Monday, May 13, 2013

போதையை மாற்றிய பாதை

ங்கே, சகலரும் சகல விஷயங்களையும் பதற்றத்துடனும், தனக்குக் கிடைக்கவேண்டுமே என்கிற தவிப்புடனும் ஆசையுடனும் செயல்படுகிறோம். தவிப்பு அதிகமாகி, பதற்றம் பெருக்கெடுக்க... அங்கே செயல்பாட்டில் குழப்பமே விளைகிறது. அதைவிட முக்கியமாக, நம்மைச் செயல்படவிடாமல் தடுக்கிற தீயசக்தியாக இருப்பதில் இயலாமை என்பது பெரும்பங்கு வகிக்கிறது.

இயலாமைதான் கோபமாகவும் பொறாமையாகவும் மாறுகிறது. இயலாமையால் விளைகிற கோபம், எதிராளி மீது வெறுப்பையும், தன் மீதே ஒரு கழிவிரக்கத்தையும் தந்து அலைக்கழிக்கிறது. நம் மீது பிறர் இரக்கப்படுவதற்குப் பதிலாக நாமே நம் மீது இரக்கமும் பரிதாபமும் படுவதுபோலான நொய்மையான சிந்தனை வேறு எதுவுமில்லை.

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முருகனும் அப்படியான ஏக்கத்திலும் துக்கத்திலும் இருந்து உழன்றவர்தான். பொருளாதாரம், வசதி வாய்ப்புகள் என நிறைவான வாழ்க்கையை வாழமுடியாத நிலையே அவரை இந்த உலகில் யாருமற்ற அநாதை போல் உணரச் செய்தது. தனிமையும் வெறுமையும் அவரைக் கொண்டு போய்விட்ட இடம்... ஒயின் ஷாப்.

''வீட்டுக்குப் போகவே பிடிக்காது. போனாலும், மனைவிகிட்ட பேசுறதுன்னா எறிஞ்சு எறிஞ்சு விழுவேன். இன்னும் கொஞ்சம் நல்லா இருந்தா, குடும்பத்தை அருமையா ஓட்டலாமேன்னுதான் யோசனை ஓடிச்சு. படுத்தா தூக்கம் வராது. பசிச்சாலும் சாப்பிடப் பிடிக்காது. எல்லாத்துக்கும் குடிச்சாதான் நிம்மதி கிடைக்கும்னு நானே முடிவு பண்ணேன். அரக்கனைப் போல சாப்பிட்டு, ராட்சஷன் மாதிரி தூங்கினேன்.

இது எல்லாத்துக்கும் போதைதான் காரணம். இது அப்பத்திய சூழலுக்கு நிம்மதியா தெரிஞ்சுச்சு. ஆனா, போதைல நான் என்ன சொல்றேன், செய்யறேன்னு எனக்கே தெரியாம நான் பண்ணின அழும்புகளையும் அடி உதைகளையும் ஒருகட்டம் வரைக்கும் பொறுத்துக்கிட்டா, பூங்கொடி. ஒருநாள், 'உன்கூட என்னால குடித்தனம் பண்ணமுடியாது. நீ குடியைக் கட்டிக்கிட்டு அழு. நான் பொறந்தவீட்டுக்கே போறேன்'னு சொல்லிட்டு, குழந்தையையும் தூக்கிட்டுப் போயிட்டா.

நான் ஒரு முட்டாப்பய. இந்தக் குடிதானே என்னோட மனைவியையும் குழந்தையையும் எங்கூட இல்லாதபடி பிரிச்சுப் போட்டிருக்குன்னு நினைக்காம, அவங்களைப் பிரிஞ்ச சோகத்தை மறக்க இன்னும் இன்னும் குடிக்க ஆரம்பிச்சேன். 'பொண்டாட்டி என்னை விட்டுப் போயிட்டா. குழந்தையையும் பாக்க முடியாம வேதனையா இருக்கு. வியாபாரமும் முன்னே மாதிரி இல்லை'ன்னு நான் பிராந்தி குடிக்கிறதுக்கு ஏதேதோ காரணங்களைச் சொல்லி, போதைலேயே கிடந்தேன்.

அப்பதான் என் அப்பாவும், அப்பாவின் நண்பரும் மனவளக்கலைப் பயிற்சி பத்திச் சொன்னாங்க. உடம்பு மொத்தமும் கரும்புச் சக்கை மாதிரி ஆகி, கொஞ்சம் கூடத் தெம்பே இல்லாமத்தான் பயிற்சில கலந்துக்கிட்டேன். இன்னிக்கி, நானே ஆச்சர்யப்படுற விதமா புது ரத்தம் பாய்ஞ்ச மாதிரி, புதுசாவே பிறந்தது மாதிரி அவ்வளவு உற்சாகமாவும் தெம்பாவும் இருக்கேன்னா, அதுக்கு மனவளக்கலைப் பயிற்சிதான் காரணம்'' என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் முருகன்.

''இப்படி அவரைப் பார்க்கத்தான் அத்தனை சிரமங்களையும் தாங்கிக்கிட்டேன். அதட்டிப் பார்த்தேன். கெஞ்சினேன். அழுதேன். ஆனாலும் பயனில்லை. வேதாத்திரி மகரிஷியோட மனவளக்கலைப் பயிற்சி, இந்த அளவுக்கு என் கணவரோட மனசை மாத்தி, பாழாப் போயிருச்சுன்னு நினைச்ச எங்க வாழ்க்கையை மீட்டுக் கொடுக்கும் நினைச்சுக் கூடப் பாக்கலை. இப்ப தினமும் அந்தப் பயிற்சிகளைத் தவறாம செஞ்சுக்கிட்டு வரோம். 'இருக்கறதை வைச்சு நிம்மதியா இருப்போம் பூங்கொடி'ன்னு அவர் சொல்றார். இந்த நிதானத்தையும் பக்குவத்தையும் அவருக்குத் தந்த கடவுளுக்கும் வேதாத்திரி மகரிஷிக்கும் நன்றி'' என்று சொல்லியபடி, தன் குழந்தையை இன்னும் அணைத்துக் கொள்கிறார் பூங்கொடி. முகத்தில் சிரிப்பும் கண்களில் கண்ணீருமாக இருக்கும் அம்மாவை விநோதமாகப் பார்க்கிறான், பையன்.

அது ஆனந்தக் கண்ணீர் என்பது சிறுவனுக்கு எப்படித் தெரியும்?