோதரர்களில் எட்டு பேரை பீமன் ஒரே நேரத்துல அடிச்சுக் கொன்னான். அந்த எட்டு பேரில் விகர்ணனும் ஒருத்தன். அப்போ, `விதிவசத்தால், உத்தமனான உன்னையும் நான் கொல்ல நேர்ந்ததே'ன்னு இதயம் வெடிச்சு அழுதானாம் பீமன். அந்த அளவுக்கு உத்தமன் விகர்ணன்.

விகர்ணனைப் போலவே துரியோதனனின் தம்பியான `யுயுத்ஸு'ங்கிறவனும் நல்ல குணங்கள் கொண்டவனா இருந்தான். ஒவ்வொரு முறையும் தன் அண்ணன்மார்களின் அடாத செயல்களைக் கண்டு வெட்கித் தலைகுனிந்து நின்னவன் அவன். போர்க்களத்தில் அபிமன்யு கொல்லப்பட்ட விதம் அநியாயமானது, அதர்மமானதுன்னு சொல்லி, போர்க்களத்திலிருந்தே வெளியேறியவன் இந்த யுயுத்ஸு.

இதையெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா, நம்ம பொதுப் புத்தியில படிஞ்சிருக்கிற சில எண்ணப் படிமங்களை வெச்சு சட்டுனு எந்த முன்முடிவுக்கும் வரவேணாம்; கண், காதுகளை மட்டுமில்ல, நம்ம மனசையும் விசாலமா வெச்சுப்போம். வழக்கமான, சம்பிரதாயமான போக்குல சிந்திக்காம கொஞ்சம் வித்தியாசமா சிந்திப்போம்; மாத்தி யோசிப்போம்! ரைட்டா?

கடவுள் நம்பிக்கை

டவுள் நம்பிக்கை பத்தி ஒரு நாள் வீட்டுல பேச்சு வந்தது. 'கடவுள் இருக்கார். அவர் பார்த்துப்பார்னு நாம எந்த முயற்சியுமே செய்யாம இருக்கிறது சரியா?'ன்னு கேட்டான் காலேஜ் படிக்கிற பையன்.


'கடவுள் நேரே வந்து நமக்கு உதவ மாட்டார். தன் பிரதிநிதியா யாரையாவது அனுப்பி வைப்பார். நாம் ஆஸ்பத்திரிக்குப் போறோம். அங்கே டாக்டர் மூலமா நமக்கு உதவுவார் கடவுள். ஆஸ்பத்திரிக்குப் போறது நம்ம முயற்சி. அதுக்கான பலனை டாக்டர் மூலமா கொடுக்குறது கடவுளோட அருள்!'னு விளக்கினார் அப்பா. 

அப்பா! 'கடவுள் நம்பிக்கைக்கும் டாக்டர் கொடுக்கும் மருந்து, மாத்திரைகளுக்கும் என்ன சம்பந்தம்? மருந்துகளுக்கு அதுக்குண்டான பவர் இருக்கத்தானே செய்யும்? அது நோயைக் குணப்படுத்தாதா?' என்று கேட்டான் பையன்.

'அப்படி இல்லேப்பா! இந்த மருந்தை எடுத்துக்கிட்டா குணமாயிடும்னு நம்ம மனசு நம்பணும். அதுக்கு முதல்ல நாம தைரியமா இருக்கணும். கடவுள் நம்பிக்கை உள்ளவன் தைரியத்தைக் கைவிட மாட்டான்'னு சொன்ன அப்பா, ஒரு குட்டிக் கதை சொன்னார்.

ஒரு படகில் கணவனும் மனைவியும் ஜாலி ரைடு போனாங்க. ஒரு ஆர்வத்துல கரையை விட்டு விலகி, ரொம்ப தூரம் கடலுக்குள்ளே போயிட்டாங்க. அப்போ கடுமையா புயல் வீச, படகு தள்ளாடிச்சு.
மனைவி பயந்துபோய் 'படகை கரைக்குத் திருப்புங்க'ன்னு பதறினா. 'முடிஞ்சா திருப்பமாட்டேனா? அது என் கன்ட்ரோலை மீறிப் போயிட்டிருக்கு'ன்னு சொன்னான் கணவன். அது அவள் பயத்தை இன்னும் அதிகமாக்கிடுச்சு. ஆனா, அவன் குரல்ல கொஞ்சம்கூட பயத்துக்கான அறிகுறியே இல்லே.

'என்னங்க, நமக்கு நீச்சல் கூடத் தெரியாது. என்ன ஆகுமோன்னு, நான் பதறிக்கிட்டிருக்கேன். நீங்க கொஞ்சம்கூட பதற்றமே இல்லாம உட்கார்ந்திருக்கீங்க!' என ஆச்சரியமா கேட்டா மனைவி.
கணவன் சட்டுனு எழுந்தான். ஆப்பிள் நறுக்க வெச்சிருந்த கத்தியை எடுத்து, மனைவியின் கழுத்துல கூர் முனையை வெச்சான். அவ கொஞ்சம்கூட பயப்படலே! 'என்ன இது விளையாட்டு? உக்காருங்க. நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க'ன்னா.

'கத்தியால குத்த வந்துமா உனக்கு பயம் வரலே?'ன்னு கேட்டான் கணவன். 'எதுக்கு பயப்படணும்? நீங்க என் மேல எவ்வளவு அன்பு வெச்சிருக்கீங்கன்னு எனக்குத் தெரியாதா? நீங்க சும்மா தமாஷ் பண்றீங்கன்னு கூடவா என்னால புரிஞ்சுக்க முடியாது?' என்றாள் மனைவி.

'அதேதான்! கடவுள் என் மேல நிறைய அன்பு வெச்சிருக்கார்னு எனக்குத் தெரியும். இந்தப் புயல், கடல் சீற்றம் எல்லாம் அவரோட விளையாட்டு. மத்தபடி, எனக்கு எந்த ஆபத்தும் அவர் ஏற்படுத்த மாட்டார்னு நான் மனப்பூர்வமா நம்பறேன்! என்றான் கணவன்.

கொஞ்ச நேரத்துல பாதுகாப்புப் படகு வந்து அவங்களை மீட்டுக்கிட்டுப் போச்சு!

நமது முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் நடக்கும்போது தைரியத்தை இழக்காமலிருக்க, கடவுள் நம்பிக்கை ஒண்ணுதான் கைகண்ட மருந்துன்னு இப்போ பையனுக்கும் புரிஞ்சுது.

என்ன கேள்வி இது..?


வேலைக்கு போய் திரும்பி வந்த தன் அம்மாவிடம் 5 வயது சிறுமி கேட்டாள் .. 

நம்ம வீட்டு பீரோ சாவியை ஆயாகிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல..? 

அதைப் போய் ஆயாகிட்ட கொடுப்பாங்களா..? நம்ம வீட்டு பீரோல இருக்குற நகை, பணம் எல்லாம் ஆயாகிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல..? 

ஷ்ஷு.... அதெல்லாம் ஆயாகிட்டக் கொடுக்கக் கூடாது... உங்க ATM கார்டை ஆயாகிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல..? 

என்ன கேள்வி இது..? 

நீ சொல்றதெல்லாம் ரொம்ப முக்கியமான பொருள். அதையெல்லாம் ஆயாகிட்டக் கொடுக்கக் கூடாது... " அப்போ ஏம்மா என்ன மட்டும் ஆயாகிட்ட விட்டுட்டுப் போற..? 

அம்மாவுக்கும், அப்பாவுக்கும் நான் முக்கியமில்லையா..? " 

இம்முறை அம்மாவிடமிருந்து பதில் இல்லை. கண்களில் கண்ணீர் மட்டுமே இருந்தது...!