Tuesday, November 10, 2009

நான் இவ்வளவு சிரமப்பட என்ன காரணம்?....




மாலை சூரியன் சாயும் நேரம். மங்களகரமான சூழல். மக்கள் கூடி நிற்க முனிவர் அவர்களுக்கு அருளாசி வழங்கி கொண்டிருந்தார். ஒவ்வொருவரும் தங்கள் குறைகளை கூறி அதற்கான தீர்வு கேட்டுகொண்டிருந்தார்கள்.
ஒரு சாதரண குடியானவன் அங்கு வந்தான்.


"இறையருள் பெற்ற மாமுனியே ...! எனக்கு ஒரு வழி கூறுங்கள். எனது வாழ்க்கையில் எப்பொழுதும் குறைகளே நிறைந்திருக்கிறது. துன்பத்திற்கு அளவே இல்லை. நான் இவ்வளவு சிரமப்பட என்ன காரணம்?...."என கேட்டான்.


அவனை தீர்க்கமாக பார்த்த குரு, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை தனது சிஷ்யர்களிடத்தில் கொண்டு வர சொன்னார்.


குடியானவன் முன்பு பாத்திரத்தை வைத்து ,"மகனே ....கடவுள் உனக்கு அனைத்து ஆனந்தத்தையும் வழங்கட்டும். உனது கைகளை இந்த பத்திரத்தில் நன்றாக கழுவு ..." என்றார்.


கைகளை கழுவினான் குடியானவன். மாமுனிவர் குடியானவனை பார்த்து கேட்டார்," மகனே , இப்பொழுது அந்த நீர் அசுத்தமாகி விட்டது. முன்பு இருந்ததை போல சுத்தமான நீரை எனக்கு தா"


"மா முனியே .....எனது கைகளில் உள்ள அழுக்கால் அந்த நீர் அசுத்தமாகி விட்டது. மீண்டும் எப்படி அந்த நீரையே சுத்தமாக தருவது? " என்றான் குடியானவன்.


"எனது மகனே அது போன்றது தான் வாழ்க்கையும். கடவுள் எப்பொழுதும் சுத்தமான நிலையிலேயே வாழ்க்கையை நமக்கு தருகிறார். நமது கைகளை கொண்டே அதை அசுத்தமாக்குகிறோம். இனி வரும் காலங்களில் எந்த செயல் செய்தாலும் முதலில் சிந்தித்து செயல்பாடு. உனது செயல்கள் அனைத்தும் சுத்தமாகவே இருக்கும். ஆனந்தமான வாழ்கையை ஆனந்தமாக வாழு..."


குடியானவன் மட்டுமல்ல அங்கு கூடி இருந்தவர்களும் உள்நிலையில் சுத்தமானார்கள்.