Tuesday, April 3, 2012

Finally Returned Back

Everyone in the wedding ceremony was watching the radiant bride as her father escorted her down the aisle to give away to groom.

 

They reached the altar and the waiting groom; the bride kissed her father and placed some thing in his hand.

 

Everyone in the room was wondering what was given to the father by bride. The father could feel the suspense in the air and all eyes were on him to divulge the secret and say something.

 

So he announced "Ladies and Gentlemen today is the luckiest day of my life." Then he raises his hands with what his daughter gave him and continued, "My daughter finally, finally returned my credit card to me."

 

The whole audience including priest started laughing but not the poor groom.

Monday, April 2, 2012

மகராசனப் பயிற்சி -உடலில் ஓட்டங்கள் சீராக இயங்கினால்தான் சிறப்பாக வாழ முடியும்!


'வேலைக்குக் கிளம்பி, பஸ்லயோ டூவீலர்லயோ ஆயிரத்தெட்டு சிக்னல்களைக் கடந்து, ஆபீசுக்குப் போய் வேலையைச் செய்யறதே பெரும்பாடா இருக்குது. அதிலேயும் பஸ் நெரிசல்ல, கூட்டத்துல நசுங்கி, புழுங்கி, கீழே இறங்கும்போது, வியர்வை ஆறா வழியும். இதுவே மிகப் பெரிய உடற்பயிற்சிதானே..?'' என்று சென்னையில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் வேடிக்கையும் ஆதங்கமுமாகக் கேட்டார்.

அவரிடம் சிரித்தபடி சொன்னேன்... ''பேருந்தில் கூட்டத்தில் பயணம் செய்கிறீர்கள். இடம் கிடைக்கவில்லை. நின்றுகொண்டு வருகிறீர்கள். அப்போது நீங்கள் ஒரு பக்கமும், உங்கள் கை பிடித்திருக்கும் இடம் ஒரு பக்கமும் என பக்கவாட்டிலோ சாய்வாகவோ நின்றிருப்பீர்கள். அப்போது அருகில் இருப்பவர் தடாலென்று உங்கள் மீது சாய்வார். அல்லது, திடீர் பிரேக் போடுகிற வேளையில், நீங்கள் எந்தப் பக்கத்திலேனும் அப்படியே சாய்வீர்கள். அந்த வேளையில், கழுத்து வேறு பக்கமாகப் பார்த்தபடி இருந்திருக்கலாம். உங்கள் இடுப்பு சட்டென்று பிடித்துக் கொள்ளலாம். மேலே பிடித்தபடி இருந்த உங்கள் கை லேசாக வேறு பக்கமாக முறுக்கித் திரும்பலாம்.

அதாவது ஒரு நிலையில், ஓர் ஒழுங்கில் இல்லாமல் உடலுறுப்புகள் இப்படி நிலை மாறுகிறபோது, அதனால் உங்களுக்கு உடலில் வலியும் அயர்ச்சியும்தான் இருக்குமே தவிர, அது எப்படி உடற்பயிற்சி செய்ததாக அமையும்?!

மழையில் நனைந்துவிட்டால், அது குளித்ததாக ஆகிவிடுமா? என்னதான் மழையில் நனைந்து, சொட்டச் சொட்ட வீட்டுக்கு வந்தாலும், ஒரு இரண்டு சொம்பு தண்ணீரை எடுத்துவிட்டுக் கொண்டால்தானே நீராடிய திருப்தி கிடைக்கும்! அப்படித்தான்... உடம்புக்கு அதிக வேலை கொடுத்திருக்கிறோம், உடம்பில் இருந்து அதிகமாக வியர்வை வழிந்தோடுகிறது என்பதாலேயே, அது உடற்பயிற்சி செய்ததற்கு ஈடாகிவிடாது.

முறைப்படி, கால்களையும் கைகளையும் உடலையும் முதுகையும் ஒழுங்குக்குக் கொண்டு வந்து, முறையாக வைத்துக்கொண்டு பயிற்சியில் ஈடுபட்டால்தான், அந்தந்த உறுப்புகளுக்குப் பலன்கள் போய்ச் சேரும்'' என்று விவரித்தேன்.

அந்த அன்பர் புரிந்துகொண்டு, பயிற்சியில் இறங்கினார். குறிப்பிட்ட காலத்துக்குள் அவரிடமும் அவரது உடலிலும் நிறையவே மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. அந்த மாற்றங்களுக்கு மிக முக்கியமான காரணம்... மனவளக்கலைப் பயிற்சிகளில் உள்ள மகராசனப் பயிற்சிதான்!

அந்தப் பயிற்சியின் அடுத்த நிலையைப் பார்ப்போமா?

இந்தப் பயிற்சியில் குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும் என்பது நினைவிருக்கிறதுதானே?! இரண்டு கைகளை, இரண்டு பக்கமும் நீட்டியபடி குப்புறப் படுத்துக் கொள்ளுங்கள். வலது காலின் பெருவிரல் மற்றும் அடுத்த விரல் ஆகியவற்றைக் கொண்டு, மற்றொரு காலின் குதிகால் பகுதியைப் பிடித்துக் கொள்ளுங்கள். ஏற்கெனவே செய்ததுபோல், வலது பக்கமாகத் திரும்புங்கள். அப்போது கால்களும் வலது பக்கமாகவே திரும்பட்டும். அடுத்து இடது பக்கமாக கழுத்தைத் திருப்பிச் செய்கிறபோது, கால்கள் அப்படியே இடது பக்கமாகத் திரும்பட்டும். அப்படிச் செய்கிறபோது, முந்தைய பயிற்சிகளின்போது கைகளை எப்படித் திருப்பி வைத்துக் கொண்டீர்களோ அதே போல் திருப்பி வையுங்கள்.

வலது, இடது என மும்மூன்று முறை இந்தப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

இதையடுத்து, கால்களை மாற்றிக்கொண்டு பயிற்சியைச் செய்ய வேண்டும். அதாவது, வலது கால் பெருவிரலைக் கொண்டு இடது காலைப் பிடித்துக்கொண்டு பயிற்சி செய்தீர்கள் அல்லவா? இப்போது, இடது காலின் பெருவிரல் மற்றும் அதன் அடுத்த விரல் ஆகியவற்றின் உதவியுடன் வலது காலின் குதிகாலைப் பிடித்துக் கொள்ளுங்கள்.

கழுத்தை இடது பக்கமாகத் திருப்பும்போது கால்கள் உட்பட மற்ற பாகங்களும் அப்படியே இடது பக்கத்தில் திரும்பட்டும். பிறகு வலது பக்கம் எனில், வலது பக்கமாகத் திருப்புங்கள். இதையும் மூன்று மூன்று முறை செய்யுங்கள்.

அடுத்து, இரண்டு பக்கமும் நீட்டியபடி வைத்திருந்த கைகளை மடக்கிக் கொள்ளுங்கள். இரண்டு கை விரல்களையும் நீட்டிக் கொண்டு, ஒன்றையன்று பார்ப்பது போலவும் தொடுவது போலவுமாக வைத்துக் கொள்ளுங்கள். விரல்களும் விரல்களும் தொட்டுக்கொண்டிருக்க... அவற்றை முகத்துக்குக் கீழே வைத்துக் கொள்ளுங்கள். அதாவது, குப்புறப்படுத்த நிலையில் இருந்து மாறாமல், உங்களின் முகத்துக்குக் கீழே இப்படி கைகளை வைத்துக் கொண்டு, தலையையும் கைகளையும் தரையை விட்டு லேசாகத் தூக்கி வைத்தபடி இருங்கள்.

இப்போது உடலின் மொத்தப் பளு முழுவதும் வயிற்றில் இருக்கும்படியாக, நெஞ்சுப் பகுதியை லேசாக தரையில் இருந்து தூக்கிக் கொள்ளுங்கள். இதையடுத்து உடலை வலது புறமாக அப்படியே திருப்புங்கள். கைகளையும் வலது புறத்தின் பக்கவாட்டுக்குக் கொண்டு செல்லுங்கள். அப்படி வலது பக்கமாக உடலைத் திருப்புகிறபோது, வலது காலின் கெண்டைக்கால், தொடைப் பகுதிக்கு மேலாக வரும்படி காலை மடக்கிக் கொள்ளுங்கள்.  

பிறகு உடலை பழையபடி நேராக வைத்துக் கொண்டு, இடது பக்கமாகத் திருப்புங்கள். அதாவது, இடது கன்னம் தரையில் அழுந்தியபடி இருக்க, வலது உள்ளங்கையை தரையில் கவிழ்ந்தபடி தலைப் பகுதிக்கு நேராக வைத்துக்கொண்டு, வலது முழங்காலை லேசாக மடக்கி, இடது காலை நன்றாகத் தளர்த்திக் கொள்ளுங்கள். இடது உள்ளங்கையை மேல்புறமாக விரித்தபடி உடலுடன் ஒட்டி, தரையில் வைத்துக் கொள்ளுங்கள். கண்களை மெள்ள மூடிய நிலையில், சிறிது ஓய்வெடுங்கள்.

ஓய்வு... ஓய்வு... ஓய்வு..!

மகராசனத்தில் உள்ள முக்கியமான இந்தப் பயிற்சிகளின் நிறைவாக, இந்த பயிற்சியைச் செய்து முடிக்க... உடம்பு மொத்தமும் தக்கையாகும். மனசு முழுவதும் பளிச்சென்றாகியிருக்கும். தேவையற்ற சதைகள், மெள்ள மெள்ளக் குறையத் துவங்கியிருக்கும்.

உங்களால் எந்த வேலையையும் செய்வதற்கு உடலில் தெம்பும், மனதில் ஒன்றிப் போகிற நிலையும் வந்துவிடும். ஒருநாளில் எத்தனை வேலைகளைச் செய்ததாலும் புத்துணர்ச்சியுடன் செய்து முடிப்பதற்கான வகையில் உடலும் உடலின் பாகங்கள் மொத்தமும் தயாராக இருந்து துணை நிற்கும்!

இந்தப் பயிற்சிகளை தினமும் செய்து வந்தால், உடல் சோர்வு என்பதே இருக்காது. கால்களில் வலுவேறியிருக்கும். ஊளைச் சதை முற்றிலுமாகக் குறைந்திருக்கும். ஆண் அல்லது பெண்ணுக்கு இருந்த மலட்டுத் தன்மை நீங்கிவிடும். குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் அமையப் பெறும்.

முதுகெலும்பில் இருந்து உடல் முழுவதும் செல்கிற நரம்பு மண்டலம் அனைத்தும் பலம் பெற்றுவிடும். தண்டு வடத்தில் வலியோ நரம்புத் தளர்ச்சியோ இருக்காது.

உடல் முழுவதும் ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் மற்றும் உயிரோட்டம் ஆகியவை சீராகப் பாயத் துவங்கும்.

ஓட்டம் ஓட்டம் என்று இருக்கிற இந்த உலக வாழ்க்கையில், உடலில் இந்த ஓட்டங்கள் அனைத்தும் சீராக இயங்கினால்தான், நாம் சிறப்பாக வாழ முடியும்!

காசு - பணம் இல்லாமல்கூட வாழ்ந்துவிடலாம். ஆனால், ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கை, நோயுடன் குடித்தனம் செய்கிற வாழ்க்கை... மிகக் கொடுமையானது. என்ன... புரிகிறதா அன்பர்களே!

Sunday, April 1, 2012

மதுவை மறப்போம்!



திருவாரூரைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது இடுப்பில் மறைத்துக்கொண்டு சென்ற பீர் பாட்டில் வெடித்து இறந்திருக்கிறான்! எத்தனை சிறிய வயதிலேயே குடிப்பழக்கம் தொடங்கிவிடுகிறது என்பதற்கான ஒரு சின்ன ஆதாரம் இது! வெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்தக் குடிநோயின் அறிகுறிகள் என்னென்ன? இந்தப் புதைகுழிக்குள் விழாமல் இருப்பது எப்படி? தப்பித்தவறி விழுந்துவிட்டவர்கள் குடியின் ஆக்டோபஸ் பிடியிலிருந்து மீண்டு வருவது எப்படி? குடிநோயிலிருந்து ஒருவர் மீண்டுவர சொந்தமும் நட்பும் எப்படி உதவ முடியும்? அடுக்கடுக்காகப் பிறக்கும் அத்தனை கேள்விகளுக்கும் வல்லுநர்களிடம் விடை உண்டு.

 ''ஆரம்பத்தில் வெறும் ஆசை, நண்பர்களின் வற்புறுத்தலுக்காக மது அருந்துவார்கள்; பின்பு அதில் தொடர்ந்து  நாட்டம் ஏற்பட்டு குடிக்க ஆரம்பிக்கிறார்கள். நாளடைவில், இன்னும் அதிக அளவில் குடித்தால்தான் போதை ஏற்படும் என்கிற நிலை உருவாகும். எங்கே, எப்படிக் குடிக்கலாம் என்று மதுவைப் பற்றிய சிந்தனைதான் அதிகமாக இருக்கும். இவையே ஆரம்பக்கட்ட நிலை.

அடுத்து, குடிப்பதைக் கட்டுப்படுத்தவோ, மதுவின் அளவைக் குறைக்கவோ முடியாது. வற்புறுத்தலின்பேரில் சிறிது காலம் நிறுத்துவதுபோல் இருந்துவிட்டு, மறுபடியும் அதிகமாகக் குடிப்பார்கள். கோபம், வெறுப்பு, சண்டை, இவையே இடைப்பட்ட காலகட்ட நிலை; தொடர்ந்து அதிகமாகக் குடிப்பது, குடிப்பதற்காகக் கடன் வாங்குவது, பொய் பேசுவது, திருடுவது, குடிக்கத் தடுப்பவர்களை அடிப்பது, காரணமே இல்லாமல் மனைவியின் நடத்தையைச் சந்தேகிப்பது என நிலைமை விபரீதமாகும். 'குடித்தால்தான் சிறிதளவேனும் செயல்பட முடியும்' என்கிற உச்ச நிலை உருவாகும். இவைதான் தீவிர இறுதிக்கட்ட நிலை'' என்கிறார் டி.டி.கே. மருத்துவமனை சீனியர் தெரபிஸ்ட் மற்றும் கவுன்சிலர் ஜாக்குலின் டேவிட்.

குடிநோயாளிகள் என்னென்ன பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள் என்பதை, டி.டி.கே. மருத்துவமனையைச் சேர்ந்த  டாக்டர் அனிதாராவ் விளக்குகிறார்.

''ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடே இல்லாமல் குடிப்பவர்களில் யாருக்கு வேண்டுமானாலும் குடிநோய் வரலாம். குடிப்பவர்களில் 10 முதல் 20 சதவிகிதத்தினர் மதுவுக்கு அடிமையாகிவிடுகின்றனர். ரத்தத்தில் 20 மில்லி கிராம் ஆல்கஹால் கலந்தாலே பார்வைத் திறன் குறையும். 30 மில்லி கிராம் என்ற அளவைத் தொட்டால் தசை தன் கட்டுப்பாட்டை இழக்கும். சிந்திப்பது, புரிந்துகொள்வது, மதிப்பிடும் தன்மை குறைவது என்று சங்கிலித் தொடர்போல் எல்லாம் பாதிக்கப்படும். உடல் அளவிலும் மன அளவிலும் குடிக்கு அடிமையாகிவிடுவதால் வாழ்க்கையில் பலவிதமான பிரச்னைகள் ஏற்பட்டாலும்கூட குடிப்பதை அவர்களால் நிறுத்த முடியாது. ஏனெனில், குடியை நிறுத்தும்போது கை நடுக்கம், தூக்கமின்மை, மனச்சோர்வு, சிந்திக்கும் திறனில் பாதிப்பு, பயம், பிரமை, நரம்புத் தளர்ச்சி, உணர்ச்சி இன்மை என்று பல்வேறு பாதிப்புகள் உருவாகும். கணையத்தில் ரணம், தோல் தொடர்பான வியாதிகள், தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்னை, ஊட்டச்சத்துக் குறைபாடு, வயிற்றுப்புண், ஜீரணசக்தி குறைதல், புற்றுநோய் அபாயம், கல்லீரல் வீக்கம், மஞ்சள்காமாலை, இதயத் துடிப்பில் மாற்றம், ரத்தக் குழாய்கள் பாதிப்பு, இதய தசைகள் பழுதடைதல் என்று உடலின் எந்த உறுப்பையும் இந்தக் குடிநோய் விட்டுவைக்காது.  குடித்தவுடன் மூளை செயல்படும் திறனும் உடனடியாகக் குறைவதோடு நிரந்தரப் பாதிப்புகளுக்கும் உள்ளாகும். மதுவின் தாக்கத்தில் கார் அல்லது பைக் ஓட்டுகிறவர் தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளாக இதுவே காரணம்'' என்கிறார் அவர்.

இவர்களை எப்படி மீட்டு எடுப்பது? என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன? வழிக்காட்டுகிறார் சென்னை,  விஸ்டம் போதை மறுவாழ்வு மையத்தின் இயக்குநர் அறிவுடை நம்பி.

''குடிநோயாளிகளுக்கு குடிப்பது மட்டும்தான் ஒரே நோக்கமாக இருக்கும். குடிப்பதற்காக ஏதாவது ஒரு காரணத்தை அவர்களே உருவாக்கிக்கொள்வார்கள். சச்சின் 100-வது சதம் அடித்தாலும் குடி, சச்சின் டக் அவுட் ஆனாலும் குடி என அவர்களுக்குத் தேவை ஏதேனும் ஒரு காரணம் மட்டுமே.  

சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட உடன், முதலில் உடல் பரிசோதனை செய்யப்படும். தொடர்ந்து மது அருந்தியதால் ஏற்கெனவே உடலில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கும்,   நன்றாகப் பசித்து சாப்பிடவும், ஆழ்ந்து தூங்குவதற்கும் வழிசெய்யும் சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படும். இரண்டாவது கட்டமாக மனரீதியாக சிகிச்சை அளிக்கப்படும். மது அருந்தாமல், மகத்தான வாழ்வு வாழும் வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளல், குடியால் ஏற்படும் பாதிப்புகளை உணர்தல், வாழ்வின் உன்னதத்தை அறிந்துகொள்ளுதல், குரூப் தெரபி, மீண்டு நல்லபடியாக வாழ்பவர்களுடனான கலந்துரையாடல், ஆலோசனை எனப் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படும்.

உள்நோயாளியாகச் சிகிச்சை முடிந்து சென்ற பிறகும், தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு ஆலோசனைகள், மருந்துகள், பிரச்னைகளைச் சமாளிக்க வழிகள் எனச் சிகிச்சை முறைகள் தொடரும். பழைய சகவாசத்தால் சிலர் மறுபடியும் குடிக்க நேரிடலாம். திரும்பவும் குடிக்க ஆரம்பித்த இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டும் குடிப்பவருக்கு குற்ற உணர்வு இருக்கும். இந்தச் சமயத்தில் குடும்பத்தினர் மறுபடியும் சிகிச்சைக்கு அழைத்து வந்துவிட்டால் அவர்களை எளிதில் மீட்டுவிடலாம்.

ஒருவர் குடிநோயில் இருந்து மீண்டு, நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று மற்றவர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், 'விடுபட வேண்டும்' என்ற உறுதியான எண்ணம் குடிப்பவருக்கும் இருக்க வேண்டும். சிகிச்சை முடிந்து சென்ற பிறகும், அதே வேலை, சூழல், சமுதாயம், குடிகார நண்பர்கள் இருக்கத்தான் செய்யும். நமக்காக எதுவும் மாறியிருக்கப்போவது இல்லை. மாற வேண்டியது குடிநோயாளிதான்'' என்றார் அறிவுடை நம்பி.  

குடிநோயிலிருந்து ஒருவரை மீட்டெடுப்பதைவிட அந்தப் புதைக்குழிக்குள் ஒருவர் விழாமல் காப்பாற்றுவது புத்திசாலித்தனம். அதனால்,  குடிபோதைபற்றிய விழிப்பு உணர்வைப் பள்ளிகள், கல்லூரிகளில் இருந்தே தொடங்க வேண்டும். அப்படி செய்தால்தான் ஓர் ஆரோக்கியமான சமூகத்தை நம்மால் கட்டமைக்க முடியும்!

 பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு...

குடிக்கும் நேரம் வரும்போது, மனதை ஒருநிலைப்படுத்தும் வகையில் தியானம், பிரார்த்தனை அல்லது மனதை மாற்றும் வகையில் மனைவி, குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தைச் செலவிடுவது, பொது இடங்களுக்குச் செல்வது, விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.

ஆரோக்கியமான பொழுதுபோக்குகளையும் நல்ல நண்பர்களின் நட்பையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

  எந்தச் சூழலில், யார் குடிக்கக் கூப்பிட்டாலும், மதுவை அருந்தக் கொடுத்தாலும் 'வேண்டாம்' என்று திடமாகக் கூற வேண்டும்.  

பெற்றோர்களின் கவனத்துக்கு...

  பார்ட்டி, ஃபங்ஷன் என்று நேரம் கழித்து வரும் மகனைக் கண்டிப்பாகக் கூர்ந்து கவனிக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். வாய் குளறுதல் மற்றும் மது வாடை வந்தால் நல்ல நிலையில் இருக்கும்போது அவருடன் பேசுங்கள்,  மதுவால் வரும் கேடுகளை எடுத்துச் சொல்லி, உங்களுடைய கனிவான கண்காணிப்பில் அவர் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

  கூடுமானவரை பிள்ளைகளின் கையில் அதிகப் பணப்புழக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

  நட்பு வட்டாரத்தினால், மகன் பாதை மாறுவது தெரிந்தால், ஒரிரு வாரங்கள், குடும்பத்துடன் வெளியூர்களுக்கு சுற்றுலா செல்வது பலன் தரும். புதிய இடமும் மாறுபட்ட சூழலும் இதற்கு உதவியாக இருக்கும். மனம் விட்டு பேசுவதும் மகத்தான பலனைத் தரும்.

  வெளியூரில் படிக்கும் மகனாக இருந்தால், அடிக்கடி அவனிடம் போனில் பேசுவது, அந்த ஊரில் இருக்கும் அக்கறையுள்ள குடும்ப நண்பர்களைப் போய் பார்க்கச் சொல்வது, 'நாங்கள் உன் அருகில்தான் இருக்கிறோம்' என்று அடிக்கடி அவருக்கு உணர்த்துவது... இவையெல்லாம் அவருக்குள் பெற்றோர் மீதான அன்பு கலந்த மரியாதையை ஏற்படுத்தும்; தவறான செயல்களுக்கு அடிமையாகாமல் இருக்க உதவும்.

 போதை ஏறினால்... பாதை மாறினால்...

 1,30,000... இந்தியாவில் கடந்த ஆண்டு விபத்துகளில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை இது. ஒரு பெரும் பூகம்பம், சுனாமி பேரிழப்புகளுக்கு இணையானது. உலகிலேயே விபத்துகளில் முதலிடம். இந்த மரணங்களில் பெரும்பாலானவற்றுக்கான காரணம்...  மதுப்பழக்கம்! (அதீத வேகத்தால் நேரும் விபத்துகள் 24 சதவிகிதம் என்றால் மதுவால் நேரும் விபத்துகள் 40 சதவிகிதத்துக்கும் அதிகமாம்).

மது 'உள்ளே' சென்றவுடன் உடலில் அப்படி என்னதான் செய்கிறது?

அப்போலோ மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவு மருத்துவர் டாக்டர். பி. பொன்முருகன் விளக்குகிறார்.

''நாம் உண்ணும் உணவு சிறுகுடலால் உட்கிரகிக்கப்பட்டு, அதன் பிறகு கல்லீரலில் போய் பல்வேறு பொருட்களாகப் பிரிந்து ரத்தத்தில் கலக்கும். இதேபோலதான் மதுவும் கல்லீரலுக்குச் சென்று அசிட்டால்டிஹைடு, அசிட்டிக் ஆசிட், கார்பாக்ஸிலிக் ஆசிட் எனும் மூன்று பொருட்களாக உடைந்து ரத்தத்தில் கலக்கிறது. இவை மூன்றும்  மூளையின் முக்கியப் பகுதிகளைப் பாதிக்கின்றன.

இதன் தொடர்ச்சியாக கிளர்ச்சியான மனநிலை, அதிக சந்தோஷம், குழப்பம், சுயநினைவிழப்பு என்று பல்வேறு கட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடக்கும். இப்படிக் குழப்பச் சூழல் ஏற்படும்போதோ, சுயநினைவை இழக்கும் தருணத்திலோதான் வண்டி ஓட்டுகையில் விபத்து நேரிடுகிறது.  

குறிப்பாக, நம்முடைய மூளையில் கட்டுப்பாடு மற்றும் உணரும் திறன் இருக்கிற கார்டெக்ஸ் பகுதி பாதிக்கப்படுவது முக்கியக் காரணம். எந்த வேகத்தில் ஓட்ட வேண்டும் என்பது ஸ்பீடா மீட்டர் பார்க்காமலேயே நமக்குத் தெரிந்திருக்கும். அதற்குக் காரணம், கார்டெக்ஸுக்குள் இருக்கும் ஓர் ஒழுங்குமுறையானது நம்மை வழிநடத்திக்கொண்டே இருப்பதுதான். ஆனால், மது அருந்திய பிறகு இந்தக் கட்டுப்பாடு போய்விடும். எல்லோரும் ஓர் ஒழுங்கில் வண்டி ஓட்டிக்கொண்டு இருக்கும்போது, மது அருந்தியவர் மட்டும் தாறுமாறாக ஓட்டுவதால், விபத்து நடந்துவிடுகிறது. மூளைக்குள் ஒரு செல் இன்னொரு செல்லுக்குத் தகவல்களை அனுப்பும் நியூரோ ட்ரான்ஸ்மீட்டர்கள்பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்த நியூரோ டிரான்ஸ்மீட்டரில் குளுட்டோமைன், காபா என்று இரண்டு நல்ல, கெட்ட தூதுவர்கள் இருக்கின்றனர். ஆல்கஹால் அருந்தாதவர்களுக்கு குளுட்டோமைன் என்ற நல்ல நியூரோ தூதுவர்கள் அதிகமாகச் செயல்படும்; காபா தூதுவர்களின் செயல்கள் குறைவாக இருக்கும். ஆல்கஹால் அருந்தியவர்களுக்கு இது தலைகீழாக மாறிவிடும். குழப்பங்களும், விபத்துகளும் நடக்க இந்தக் காபா முக்கியக் காரணம்.

மது அருந்திவிட்டு விபத்துக்குள்ளாவதோடு, விபத்துக்குப் பிறகு மருத்துவமனையில் அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதிலும் நிறைய சிரமங்கள் இருக்கின்றன. எந்தத் தகவலையுமே பெற முடியாமல் சுய நினைவற்ற ஒருவருக்கு மருத்துவர் சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கும். அதனால், முதலில் அவருக்கு என்ன பாதிப்பு, வேறு ஏதேனும் குறைபாடுகள் இருக்கின்றனவா, எப்படி விபத்துக்குள்ளானார்... போன்ற விபரங்களைக் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கத் தாமதமாகும்.

அதேபோல், மது அருந்திவிட்டு அடிபட்டவருக்குப் பக்க விளைவாக வலிப்பு போன்ற வேறு பாதிப்புகளும் வரலாம். இதோடு, அவர் குணமாவதும் பாதிக்கப்படும்!''