Showing posts with label Tamil section. Show all posts
Showing posts with label Tamil section. Show all posts

Tuesday, June 17, 2014

கல்யாணமாகி, நிறைஞ்ச முகத்தோடதான் அமெரிக்கா போறாங்க. ஆனா......

யமையே உருவாக ஒரு கணவன்' என்ற தலைப்பில், கடந்த இதழின் 'என் டைரி' பகுதியில் ஒரு கடிதம் இடம்பிடித்திருந்தது. அது, கணவனால் தான் படும் துன்பம் பற்றி வாசகி ஒருவர் எழுதியிருந்த கடிதம். அதைப் படித்த அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு வாசகி (பெயர் மறைக்கப்பட்டுள்ளது) நம்மை போனில் தொடர்புகொண்டார். திருமணமாகி கணவனுடன் அமெரிக்கா செல்லும் நம் பெண்கள், அங்கே படும்பாடுகளை ஒவ்வொன்றாக அவர் எடுத்துவைக்க... நம் கண்கள் குளமாகின!

''இப்போவெல்லாம், 'அமெரிக்க மாப்பிள்ளைங்க, இன்ஜினீயரிங் படிச்ச பொண்ணுதான் கேட்கிறாங்க' என்ற காரணத்துக்காகவே, பெண்களை எல்லாம் பொறியியல் படிக்க வைக்கிறாங்க பெற்றோர்கள் பலர். ஆனா, படிச்ச பொண்ணை, பெரும்பாலான அமெரிக்க மாப்பிள்ளைங்க தேடிக் கல்யாணம் பண்றதுக்குக் காரணமே அங்க மனைவியை வேலைக்கு அனுப்பினா காசு கொட்டும், வீட்டு வேலைகளைப் பார்க்கவும் அடிமை கிடைச்ச மாதிரி இருக்கும்ங்கிற நினைப்புலதான். ஆக, ரெட்டை வேலைச்சுமையால வாடி, வதங்கதான் பல பொண்ணுங்களும் அமெரிக்க மாப்பிள்ளைக்கு கல்யாணமாகி இங்க வர்றாங்க.

என் கணவரோட சித்தப்பா பொண்ணையும், அமெரிக்கா மாப்பிள்ளை மோகத்துலதான் கல்யாணம் பண்ணிக் கொடுத்து இங்க அனுப்பி வெச்சாங்க. அவ எவ்வளவோ கெஞ்சியும், 'குழந்தை பிறந்தா வேலைக்குப் போக முடியாது'னு, குழந்தைப் பிறப்பை தள்ளிப் போடச் சொல்லிட்டான் கணவன். 'இப்படி மாசம் லட்சக்கணக்குல சம்பாதிக்கிற பொண்ணு வேணுங்கிறதாலதான், வரதட்சணை எல்லாம் வேண்டாம்னு அவர் என்னைக் கட்டிக்கிட்டாருனு இப்பதான் புரியுது'னு வெறுமையா புலம்புறா அந்தப் பொண்ணு.

சரி, அப்படி சம்பாதிச்சு போடுற மனைவிக்கு அதுக்கு ஈடான அன்பும், சுதந்திரமும் கொடுக்கிறாங்களானா, அதுவும் கிடையாது. எங்க அவ தன் கை மீறிப் போயிடுவாளோனு, அந்த நாட்டோட லைஃப் ஸ்டைல் எதையுமே அவளைக் கத்துக்க விடாம, தன்னைச் சார்ந்திருக்கும் அடிமையாவேதான் வெச்சிருக்க நினைக்கிறாங்க. டிரைவிங் கத்துக்க அனுமதிக்கிறதில்ல, அவங்க கையில கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு கொடுக்கிறதில்ல, நாலு பேரோட பழகும் சந்தர்ப்பங்களைத் தர்றது இல்ல. சம்பாதிச்சிக் கொடுக்கும் அடிமையாத்தான் மனைவி அவங்களுக்கு இருக்கணும்'' என்று விரக்தியோடு சொன்னவர், அடுத்து சொன்னது, பேரதிர்ச்சி ரகம்!

''என் அக்கா தோழியின் கணவர், கிட்டத்தட்ட எட்டு வருஷம் அவளை இப்படி டார்ச்சர் பண்ணிட்டு, ரெண்டு பெண் குழந்தைகளையும் பெத்த நிலையில, மனைவிக்குத் தெரியாம தனக்கு மட்டும் கிரீன் கார்டு வாங்கிட்டார். 'வா... இந்தியா போயிட்டு வரலாம்'னு ஒரு டிரிப் மாதிரி கூட்டிட்டுப் போய், மனைவியையும் பெண்களையும் அங்கயே விட்டுட்டு, அமெரிக்கா வுக்கு திரும்பி வந்துட்டார்.

இந்தியாவுல இருக்கிற கணவனைப் பத்தி, இந்தியாவுல புகார் செஞ்சாலே, வாய்தா மேல வாய்தா போகும். இதுல அமெரிக்காவுல இருக்கிற கணவன் மேல புகார் செஞ்சா, அவனை இந்தியாவுக்கு வர வைக்கிறது ரொம்ப கஷ்டம். அப்படியே கேஸ் போட்டாலும், அது சம்பந்தப்பட்ட பொண்ணுக்கு ஒரு கட்டத்துக்கு மேல தாங்க முடியாத மனச்சோர்வையும், பணக் கஷ்டத்தையும் தரும். அதுக்குப் பயந்தே ஏமாற்றுக் கணவன், சைக்கோ கணவன், டார்ச்சர் கணவன் மேலயெல்லாம் பல பெண்கள் கேஸ் போடுறதில்ல.

இந்திய நிறுவனத்துக்காக, அமெரிக்காவில் இருந்தபடி வேலை பார்க்கிற ஆண் (ஆன் சைட்) மேல, இந்தியாவில் இருக்கும் அவனோட நிறுவனத்தில் புகார் செய்தா, அவனை வேலையை விட்டு நீக்கறதுக்கு கொஞ்சமாச்சும் வாய்ப்பிருக்கு. ஆனா, இங்கிருந்தபடி இந்திய கம்பெனிக்காக 'ஆன் சைட்'ல வேலைக்குப் போயிட்டு, அப்படியே அமெரிக்க கம்பெனியில வேறு வேலைக்கு மாறிட்டா, அமெரிக்க சட்டத்துக்குள்ள அவன் வந்துடுவான். அப்புறம் சட்டம் ரொம்ப சிக்கலாயிடும்.

அதேசமயம், இங்க விவாகரத்து சுலபமா கிடைக்கும். ஆனா, அந்த இந்திய தம்பதியின் குழந்தை அமெரிக்காவுல பிறந்திருந்தா, சட்டப்படி அது அமெரிக்காவோட சொத்து. இந்தியாவுக்கு தன்னோட அம்மாவால நிரந்தரமா அழைச்சுட்டு போக முடியாது. அப்பா, அமெரிக்க அரசாங்கத்துகிட்ட புகார் (ஆம்பர் அலர்ட்) கொடுத்தா, அமெரிக்க போலீஸ் நேரா இந்தியாவுக்கே வந்து குழந்தையைத் தூக்கிட்டு போயிடுவாங்க. ஆக, தன் மனைவியை குழந்தையை வெச்சு பழிவாங்க கணவன் நினைச்சுட்டா, அது அவனுக்கு சாதகமாத்தான் இருக்கும்.

ஒருவேளை குழந்தையோட அமெரிக்காவிலேயே இருந்தாலும், 'விசிட்டேஷன் மெயின்டெனன்ஸ் ரைட்ஸ்' அப்படிங்கற சட்டப்படி அப்பாங்கற உரிமையோட அந்தக் குழந்தையைப் பார்க்க வரும் கணவன், அதுகிட்ட அதன் அம்மாவைப் பற்றி தப்பா சொல்லிக் கொடுத்து, மனசைக் கரைச்சு, அம்மாவுக்கு எதிரா திருப்பின சம்பவங்கள் நிறையவே எனக்குத் தெரியும்.

மொத்தத்துல, தன் மனைவி கஷ்டப்படணும்னு அமெரிக்க மாப்பிள்ளை நினைச்சுட்டா, அது சுலபம். அவன்கிட்ட இருந்து தப்பிக்கணும்னு நம்ம இந்தியப் பொண்ணு நினைச்சா, அது ரொம்ப கஷ்டம்.

இப்படிப்பட்ட சிக்கல்களுக்கெல்லாம் பயந்துதான், 'இவன் கூடவே குப்பை கொட்டிடலாம்'னு சகிச்சுட்டு பல பெண்கள் அவதிப்படறாங்க. இந்த எண்ணம் இப்ப இருக்கிற யங்க்ஸ்டர்ஸ்கிட்ட நிறையவே இருக்கு. ஒருவேளை, பொண்ணுக்கு அமெரிக்காவுல டிவோர்ஸ் கிடைச்சுட்டாகூட, அந்தப் பொண்ணை இந்தியாவுக்கு வரவிடாம பார்த்துக்கிறதுலதான் மும்முரமா இருக்காங்க பெத்தவங்க. காரணம்... ஊர் பேச்சு கொல்லுமேங்கற பயம்தான். அதனாலேயே 'என் பொண்ணு ரொம்ப பிஸியா இருக்கா'னு மெயின்டெயின் பண்ணுவாங்க. அப்படியே தனியா இந்தியா வந்தாலும், 'அவ ஹஸ்பண்ட் ரொம்ப பிஸி'னு சமாளிப்பாங்க.

இதையெல்லாம் சொன்னதுமே, அமெரிக்காவுல இருக்கற இந்திய மாப்பிள்ளைகள் எல்லாருமே இப்படித்தான்னு பெற்றோர்கள் பயப்படத் தேவையில்லை. ஆனா, அமெரிக்க மாப்பிள்ளை, வெளிநாட்டு வேலையில இருக்கிற மாப்பிள்ளைனு சந்தோஷமா பொண்ணைக் கொடுக்கிறதுக்கு முன்ன... அந்த சந்தோஷத்துக்கு கியாரன்டி இருக்கானு ஒரு தடவைக்கு நாலு தடவை யோசிக்க மறக்காதீங்க''

- கனத்த மனதுடன் பேசி முடித்தார் அந்த வாசகி.

சொந்தமில்லை... பந்தமில்லை!

தன் பேச்சினூடே அந்த வாசகி சொன்ன ஒரு விஷயம், கல்லையும் கரைப்பதாக இருந்தது. அது -

''இந்தியாவைச் சேர்ந்த 55 வயசான பெரும் பணக்காரப் பெண்மணியை எனக்கு நல்லா தெரியும். முப்பது வருஷத்துக்கு முன்ன கணவரோட டார்ச்சர் காரணமா பிரிஞ்சு வாழ ஆரம்பிச்சாங்க. சின்னச் சின்ன வேலைகளுக்குப் போய், நைட் ஷிப்ட் பார்த்துனு குழந்தையை ஆளாக்கினாங்க. ஆனா, சட்டரீதியான உரிமையைப் பயன்படுத்திக்கிட்டு, குழந்தையைப் பார்க்க வர்றப்ப எல்லாம் மனசை கரைச்சு அவங்ககிட்ட இருந்து குழந்தையைப் பிரிச்சுட்டார் கணவர். இன்னிக்கு பேரு, பணம் எல்லாம் இருந்தும்கூட, மகன் இல்லாம தனியா தவிச்சுட்டிருக்காங்க அந்தப் பெண்மணி.

கல்யாணமாகி, நிறைஞ்ச முகத்தோடதான் அமெரிக்கா போறாங்க. ஆனா, கணவன் - மனைவிக்கு இடையில பிரச்னை வந்துட்டா, வயசான காலத்துல ஊர் திரும்பறப்ப... சொந்தம்னு யாருமே இல்லாம, குழந்தையும்கூட இல்லாம தனிச்சு வர்ற நிலைமையிலதான் பல பெண்கள் வாழ்ந்துட்டிருக்காங்க''.

Thursday, June 12, 2014

தயாரித்த விடைகள் வாழ்க்கையில் வெற்றிகளைத் தருவதில்லை;


ன்மிகத்தை போதிப்பவர்கள், தயாரிக்கப்பட்ட விடையைத் தந்து சீடர்கள் தேர்ச்சி பெறுவதை விரும்புவதில்லை. உண்மையைத் தேடுவதுதான் முக்கியமே தவிர, தேர்வுக்குப் படிக்கும் மாணவனைப்போல், விடையைக் கண்டு பிடிப்பது முக்கியம் அல்ல. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான தேர்வு நடக்கும் பயிற்சி அது!

யூத மதத்தைச் சார்ந்த ராபி ஷ்வார்ட்ஸின் வீட்டுக் கதவை, 20 வயதுள்ள இளைஞன் ஒருவன் தட்டினான்.  


'என் பெயர் ஸீன் கோல்ட்ஸ்டீன். நான் 'தால்மத்' கற்பதற்காக உங்களிடம் வந்திருக்கிறேன்' என்றான்.  

'உனக்கு அராமிக் தெரியுமா?' என்று கேட்டார் ராபி.

'தெரியாது!'

'ஹீப்ரூ?'

'தெரியாது!'

'நீ தோராவைப் படித்திருக்கிறாயா?'

'இல்லை. ஆனாலும், கவலைப்படாதீர்கள். நான் தத்துவத்தில் பட்டம் பெற்றிருப்பதுடன், சாக்ரடீஸின் தர்க்கத்திலும் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறேன். தால்மத் பற்றிப் படித்து, என் படிப்பை நிறைவு செய்யலாம் என்று கருதுகிறேன்' என்றான் அவன்.

அதற்கு ராபி, 'நல்லது. நீ தால்மத்தைப் படிக்கவேண்டுமென்று விரும்புகிறாய். அது மிகவும் ஆழமான புத்தகம். உனது தர்க்க அறிவைப் பரிசோதிக்க விரும்புகிறேன். அதில் நீ வெற்றிபெற்றால், உனக்கு அதைச் சொல்லித் தருகிறேன்' என்றார். 

இளைஞனும் அதற்கு ஒப்புக்கொண்டான். ராபி இரண்டு விரல்களைக் காட்டி, 'இரண்டு பேர் சிம்னியிலிருந்து இறங்கி வருகிறார்கள். ஒருவரது முகம் சுத்தமாக இருக்கிறது. மற்றவருடைய முகம் அழுக்காக இருக்கிறது. இருவரில், யார் முகத்தைக் கழுவுவார்?' என்று கேட்டார்.

'இதென்ன கேள்வி? அழுக்கான முகத்தோடு இருப்பவரே கழுவுவார்!' என்றான் இளைஞன். 

'தவறு! தூய்மையான முகத்தை உடையவரே கழுவுவார்.  யோசித்துப் பார்... அழுக்கான முகத்துடன் இருப்பவர் சுத்தமான முகத்துடன் இருப்பவரைப் பார்த்து, தன் முகமும் அதேபோல் சுத்தமாக இருப்பதாகவே நினைத்துக்கொள்வார். சுத்தமாக இருப்பவரோ அழுக்கானவரின் முகத்தைப் பார்த்து, தன் முகமும் அழுக்காக இருப்பதாக நினைத்துக்கொள்வார். எனவே, சுத்தமான முகம் உடையவரே முகத்தைக் கழுவுவார்' என்றார் ராபி.
'மிகவும் சாமர்த்தியமான பதில்தான். இன்னொரு கேள்வி கேளுங்கள். இம்முறை சரியாக பதில் சொல்கிறேன்!' என்றான் இளைஞன். 

ராபி மீண்டும் இரண்டு விரல்களைக் காட்டி, ''இரண்டு பேர் சிம்னியிலிருந்து இறங்கி வருகிறார் கள். ஒருவரது முகம் சுத்தமாக இருக்கிறது. மற்றவருடையது அழுக்காக இருக்கிறது. யார் முகத்தைக் கழுவுவார்?' என்று கேட்டார். 

'மீண்டும் அதே கேள்வியா? இதற்கான பதில் ஏற்கெனவே தெரிந்ததுதானே? தூய்மையான முகத்துடன் இருப்பவர்தான் கழுவுவார்' என்றான் இளைஞன்.  
'தவறு! இருவருமே தங்கள் முகத்தைக் கழுவுவார்கள். ஒரு சின்ன லாஜிக்கை நினைத்துப் பார். அழுக்கு முகத்துடன் இருப்பவர், சுத்தமான முகத்துடன் இருப்பவரைப் பார்ப்பார். எனவே, தனது முகமும் சுத்தமாக இருப்பதாக நினைப்பார். சுத்தமாக இருப்பவரோ அழுக்கானவரின் முகத்தைப் பார்த்து, தனது முகமும் அழுக்காக இருப்பதாக நினைத்துத் தன் முகத்தைக் கழுவுவார். அதைப் பார்த்து, அழுக்கான முகம் உடையவரும் முகத்தைக் கழுவுவார்.  எனவே, இருவருமே தங்கள் முகத்தைக் கழுவுவார்கள்!'

'நான் இதை யோசித்துப் பார்க்கவில்லை.  எனது தர்க்கத்தில் இப்படியொரு தவறு இருக்கும் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.  மறுபடியும் என்னைப் பரிசோதியுங்கள்!'

ராபி மீண்டும் இரண்டு விரல்களைக் காட்டி, 'இரண்டு பேர் சிம்னியில் இருந்து இறங்கி வருகிறார்கள். ஒருவரது முகம் சுத்த மாக இருக்கிறது,

மற்றவருடையது அழுக்காக இருக்கிறது. யார் முகத்தைக் கழுவுவார்?' என்று கேட்டார்.

''இருவருமே முகத்தைக் கழுவுவார்கள்!'

'தவறு. இருவருமே கழுவமாட்டார்கள்.  அழுக்கான முகத்துடன் இருப்பவர், சுத்தமான முகம் உள்ளவரைப் பார்த்து தனது முகமும் தூய்மையாக இருக்கிறது என்று நினைத்துக் கொள்வார். சுத்தமான முகம் இருப்பவரோ மற்றவரைப் பார்த்து, தன் முகம் அழுக்காக இருப்பதாக நினைத்துக்கொள்வார். ஆனால், அழுக்கான முகம் உடையவர் தன் முகத்தைக் கழுவாததைப் பார்த்துத் தானும் கழுவமாட்டார். எனவே, இருவருமே முகத்தைக் கழுவ மாட்டார்கள்!' என்றார் ராபி.

இளைஞனான கோல்ட்ஸ்டீன் பதற்றம் அடைந்தான். 'நான் தால்மத்தைக் கற்க வேண்டும். தயவுசெய்து எனக்கு இன்னொரு தேர்வு வையுங்கள்' என்று கேட்டுக்கொண்டான்.

ராபி சிரித்துக்கொண்டே மீண்டும் இரண்டு விரல்களைக் காட்டி, 'இரண்டு பேர் சிம்னியிலிருந்து இறங்கி வருகிறார்கள்.  ஒருவரது முகம் சுத்தமாக இருக்கிறது, மற்றவருடையது அழுக்காக இருக்கிறது. யார் முகத்தைக் கழுவுவார்?' என்று கேட்டார். 

'இருவருமே கழுவமாட்டார்கள்!'

'தவறு! உங்கள் சாக்ரட்டீஸ் தர்க்கம் தால்மத்தைப் படிக்க போதுமானதாக இல்லை என்பதை உணர முடிகிறதா கோல்ட்ஸ்டீன்? இரண்டு பேர் ஒரே சிம்னியிலிருந்து இறங்கி வரும்போது, ஒருவர் மட்டும் தூய்மையான முகத்துடனும், இன்னொருவர் அழுக்கான முகத்துடனும் எப்படி இருக்க முடியும்? எனவே, கேள்வியே முட்டாள்தனமானது என்று புரியவில்லையா? முட்டாள்தனமான கேள்வி களுக்குப் பதில் சொல்ல முயன்றால், விடைகளும் முட்டாள்தனமாகத்தான் இருக்கும்' என்றார் ராபி.  
விஞ்ஞானத்தில் ஒருவர் ஓர் உண்மையைக் கண்டுபிடித்துவிட்டால், மற்றவர்கள் அதை மீண்டும் கண்டுபிடிக்கத் தேவையில்லை;   பயன்படுத்தினால் போதும். ஆனால், மெய்ஞ்ஞானத்தில் ஒவ்வொரு வருக்கும் தனித்தனிப் பாதைகள் இருக்கின்றன.  ஒருவருடையதை இன்னொருவர் ஒருபோதும் பயன்படுத்த முடியாது. சில நேரங் களில் மற்றவர்களுடைய உபதேசங்கள் பயன்படாது. எந்தச் சூழலில் எந்த உபதேசம் என்பதைப் பொறுத்தே, அது முக்கியத் துவம் பெறுகிறது. 

புத்தரிடம் நிறையப் பேர் வந்து கேள்விகள் கேட்பார்கள்.  அவர் ஒருபோதும் தன்னுடைய போதனையை எழுதச் செய்தது இல்லை. 

ஒருமுறை, காலை நேரத்தில் ஒருவர் அவரிடம் வந்து, 'கடவுள் இருக்கிறார் அல்லவா?' என்று கேட்டார்.

'இல்லை' என்றார் புத்தர்.

மதியம் ஒருவர் வந்து கேட்டார்: ''கடவுள் இல்லைதானே?'

'இருக்கிறார்' என்று பதில் சொன்னார்.

மாலையில் ஒருவர் வந்து, 'கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை!' என்றார். உடனே புத்தர், 'நீ சரியான கேள்வியைக் கேட்கிறாய்' என்றார். 

புத்தருக்கு அருகிலேயே இருந்த அவருடைய ஒன்றுவிட்ட சகோதரர், இந்தப் பதில்களால் குழம்பினார். இரவில் புத்தரிடம் அவர், ''நீங்கள் ஒரே கேள்விக்கு மூன்று விதமான பதில்களைச் சொன்னீர்களே... ஏன்?' என்று கேட்டார்.
'கேள்வி கேட்டவர்களுக்கு ஏற்றவாறு என் பதில் இருந்தது' என்றார் புத்தர்.
'ஆனால், மூன்று கேள்விகளின்போதும் நான் இருந்தேனே, அவற்றைக் கேட்டு எனக்குக் குழப்பம் அல்லவா ஏற்பட்டுவிட்டது' என்றார் அந்தச் சகோதரர்.

'காலையில் வந்தவர், 'கடவுள் இருக்கிறார்' என்று ஏற்கெனவே முடிவு செய்துகொண்டு வந்து, என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்டார். எனவே 'இல்லை' என்று பதில் சொன்னேன்.  அதனால் அவர் சுயமாகத் தேடத் தொடங்குவார்.  மதியம் வந்தவர், 'கடவுள் இல்லை' என்று முடிவுசெய்துவிட்டு, என்னிடம் வந்து கேட்டார்.  அவரிடம் 'இருக்கிறார்' என்று சொன்னால்தான் தானாகத் தேடலைத் தொடங்குவார். மூன்றாம் நபரோ, ஏற்கெனவே தேடிக் கொண்டிருக்கிறார். எனவே, அவர் பார்வை சரியானது என்று விளக்கினேன். கேள்விகளுக்கு நான் பதில் அளிப்பதில்லை.  கேள்வி கேட்பவர்களைப் பொறுத்தே பதில் அளிக்கிறேன்'' என்று  விளக்கினார் புத்தர்.

குருகுலம் என்ற கல்விமுறை இருந்தபோது, மாணவர்களின் தன்மைக்கு ஏற்ப கல்வி போதிக்கப் படும். எல்லோருக்கும் ஒரே பாடத் திட்டம் இல்லை. அவரவரது ஆர்வம், திறமை, தகுதி, சாத்தியக்கூறுகள் போன்றவற்றை குரு ஆராய்ந்து, அவற்றுக்கேற்ப கல்வி போதிப்பார். ஒரே மாதிரியான மாணவர்களை உருவாக்குவதில் அன்றைய குருமார்களுக்கு உடன்பாடு இல்லை. 

தேர்வில் சரியாகக் கணக்குப் போடத் தெரிந்தவர்கள் எல்லாம் வாழ்க்கையில் வெல்லுவார்கள் என்று சொல்ல முடியாது. இதற்கு யூத உருவகக்கதை ஒன்று உண்டு.

மோ என்கிற மாணவன் மோசமான படிப்பாளி.  அவனுடைய உறவினர் டேனியோ வகுப்பில் எல்லாவற்றிலும் முதல் மதிப்பெண். படிப்பை முடித்ததும், மோ தொட்டதெல்லாம் பொன்னானது! டேனியோ சுமாரான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தான்.

ஒருமுறை, மோ வாங்கிய லாட்டரிச் சீட்டுக்கு முதல் பரிசு கிடைத்தது. அதற்கு மேலும் டேனியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவன் மோவிடம் சென்று, 'இம்முறை நீ எப்படி வென்றாய்?' என்று கேட்டான்.
'சொல்கிறேன். நான் லாட்டரிச் சீட்டு வாங்கு வதற்கு முதல் நாள் இரவு ஒரு கனவு கண்டேன். அதில் தேவதைகள் கூட்டமாக இனிய பாடல் ஒன்றைப் பாடினர். ஏழு வரிசைகளில் எட்டு தேவதைகள். அதன் பிறகு நான் சற்றும் யோசிக்கவில்லை. அடுத்த நாள் கடைக்குச் சென்றேன். ஏழையும் எட்டையும் பெருக்கி, 63 என்கிற எண்ணில் முடிகிற பரிசுச்சீட்டை வாங்கிவிட்டேன். முதல் பரிசும் பெற்றுவிட்டேன்' என்றான் மோ.

'முட்டாளே! ஏழையும் எட்டையும் பெருக் கினால் 63 எப்படி வரும்? 56 அல்லவா வரும்?' என்றான் டேனி.

'அடடே, அப்படியா! சரி, டேனி. இன்னமும் நான் கணக்கில் வீக்தான். உனக்குத்தான் கணக் கில் எல்லாம் தெரிகிறது' என்று சிரித்தான் மோ.
சரியாகக் கணக்குப் போடுவது வாழ்க்கையில் வெற்றிகளைத் தருவதில்லை; தயாரித்த விடைகள் பயனளிப்பதில்லை. 

Monday, June 9, 2014

JOB INTERVIEW - நேர்காணல் தரும் பதற்றத்தை எப்படிக் குறைப்பது?



நர்மதா நேர்முகத் தேர்வு அறைக்குள் நுழைந்தவுடன் உட்கார்ந்து கொள்ளுமாறு சைகை காட்டப்பட, உட்கார்கிறாள்.


தேர்வாளர் 1 :
பெர்ஃப்யூம் பிரமாதமா இருக்கு. பாரிஸ்லே வாங்கியதா?

நர்மதா :
(சங்கடத்தை மறைத்தபடி வருவிக்கப்பட்ட புன்னகையுடன்) உருப்படியான கேள்விகளுக்குப் போகலாமா சார்?

தேர்வாளர் 2 :
எங்கள் கேள்வி பற்றிய உங்கள் தீர்ப்பு தேவையி ல்லைன்னு நினைக்கிறோம்.

நர்மதா : சாரி சார்.

தேர்வாளர் 2 : உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க

நர்மதா : உங்க கையிலே இருக்கிற என்னுடைய சி.வி.யிலேயே என்னைப் பற்றிய எல்லா விவரங்களும் இருக்கு சார்.

தேர்வாளர் 1 : உங்க சி.வியிலே அவ்வளவு சிறப்பாக எதுவும் இல்லையே!
நர்மதாவின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கிறது.

நர்மதா : என் ப்ராஜக்டை எங்க கல் லூரி முதல்வர் பாராட்டித் தன் கைப்பட சான்றிதழ் அளித்திருக்கிறார் சார்.

தேர்வாளர் 2 : அது ஒரு பெரிய விஷயமாக எங்களுக்குப் படவில்லை.

நர்மதா : பாட்மிண் டன் விளையாட்டில் நான் மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தைப் பெற்றிருக்கிறேன்.

தேர்வாளர் 1 : மாநில அளவில் சாதித்தவர்கள்கூட இந்த நேர்முகத் தேர்வுக்கு வந்திருக்கிறார்கள்.

நர்மதா தடுமாறுகிறாள். என்ன சொல்வதென்று அவளுக்குத் தெரியவில்லை

தேர்வாளர் 2 : (நர்மதாவின் சி.வி.யைப் பார்த்தபடி) உங்க ஃபீச்சர்ஸ் நல்லா இருக்கு.

நர்மதா: (அதிர்ச்சியுடன்) சார், இதுதான் லிமிட். (வேகமாக வெளியேறுகிறாள்)

நேர்முகத் தேர்வில் நர்மதா நடந்து கொண்ட விதம் பற்றிய ஒரு சிறு அலசல் இதோ. இது நர்மதாவுக்கு மட்டுமல்ல, நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் அனைவருக்குமே - முக்கியமாகப் பெண்களுக்கு - உதவிகரமாக இருக்கும்.
பெர்ஃப்யூம் வாசனை குறித்து ஒரு தேர்வாளர் தன் கருத்தைச் சொன்னதில் தவறு எதுவுமில்லை. ஆமாம் அல்லது இல்லை என்று இந்தக் கேள்விக்கு அவள் பதில் சொல்லியிருக்கலாம். அல்லது நகைச்சு வையாக "என் ஃப்ரண்டுதான் ஜோசியம் சொன்னா சார். இந்த பெர்ஃப்யூம் போட்டுட்டுப் போனா இன்டர்வியூவிலே நிச்சயமா செலக்ட் ஆயிடுவேன்னு" என்று கூறியிருக்கலாம்.

பெர்ஃப்யூம், பாரிஸ் என்று தேர்வாளர் கேள்வியை முதன்முதலாகக் கேட்டதில் 'நீங்கள் வெளிநாடு போயிருக்கிறீர்களா?' என்று பேச்சை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்கம் இருக்கலாம். அல்லது நர்மதாவின் டென்‌ஷனைக் குறைப்பதற்காகப் பொதுவான ஒரு கேள்வியிலிருந்து தொடங்குவோமே என்ற நல்ல நோக்கம்கூட காரணமாக இருக்கலாம். எனவே 'தேர்வாளர் கேட்டது அவசியமற்ற - அதாவது இர்ரெலவன்ட் கேள்வி' என்று நர்மதா தன் கருத்தை வெளிப்படுத்தி இருக்கக் கூடாது.

ஒருவேளை தேர்வாளரின் உடல் மொழி நர்மதாவுக்குப் பிடிக்காமல் போய், கேள்வி கேட்கும் சாக்கில் தன் சபல புத்தியை அவர் வெளிப்படுத்துகிறார் என்று நர்மதா கருதினால்கூட, சாமர்த்தியமாகத்தான் நிலைமையைச் சமாளிக்க வேண்டும். அதாவது தேர்வாளர்கள் கூறுவதை நல்லவிதமாகவும் எடுத்துக் கொள்ளலாம், மறைமுக அர்த்தமும் உண்டு என்றும் நினைக்கலாம் எனத் தோன்றினால் சந்தேகத்தின் பலனைத் தேர்வாளருக்குக் கொடுத்துவிடுவது நல்லது.

இந்த நேர்முகத் தேர்வில், குறைந்தது முதல் பாதியில் தேர்வாளர்கள் வழி தவறியதாகத் தெரியவில்லை. "உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க" என்ற கேள்வி அரதப் பழசானதுதான். ஆனால் இந்தக் கேள்விக்கு நீங்கள் அளிக்கும் பதிலில் உங்களைப் பற்றிய சிறப்பான இமேஜை உண்டாக்க முடியும். சுமார் இரு பக்கங்களில் அடங்கிவிடக்கூடய சி.வி.யில் உங்களுடைய எல்லா ப்ளஸ்களையும் எழுதிவிட முடியாது. தவிர, தாளில் காணப்படுபவை வெறும் வார்த்தைகள். அதை யே நீங்கள் சொல்லும்போது உச்சரிப்பு மற்றும் உடல் மொழி மூலம் உயிருட்டலாம். எனவே 'என்னைப் பற்றிய விவரங்கள்தான் சி.வியில் இருக்கிறதே' என்பதுபோல் நர்மதா அளித்த பதில் முட்டாள்தனமானது. ஒரு நல்ல வாய்ப்பை அவள் இழந்துவிட்டாள். அதுமட்டுமல்ல தேர்வாளர்களை ஏதோ முட்டாள்கள்போல ('கையில் விவரங்கள் இருக்கும்போது எதற்காக அவற்றைக் கேட்டு நேரத்தை வீணாக்க வேண்டும்?') சித்திரித்து அவர்களின் கோபத்தையும் சம்பாதித்துவிட்டாள்.

இதன் விளைவாகத்தான் தேர்வாளர்கள் நர்மதா அடுக்கும் சாதனைகளைக்கூடக் கொஞ்சம் அலட்சியமாக விமர்சிக்கிறார்கள். ஆனால் இந்தக் கட்டத்தில்கூட நர்மதா சுதாரித்துக் கொண்டிருக்கலாம். அவள் மாவட்ட அளவில் சிறப்பு பெற்ற விளையாட்டில் வேறு சிலர் மாநில அளவில் சிறப்புப் பெற்றிருந்தால்தான் என்ன? "இருக்கட்டும் சார். அவங்களுக்கும், எனக்கும் சேர்த்து வேலைவாய்ப்பு கொடுக்கும் அளவுக்கு உங்க நிறுவனம் பெரியதுதான்" என்று புன்னகையோடு கூறலாம்.

"பீச்சர்ஸ் என்று தேர்வாளர் கூறுவது சி.வி.யில் காணப்படும் நர்மதாவின் சில தன்மைகள் அல்லது சாதனைகளாகக்கூட இருக்கலாம். எனவே நர்மதா கொஞ்சம் பொறுமை காட்டியிருக்கலாம்.

ஓர் இளம் பெண்ணிடம் தேர்வாளர் ஒருவர் இப்படியொரு கேள்வியைக் கேட்டாராம். "தூங்கி முழித்த உடனே பார்த்தால், நீங்க கர்ப்பமாகி இருக்கீங்க. என்ன செய்வீங்க?''. இந்தக் கேள்விக்கு அந்த இளம் பெண் முகம் சிவந்து அழவில்லை. எரிச்சலில் வார்த்தைகளைக் கொட்டவில்லை. ஈவ் டீசிங் என்று புகார் கொடுக்கலாமா என்று யோசிக்கவில்லை. புன்னகையுடன் இப்படிப் பதிலளித்தாளாம். "உடனடியாக அந்த நல்ல விஷயத்தை என் கணவரிடம் பகிர்ந்து கொள்வேன்".

இந்த சமயோசிதமான (அதாவது Application of mind எனப்படும்) குணநலன் நேர்முகத் தேர்வுக்குச் செல்பவர்களுக்குப் பெரிதும் கைகொடுக்கும். இந்தக் குணம் உங்களுக்கு எந்த அளவு இருக்கிறது என்பதைச் சோதிப்பதற்காகக்கூடச்  சில எதிர்பாராத கேள்விகள் கேட்கப்படலாம்.
பயங்களிலேயே மிகப் பெரியது எதுவென உளவியல் ஆராய்ச்சி செய்தார்கள். அதாவது அநேகருக்கு எது மிகப் பெரிய பயம் என்று. மரணம் தானே என்கிறீர்களா? அதுதான் இல்லை. மரண பயத்திற்கு இரண்டாம் இடம்தான். முதலிடம் பிடித்து அனைவரையும் பயமுறுத்தும் விஷயம் எது தெரியுமா?
ஒரு கூட்டத்தைப் பார்த்துப் பேசுவதுதான்! கூட்டத்தில் உரையாற்றத் தேவை இல்லாதவருக்கு வேலைக்கான நேர்காணல் அனுபவம் தான் மிகப் பெரிய பயம் எனத் தாராளமாகச் சொல்லலாம். இதைப் பயம் என்பதைவிடப் பதற்றம் என்பதுதான் சரி. தன்னை யாரோ சோதிக்கிறார்கள் என்பதே ஒருவிதப் பதற்றத்தை உருவாக்குகிறது. இது எல்லா வயதினருக்கும் எல்லாத் தரப்பினருக்கும் பொருந்தும்.

ஆசிரியர்களுக்கு மட்டும் தேர்வு பயம் இல்லையா என்ன? தங்கள் மேற்படிப்புக்கான தேர்வு எழுதும்போது மாணவர்களைப் போலவே ஆசிரியர்களையும் கடைசி நிமிடப் படிப்பு, தேர்வு பயம் எல்லாம் தொற்றிக்கொள்கிறது. அதே போல் பெரும் பதவிகளில் இருப்பவர்களும் நேர்காணல்களில் பதற்றப்படுவதைப் பார்த்திருக்கிறேன்.

புதிய ஆட்களைச் சந்திக்கும் பயத்திலேயே புது வேலை தேடாத ஆட்களை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும். நேர்காணலில் சிலருக்குப் பிரத்யேகப் பயங்கள் உண்டு. மேலதிகாரிகள் அல்லது பெரும் புள்ளிகளைச் சந்திப்பதில் சிலருக்குப் பயம். ஆங்கிலம் பேசுபவர்களைக் கண்டால் பயம் சிலருக்கு. பெண்கள் நேர்காணலில் கேள்வி கேட்டால் பதற்றத்தில் ஆண்களையே பார்த்துப் பேசும் ஆண்களும் இருக்கிறார்கள். (கல்யாணமானவர்கள் பெண்கள் கேள்விகளுக்குப் பெரிதும் பழகியிருப்பார்கள் என்பது வேறு விஷயம்!)

பயத்தை மறைக்கச் செய்யும் அனைத்தும் பயத்தைத் தெளிவாகக் காட்டிக் கொடுக்கும் என்பதுதான் விந்தை. என் பால்ய கால நண்பன் ஒருவன் எந்த பிரசண்டேஷன், இண்டர்வியூ என்றாலும் ஒரு அரைக்கால் (க்வாட்டரில் பாதி...ஹி ஹி!) போட்டுக்கொண்டு அதை மறக்க பீடா, பழம், சூட மிட்டாய் என சுகந்தமாய் வருவான். அவன் கேனச் சிரிப்பே காட்டிக் கொடுத்துவிடும். தைரியம் வருவதற்காக உட்கொண்ட வஸ்து தெரிந்த விஷயத்தையும் மறக்கடித்துவிடும். பின்னர் சொதப்பல்தான்.

பதற்றம் சிலரைப் பேச விடாது. சிலரை அதிகம் பேசவைக்கும். சிலரை விநோதமாக நடந்துகொள்ள வைக்கும். வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கும். பசிக்காது. சிறு நீர் வருவது போலத் தோன்றும். வராது. எதற்கு என்று தெரியாமல் மனம் கலவரமாய் இருக்கும். மொத்தத்தில் நம் இயல்பை மாற்றிக் காண்பிக்கும்.

சில இண்டர்வியூக்கள் 'ஸ்ட்ரெஸ் இண்டெர்வ்யூ' வகையைச் சேர்ந்தவை. அதாவது நீங்கள் பதற்றம் அடைகிறீர்களா? அல்லது எந்த அளவு பதற்றம் தாங்குவீர்கள் எனப் பார்ப்பதற்கே கேள்விகள் கேட்பார்கள். உங்களைக் கோபப்படுத்தும் கேள்விகளைக் கூடக் கேட்பார்கள். இது மன வலிமையைச் சோதிக்கும் முயற்சி. சில நிர்வாகப் பள்ளிகளிலும் ராணுவத் தேர்விலும் இதை வாடிக்கையாகச் செய்வார்கள்.

சில பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஒரு கருத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள்: நல்லா தயார் செய்தா இந்தப் பயமெல்லாம் வராது. தெரியலைன்னாதான் பயம் வரும்.

இது முற்றிலும் தவறு. பயத்திற்கும் பாடம் அறிவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நன்கு படித்துப் பதில் தெரிந்த பலர் பதற்றத்தில் தவறாக விடை சொல்வார்கள். அவர்களுக்கு மறந்துபோவதும் இயற்கை. இது மன இயல்பு சார்ந்த விஷயம்.

ஒரு நேர்காணல் முழுவதும் ஒரு கேள்விக்குக்கூடப் பதில் சொல்லாதவர்கள் இருக்கிறார்கள். இவர்களை ஒன்றும் தெரியாதவர்கள் என்று எண்ணுவது பேதமை. அவர்களிடமிருந்து பதில் வரவழைக்கச் செய்வது ஒரு சவால். ஒரு நேர்காணல் கலை. அவ்வளவு தான்.

சரி, நேர்காணலில் பதற்றம் வந்தால் என்ன செய்யலாம்? 'மனதை நிதானமாக வைத்துக் கொள்ளுங்கள். நீண்ட மூச்சு விடுங்கள். புன்னகை செய்யுங்கள். தெரிந்ததைப் பேசுங்கள்' போன்ற புராதன அறிவுரைகள் வேலை செய்யாது.
அந்த நிகழ்ச்சிக்குச் செல்லும்போது செய்துகொள்ள இது முக அலங்காரம் அல்ல. இது அக அலங்காரம். அதனால் நிறைய காலம் பிடிக்கும்.
பதற்றம், பயம், துக்கம், கோபம் போன்ற எதுவும் உங்கள் தினசரி வாழ்க்கையைப் பாதித்தால் உளவியல் உதவி அவசியம். நேர்காணலில் மட்டும் பதற்றப்படும் ஆளா அல்லது பொதுவாகப் பதற்றமான ஆளுமை கொண்டவரா என்பதை முதலில் அலச வேண்டும். State Anxiety சூழ்நிலை சார்ந்தது. Trait Anxiety ஆளுமை சார்ந்தது. இதற்கேற்பத்தான் இதைக் கையாள வேண்டும்.

இன்று பலர் பதற்றத்திற்கு உளவியல் சோதனை, சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள். யோகா தொடர்ந்து செய்தால் ஒட்டுமொத்த பதற்றம் குறையும். ஆனால் ஸ்டேட் ஆங்க்சைடிக்கு உளவியல் உதவி நல்லது. நம் வேலையை, வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கும் ஒரு பிரச்சினைக்கு ஆலோசனை எடுத்துக் கொள்வது தவறு இல்லையே? இது மேற்கத்தைய நாடுகளில் கல்விக் கூடங்களிலேயே நடக்கிறது!

தன் இருப்பு பற்றிய கவலை வருகையில் பயமும் பதற்றமும் வருகின்றன. தன்னை ஒருவர் கூர்ந்து நோக்குவதே ஓர் அசௌகரிய உணர்வுதான். பிறர் உற்று நோக்கினால் செய்யும் வேலையைக்கூடச் சரியாகச் செய்ய முடியாது.
சரி, எப்போதும் நேர்காணல் தரும் பதற்றத்தை எப்படிக் குறைப்பது? நிறைய நேர்காணல்கள் எடுத்துக் கொள்வதுதான் சிறந்த வழி. பதற்றத்தைத் தவிர்க்கும்போது ஏற்படும் நிவாரணம் அடுத்த முறை பதற்றத்தின் வீரியத்தை அதிகரிக்கும். பதற்றத்தைத் தொடர்ந்து எதிர்கொள்ளும்போது அது பலம் இழக்கும்.

எந்த வயதானால் என்ன? உங்களுக்குத் தகுந்த வேலைகளுக்கு விண்ணப்பியுங்கள். சில இண்டெர்வியூக்களுக்குச் செல்லுங்கள். பதற்றமும் குறையும். சந்தை நிலவரமும் தெரியும். வேலைச் சந்தையில் உங்கள் மதிப்பும் தெரியும்!



Monday, June 2, 2014

பழியைச் சுமத்துபவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்


பிட்டுக்கு மண் சுமந்த கதையும் ஒரு மாறுபட்ட சிந்தனையை அடிப்படையாகக் கொண்டதுதான். பரியை நரியாக மாற்றிய சிவபெருமான், அரிமர்த்த பாண்டியன், மாணிக்கவாசகருக்குத் தண்டனை தந்தது குறித்த உண்மை நிலையை உணர்த்த, வைகையாற்றில் வெள்ளம் வரச்செய்கிறார். வெள்ளமோ கரையை உடைத்துக்கொண்டு ஓடுகிறது. மீண்டும் வெள்ளம் வராமல் இருக்க, கரையை உயர்த்தும் பணியில் மக்களை மன்னன் ஈடுபடச் செய்கிறான். பிட்டு தயாரிக்கும் பெண்மணி, தனக்கு வாரிசு இல்லாததால் யாரை தன் சார்பாக வேலைக்கு அனுப்புவது என்று குழம்பி நிற்கும்போது, சிவபெருமான் இளைஞனாக வருகிறார்.

அவர் கூலியாக பிட்டைச் சாப்பிட்டுவிட்டு, மண் சுமப்பதாக ஒத்துக்கொள்கிறார். வேலையைப் பார்வையிட மன்னனே வருகிறான். இளைஞன் வடிவில் வந்த சிவபெருமானோ தாறுமாறாகப் பணியைச் செய்ய, கோபமடைந்த பாண்டிய மன்னன், அவர் முதுகில் பிரம்பால் ஓர் அடி வைக்கிறான். அந்த அடி மன்னன் உட்பட அனைவரின் முதுகிலும் விழுகிறது.   மன்னன் உண்மையை அறிந்தான்.


இது வெறும் பொழுதுபோக்குக் கதையல்ல. அரிய உண்மையை வித்தியாசமாக நமக்கு உணர்த்துகிற கதை. நாம் யார் மீது அடித்தாலும், அந்த அடி நம்மையே வந்து அடையும்; நாம் யாருக்கு எந்தத் தீங்கு செய்தாலும், அது நம்மையே வந்து தாக்கும் என்பதையே மிக நேர்த்தியாக இந்தத் திருவிளையாடல் கதை நமக்குத் தெரிவிக்கிறது.
அடுத்தவர்கள்மீது கூச்சப்படாமல் பழியைச் சுமத்துபவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்பதுதான் ஆன்மிகவாதிகளும் புராணங்களும் நமக்குத் தொடர்ந்து உணர்த்துகிற பாடங்கள்!

நீங்கள் மதுப் பழக்கத்திற்கு அடிமையா, இல்லையா ???



நீங்கள் மதுப் பழக்கத்திற்கு அடிமையா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ள, கீழ்க்கண்ட கேள்விகளுக்கு உண்மையான பதில் அளியுங்கள்:

1. உங்களது குடிப்பழக்கத்தால்உங்களது குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியிழந்து விட்டதா
2. குடிப்பதால்உங்கள் பணி நேரம் குறைந்து விட்டதா?
3.உங்களது குடிப்பழக்கம், உங்கள் பெயர், புகழுக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதா?
4.குடிப் பழக்கத்தால், பணக் கஷ்டம் ஏற்பட்டுள்ளனவா?
5.மோசமான சுற்றுச் சூழலில், உங்களைவிட தகுதி குறைந்த நபர்களோடு சேர்ந்து குடிக்குமளவிற்கு மாறி விட்டீர்களா?
6.நீங்கள் குடிப்பதால், குடும்ப நலனை கவனிக்க, பராமரிக்க முடியவில்லையா?
7.கவலைகள், பிரச்னைகளிலிருந்து தப்பிப்பதற்காக குடிக்கிறீர்களா?
8.தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குடிக்க வேண்டும் என்ற தூண்டுதல் ஏற்படுகிறதா?
9.குடிப்பழக்கம் காரணமாக, தூங்குவதில் சிரமம் உள்ளதா?
10. குடிப்பழக்கத்தால் உங்கள் திறமைகளும், லட்சியங்களும், ஆர்வங்களும் குறைந்து வருகிறதா?
இந்த, 10 கேள்விகளில், ஒரேயொரு கேள்விக்கு மட்டும், 'ஆம்' என்று, நீங்கள் பதிலளித்தால், நீங்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கலாம் அல்லது மிக விரைவில் அடிமையாகி விடுவீர்கள்.
இரண்டு கேள்விக்கு, 'ஆம்' என்ற பதிலளித்தால், நீங்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமை.
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு, 'ஆம்' என்று பதிலளித்தால், எவ்வித சந்தேகமும் இன்றி, நிச்சயமாக நீங்கள் குடிப்பழக்க அடிமை தான்.

இந்த, 10 கேள்விகளில் எந்தக் கேள்வியும் உங்களுக்குப் பொருந்தவில்லை எனில், நீங்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையில்லை; ஆனால், அடிமையாகி விடாமல், உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள்.

Saturday, May 24, 2014

அந்த குழந்தையின் சிரிப்பொலி.

நல்ல மழை.வானம் தூறிக்கொண்டே இருந்தது. மின்சாரம் வேறு இல்லை. ஒரே இருட்டாகவும் இருந்தது.கைத்தொலைபேசியில் மணியை பார்த்தான் சுப்பையா. அது எட்டை காட்டியது.

'காலையிலிருந்து ஒரு போன் வரல. இதுக்கு வேற அப்பப்போ காசு போட வேண்டியிருக்கு. மணிபாக்கத்தான் இது லாயக்கு, இனிமேல் யாரு நம்ம கடைக்கு வரப்போகிறார்கள்' என்று நினைத்தபடி கடையை அடைக்கும் முயற்சியில் இறங்கினான்.

சுப்பையா ஒரு நடுத்தரவாதி. ஊர் ஒதுக்குப்புறத்தில் ஒரு பெட்டிக்கடை வைத்துக்கொண்டு பிழைப்பை நடத்துபவன். அவன் கடையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில்தான் அவன் வீடு. மனைவி, பத்தாவது படிக்கும் ஒரு மகன் என்று குடும்பத்தை வைத்திருப்பவன்.

மாலை வீட்டிலிருந்து தேநீர் வந்த தூக்கு வாளியைஎடுத்து ஒரு துணிப்பைக்குள் வைத்தவன், மழையில் நனைந்து விடுமோ என்ற கவலையில் தன் அலைபேசியையும் ஒரு பேப்பரில் சுற்றி கவனமாக அந்த துணிப்பைக்குள் வைத்தான். வெளியில் வந்து தன் சைக்கிளை நகட்டினான். சைக்கிளில் காற்று இறங்கி போயிருந்தது.

'சே....இந்த நேரத்தில் இப்படி பழிவாங்கிவிட்டதே' என்றவாறு சைக்கிளை கடையிலேயே வைத்து பூட்டிவிட்டு நடக்கலானான். இருட்டைப் பார்த்ததும் ஒருவித பயம் அவனுள் தொற்றியது. இன்று மதியம் இவன் பார்த்த இறந்து போன ஒரு குழந்தையின் சவ ஊர்வலம் வேறு நினைவிற்கு வந்து அவனை மேலும் பீதிக்குள்ளாக்கியது.

நடையை இன்னும் வேகமாக்கினான். திடீர் என்று ஒரு குழந்தையின் சிரிப்பொலி மிக அருகில் கேட்டது. ஒரு வித கலக்கத்துடன் 'மதியம் பார்த்த சவ ஊர்வலத்தையே நினைத்துக்கொண்டு நடந்ததால் பிரம்மையாக இருக்கும்' என்று நினைத்தபடி சிறிது நேரம் நின்றான்.

இப்போது சிரிப்பொலியை காணோம். மறுபடியும் நடக்கலானான். சிறிது தூரம் சென்றிருப்பான். மீண்டும் அதே குழந்தையின் சிரிப்பு சத்தம். இவன் பயத்தில் ஓட ஆரம்பித்தான். கூடவே வந்தது அந்த சத்தமும். ஒரு வழியாக வீட்டை அடைந்தான்.

"என்னங்க.... சீக்கிரமே கடையை அடச்சுட்டீங்க போல"

"மழை வேற... கரண்டும் இல்லை ஒரு மண்ணும் இல்லை. அதான் நேரத்தோட அடச்சுட்டேன்"

"அதாங்க.... வரும்போது மெழுகுவர்த்தி வாங்கி வரச் சொல்லலாம்ன்னு உங்களுக்கு போன் அடிச்சேன். எடுக்கவே இல்லை. ஏன் போன கடையிலேயே வச்சுட்டு வந்துட்டீங்களா?"

"இல்லையே நனைஞ்சாலும் நனைஞ்சுரும்ன்னு பையில்தான் இருக்கு. நீ போன் அடிக்கவே இல்லையே"

"நான் அடிச்சேன் உங்களுக்கு விளங்கல போல...."

"இல்ல... நீ போன் போடவே இல்ல... நான் பக்கத்துலதான வச்சுருந்தேன்."

"இல்லைங்க காலையில நம்ம பய உங்க போன எடுத்து என்னவோ பண்ணிட்டு இருந்தான். அதான் ஏதும் ஆச்சோ... எதுக்கும்... நீங்க போன எடுத்து பாருங்க தெரியும்."

"அப்பா நான் ஒண்ணும் பண்ணல. ரிங் டோன் தான் மாத்திவச்சேன்" என்றான் அவன் மகன்.

"எதுக்கும் இப்ப ஒரு தடவ போன் போடு. பாத்திடலாம்."

போன் அடித்தாள். அங்கே ரிங் டோனாக வந்தது அந்த குழந்தையின் சிரிப்பொலி.

இது கல்யாணப் பூங்கா

வரன் பார்க்க வேண்டும் என்றால் தரகரைப் பார்க்கப் போவோம் அல்லது ஏதாவது மேட்ரிமோனியல் சைட்டைத் தட்டுவோம். ஆனால் சீனாவில் உள்ள ஷாங்காய் நகரத்திலோ பூங்காவுக்குப் போகிறார்கள். ''அங்க ஏம்வே போறாய்ங்க?''னு கேட்கிறீங்களா?

 

2004-ம் ஆண்டு. காதலில் தோல்வியுற்று மனம் வெறுத்துப்போனவள் தன் படத்துடன் தன்னைப் பற்றிய குறிப்புகளும் எழுதி சீனாவின் ஷாங்காய்  நகரத்தில் உள்ள மக்கள் பூங்கா ஒன்றில் ஒட்டிவிட்டுப் போனாள். அதை படித்து நிறையப் பேர் அவளை போனில் அழைக்க, தனக்குப் பிடித்தமான ஓர் ஆணைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்துகொண்டாள். இந்தச் செய்தி நாளிதழ்களில் வெளிவர, பல பெண்களும் ஆண்களும் இங்கு தங்களின் குறிப்புகளை எழுதி லேமினேட் செய்து மாட்டிவிட்டனர். இன்று உலகிலேயே மிகப்பெரிய திருமண சந்தையாக ஷாங்காய் பூங்கா மாறிவிட்டது.


'1980-களில் மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்த ஒரு குடும்பத்துக்கு ஒரு வாரிசுதான் என்று சீன அரசு அறிவித்தது. அதன் பின் பிறந்த குழந்தைகள் வீட்டில் தனித்தே வாழ்ந்து பழகியதால், எதிர் பாலினத்தாரிடம் எப்படிப் பழகுவதென்பதே தெரிவது இல்லை. எனவே இங்கு பிடித்தமான குறிப்புகளைப் பார்த்து அவர்களே ஒருவரை ஒருவர் பேசி முடிவு செய்கிறார்கள்'' என்கிறார் தன் மகனுக்காக பூங்காவுக்குப் பெண் பார்க்கவந்த சாங் லீ.


அதே ஷாங்காய் மக்கள் பூங்காவில் அரசின் அனுமதியோடு லீ என்ற ஒரு பெண் தகவல் நிலையம் நடத்திவருகிறார். அதாவது ஆயிரக்கணக்கில் குறிப்புகள் ஒட்டப்பட்டிருப்பதால், தேர்ந்தெடுக்க மிகுந்த நேரமாவதால் இங்கு பதிவு செய்தால் தகவல்களை மின்னஞ்சலிலேயே அனுப்பிவிடுகிறாராம். ஆண்களுக்கு இலவசமாம். பெண்களுக்கு 500 டாலர் கட்டணம் என்று வசூலிக்கிறார்.


 

''ஆண்கள் பொறுமையாக ஆயிரக்கணக்கான குறிப்புகளைப் படித்துத் தேர்ந்தெடுக்கிறார்கள். பெண்கள் அவசரப்படுவதால் இந்தக் கட்டணம்'' என்று சிரிக்கிறார். அதைவிட வேறொன்றும் உள்ளது. சீனாவின் மக்கள் தொகை அடிப்படையில் 100 ஆண்களுக்கு 134 பெண்கள் என்று இருக்கின்றதாம். எனவே சீனாவில் ஆண்களுக்கு செம கிராக்கி!

Friday, May 23, 2014

கருவறையில் பாடம் கேட்கும் குழந்தை

தாயைப் போலப் பிள்ளை நூலைப் போல சேலை என ஒரு பழமொழி உள்ளது. பொதுவாக ஒரு குழந்தையின் குணங்கள் தாய், தகப்பனை ஒட்டியே அமையும் என்பது நமது நம்பிக்கை. தாயின் குணங்களும் தந்தையின் குணங்களும் அவர்களுடைய மூதாதையரின் குணங்களும் மரபணு வழியாகக் குழந்தைக்குக் கடத்தப்படுகின்றன என்று மரபியல் சொல்கிறது.

நமது குணாதிசயங்கள் அனைத்தும் மரபணுவின் டிஎன்ஏவில் உள்ள குறிப்புகளின் பிரகாரமே அமையும் என்றும் அந்தக் குறிப்புகள் பெற்றோரின் மரபணுவிலிருந்து கடத்தப்படும் என்றும் கருதப்படுகிறது. ஆனால் தற்போது சிங்கப்பூரில் உள்ள தேசிய பல்கலைக்கழகப் பேராசிரியர் கெயித் காட்ப்ரே இந்த நம்பிக்கையின் ஆணிவேரை அசைத்துள்ளார்.

கருவிலுள்ள குழந்தையின் மரபணு, டிஎன்ஏ தொடர்பான ஆய்வொன்றை அவர் மேற்கொண்டுள்ளார். புற உலகம் சார்ந்து டிஎன்ஏவில் பதிவாகும் குறிப்புகளை ஆராய்ச்சி செய்துள்ளார். சீனர்கள் 131 பேர், மலேசியர்கள் 72 பேர், இந்தியர்கள் 34 பேர் ஆகியோர் இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கருவில் உள்ள குழந்தையின் மரபணுவில் ஏற்படும் மாற்றங்களுக்குத் தாயின் வாழ்வியல் நடவடிக்கைகள் - உண்பது, குடிப்பது, உரையாடுவது உள்ளிட்டவை - முக்கியக் காரணங்களாக உள்ளன என்று அந்த ஆய்வு முடிவில் அவர் கண்டறிந்துள்ளார். இதைக் கேட்கும்போது அபிமன்யுவின் கதைதான் நமக்கு நினைவில் வருகிறது. கிருஷ்ணனின் தங்கை சுபத்திரைக்கும் அர்ச்சுனனுக்கும் பிறந்த மகன் அபிமன்யு.

இவன் வயிற்றிலிருக்கும்போதே அவனுக்குக் கதைகளாகச் சொன்னாள் சுபத்திரை என்று மகாபாரதம் சொல்கிறது. இதை வெறும் புராணம் என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது என்பது போல் இந்த ஆய்வு அமைந்துள்ளது.

ஒரு வீணை இருக்கிறது. அதை யாராவது மீட்டும்போது அதிலிருந்து இனிமையான இசை வெளிப்படுகிறது. கருப்பையிலுள்ள குழந்தையின் மரபணுக்களை ஒரு வீணை போல நினைத்துக்கொள்ளுங்கள். அந்த மரபணு வெளி உலகில் நடக்கும் நடவடிக்கைகள் காரணமாக மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. இந்த மாற்றங்கள் குழந்தையின் குணாதிசயங்களை வடிவமைக்கின்றன, அதாவது ஒரு வீணையை மீட்டி மெல்லிசையைத் தவழவிடுவது போல.

இசைக்குத் தொடர்பே இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த குழந்தையின் தாய், கருவில் குழந்தை உள்ளபோது ஏதாவது ஒரு இசைக் கச்சேரிக்குச் செல்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது குழந்தையின் டிஎன்ஏவில் இசை தொடர்பான பதிவுகள் உருவாகின்றன. இதனால் எதிர்காலத்தில் அந்தக் குழந்தை இசைத் துறைக்குள் நுழையக்கூடும்.

தாய், தந்தை மரபணு காரணமாகக் குழந்தையின் மரபணுவில் உருவாகும் குணாதிசயங்கள் வெறும் 25 சதவீத அளவிலேயே அமைகிறது என்றும் ஏனைய 75 சதவீதத்தைக் கர்ப்ப காலத்திலான தாயின் நடவடிக்கைகளே நிர்ணயிக்கின்றன என்றும் இந்தப் புதிய ஆய்வு மூலம் பேராசிரியர் கெயித் வலியுறுத்துகிறார்.

உடல் பருமன், இதய நோய் போன்றவை மரபணு வழியாகக் கருவிலுள்ள குழந்தைக்குக் கடத்தப்பட்டு வந்திருக்கலாம் எனும் நம்பிக்கையே இதுவரை நிலவிவந்தது. ஆனால் இத்தகைய மரபணு ரீதியான மாற்றங்கள் குழந்தையின் குணாதிசயங்களில் குறைந்த அளவிலேயே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன எனப் பேராசிரியர் கெயித் தெரிவிக்கிறார்.

எதிர்காலத்தில் புற உலக நடவடிக்கைகள் மரபணுவில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது தொடர்பான ஆராய்ச்சிக்கான முன்மாதிரி போல் இந்த ஆய்வு நடந்துள்ளது என்றும் தாயின் சத்துமிக்க உணவுப் பழக்கம், வாழ்வியல் முறை சார்ந்து ஆகியவை அவளுடைய குழந்தையின் உடல்நலனில் ஏற்படும் மாற்றத்தை இதன் மூலம் ஆராய்ந்துள்ளோம் என்றும் பேராசிரியர் கெயித் கூறுகிறார்.

Thursday, May 22, 2014

வெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டுவைத்தியம்

"அழகானவள்" என்று பேரெடுக்க ஆசைப்படாத பெண்ணே உலகில் இல்லை. அழகிற்கு ஒரு ஆபத்து என்றால் அவளைப் பொருத்தவரை வாழ்கையே அஸ்தமனமாகிவிடும். ஆனாலும் சிலரிடம் சித்து விளையாட்டுக்களைக் காட்டி இயற்கை கொட்டமடிக்கும். 

வெண்புள்ளி நோயால் எந்த ஊனமும் இல்லை என்றாலும் எல்லாம் ஊனமடைந்து விட்டதாக மனம் குறுகிவிடும். மேலும் மனதிற்குள் அழுவது மங்கையர்க்கு கைவந்த கலை. உடல் நோய் உடலை மட்டும் வதைக்கும். உள்ளத்து நோய் உள்ளத்தோடு உடலையும் சிதைக்கும். அழகு தேவதையாய் அடியெடுத்து வைத்தவள்தான் எங்கள் மருமகள் ஹேமா.

எந்தக் குறையுமில்லை – மருமகளின் காலில் தோன்றிய கடுகளவு வெண்புள்ளி தவிர. சிரிப்பால் மறைத்துக் கொண்டிருந்தாள் சில காலம், பின்னர் சிரிப்பை மறந்தாள் சில காலம். அவளுக்கு ஓர் குற்ற உணர்வு காரணமே இல்லாமல். பூவைத் தொடுவது போல் நாங்கள் அவளைத் தொட்டாலும், தீயைத் தொடுவதுபோல் அவள் எங்களைத் தீண்டினாள். அதிக அன்பு செலுத்திப் பார்த்தும், தோல்வியே மிஞ்சியது எங்களுக்கு.

எங்களைவிட ஆங்கில மருத்துவத்தின் மீது அபார நம்பிக்கை அவளுக்கு. மருந்துகளின் எண்ணிக்கையும், டாக்டர்களின் எண்ணிக்கையும் கூடக்கூட வெண்தேமல் பரவும் வேகம் அதிகமாயிற்று. முடிவு???? வழக்கம்போல் தான் ---கிட்னி பிராப்ளம், ஹார்ட் பிராப்ளம், மூச்சுத் திணறல்....... பிறகு ஒரு நாள் ஹேமாவுக்கு வந்தது கோமா. அவளாக பயந்து, ஆங்கில வைத்தியத்தை அடியோடு விட்டு விட்டாள். அவள் முகத்தில் சிரிப்பு இல்லாததால் நாங்களும் சிரிக்க முடியவில்லை. ஒரு நாள் சித்த வைத்தியர் வடிவில் தெய்வம் அவளுக்குக் காட்சி அளித்தது.

"சின்ன வைத்தியம் ஒன்று சொல்கிறேன் சீரியஸாக எடுத்துக் கொள்வாயா?" என்று கேட்டார்.

" சீரியஸான வைத்தியங்களே என்னை சின்னப்படுத்திவிட்டபின், சின்ன வைத்தியம் என்னை என்ன செய்துவிடும்? சொல்லுங்கள் செய்கிறேன் " என்றாள். 


"காலை வெறும் வயிற்றில், கருவேப்பிலை கொழுந்து ஒரு கைபிடி அளவு எடுத்து அத்துடன் கீழாநெல்லி கொழுந்துஇலை ஒரு கைபிடி சேர்த்து, மிக மெதுவாக மென்று விழுங்கிவா" என்றார்.

"ப் பூ .... இவ்வளவுதானா? " என்றாள்.

"நிறைய நீர் குடி. உணவைக் குறைத்து பழங்கள் பல சாப்பிடு" என்றார்.

"பத்தியம் ஏதேனும் உண்டா?" என்றாள்

"சொல்ல மறந்துவிட்டேன். வெள்ளை சக்கரையை ( White Sugar) வாயால் உச்சரிக்கவோ, கண்ணால் பார்க்கவோ கூடாது " என்றார். சனியனை விட்டு ஒழித்ததால் பிணியிலிருந்து விடுதலை பெற்றாள் எங்கள் குலமகள்.

"உலகத்திற்கு இதைச் சொல்லவேண்டும் மாமா " என்றாள்.

"இணைய தளத்தில் பரிமாரக் காத்திருக்கிறார்கள் இனிய நண்பர்கள், உன்னுடைய போன் நம்பர் கொடுக்கத் தயாரா? " என்றேன்.

அதற்கு "போட்டோக்களும் தருகிறேன் மாமா" என்றாள்.

"எத்தனை வேதனைப்பட்டிருந்தால் அடுத்தவர்க்கு இது பயன்படட்டும் என்ற துணிவோடு போட்டோக்களைக் கொடுக்க முன் வருவாள்" என்று எண்ணி நாங்கள் பாராட்டினோம் அவளை. நீங்களும் வாழ்த்துங்கள். வாழட்டும் அவள் இன்னுமொரு நூறாண்டு சுமங்கலியாக

மது. இராமகிருஷ்ணன்
இயற்கை விவசாயி
சந்தோஷ் பார்ம்ஸ்
பொள்ளாச்சி -642 114.

திருமதி. ஹேமா உமாசங்கர்
கைபேசி எண்.85262 32442 ( தயவு செய்து மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை)

by Vincent
Pasumai Vidiyal
Source
 http://www.usetamil.com/t31338-topic#49899