Tuesday, January 31, 2012

இதயம் காக்க 25 வழிகள்!


''நேத்துதான் நல்லாப் பேசிட்டு இருந்தார்... அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சே...'' - நெருக்கமான நண்பர்கள் இப்படி வருத்தப்படுவதும், ''ஏற்கெனவே ரெண்டு அட்டாக் வந்திருக்கு. அதைக் கவனிக்காம விட்டிருக்கார். அதான், இப்படியாகிடிச்சு!'' என உறவுக்காரர்கள் விளக்கம் சொல்வதையும் பல இடங்களில் காதுபடக் கேட்டு இருக்கிறோம். திடீர் மரணங்களுக்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது மாரடைப்புதான். நமது நாட்டில் 25 முதல் 69 வயதினருக்கு இடையே ஏற்படும் மரணங்களில் 25 சதவிகிதம் மாரடைப்பால்தான் நிகழ்கின்றன. இதய நோய் வராமல் தடுக்கவும், வந்துவிட்ட நோயில் இருந்து நம்மை நாமே மீட்டெடுக்கவும் பிரான்டியர் லைஃப்லைன் மருத்துவமனையின் தலைவரும் கார்டியோ தொராசிக் நிபுணருமான டாக்டர் கே.எம்.செரியன் சொல்லும் வழிகள் இதோ...

 மாரடைப்புக்கான காரணம்

உடல் முழுவதும் ரத்தம் பாய்ச்சும் அதிமுக்கிய வேலையைச் செய்வது நம் இதயம். 'லப் டப்' தாள லயத்தோடு இதயம் துடித்து இயங்குவதால்தான், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் திசுக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இப்படி உடல் முழுக்க ரத்தத்தை பம்ப் செய்யும் இதயம் இயங்கவும் ரத்தம் தேவை. இதயத்துக்குத் தேவையான இந்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்படும்போதுதான், மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்தக் குழாயில் கொழுப்புப் படிவதாலோ அல்லது ரத்தம் உறைந்துபோவதாலோ அடைப்பு ஏற்படலாம். இதனால், இதயத்துக்கு செல்லும் ஆக்சிஜன் நிரம்பிய ரத்த ஓட்டம் தடைப்பட்டு, இதயத் தசைகள் செயல் இழக்கும். இதைத்தான் மாரடைப்பு என்கிறோம்.

மாரடைப்பைத் தவிர்க்க முடியும்!

1உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பு, புகை பிடித்தல், உணவில் அதிகக் கொழுப்பு, உடல் உழைப்புக் குறைவு, மன அழுத்தம், மரபுரீதியாகக் குடும்பத்தில் யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டிருத்தல்.... என கொரனரி (இதய ரத்தக் குழாய் அடைப்பால் ஏற்படும்) மாரடைப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. உங்கள் மருத்துவரை அணுகி உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை - கொழுப்பு அளவினைத் தொடர்ந்து பரிசோதனை செய்து, தேவைக்கு ஏற்ப மருத்துவச் சிகிச்சை பெற்றாலே, மாரடைப்பைத் தவிர்க்கலாம்.

2குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறையாவது ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொண்டால், மாரடைப்பு அபாயத்தை முன்கூட்டியே அறிந்து தடுக்க முடியும். ரத்த அழுத்தம் சராசரிக்கும் அதிகமாக இருந்தால், இந்தப் பரிசோதனைகளை அடிக்கடி மேற்கொள்வது நல்லது. சராசரி ரத்த அழுத்தம் என்பது (ஐடியல் பிளட் பிரஷர்) 130/80 எம்.எம்.எச்.ஜி-க்கும் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

3கொரனரி இதய நோய் வருவதற்கு சர்க்கரை நோய் ஒரு மிக முக்கியக் காரணம். எனவே, குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒரு முறை கட்டாயம் சர்க்கரை நோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

4உங்கள் உடல் எடை அதிகமாக இருந்தால் அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால், உடனடியாக சர்க்கரை நோய் பரிசோதனை செய்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

5குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைப் பரிசோதனை செய்ய வேண்டும். மாரடைப்புக்கான காரணிகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் கொழுப்புப் பரிசோதனையை டாக்டரின் ஆலோசனைப்படி அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும்.

உணவுப் பழக்கம்

6மாரடைப்புக்கான அபாயத்தைக் குறைக்க, இதயத்துக்கு ஆரோக்கியம் தரும் உணவு அவசியம். கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றின் அளவு குறைவாக இருக்கும் உணவுப் பொருட்களே இதயத்துக்கு நல்லது. அதிக அளவில் பழங்கள், பச்சைக் காய்கறிகள், தானியங்கள், கொழுப்பு குறைவான பால் பொருட்கள் போன்றவை மாரடைப்பு வராமல் தடுக்கும்.

7குறைந்த கொழுப்பு மற்றும் அதிக அளவில் புரதச் சத்து நிறைந்த பீன்ஸ், மாரடைப்புக்கான அபாயத்தைக் குறைக்கிறது. அசைவம் சாப்பிடுபவர்கள், 'ரெட் மீட்' என்று சொல்லக் கூடிய ஆடு - மாடு போன்றவற்றின் இறைச்சியைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவற்றில் அதிக அளவு கொழுப்பு உள்ளது.

8தோல் நீக்கிய கோழி இறைச்சி மற்றும் மீன் போன்றவை ஆரோக்கியமானவை. ஆனாலும், அதிக அளவில் எண்ணெய்விட்டுப் பொரித்துச் சாப்பிடுவது தவறு.  முட்டையின் வெள்ளைப் பகுதியில் அதிகப் புரதச் சத்து உள்ளது. ஆனால், அதன் மஞ்சள் கரு அதிகக் கொழுப்பு மிக்கது. எனவே, முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்ப்பது மாரடைப்புக்கான வாய்ப்பைக் குறைக்கும்.

9பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அதில் அதிக அளவில் உப்பு உள்ளது. அது உயர்ரத்த அழுத்தத்தைத் தூண்டி விடும்.

10அதிக அளவில் சர்க்கரை உள்ள உணவுப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும். அந்த உணவுகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டிவிடும். இதனால், அதிகப்படியாக உடல் எடையும் கூடும்.

11'ஒமேகா-3-ஃபேட்டி ஆசிட்' மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது. மேலும், இது உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும். ஆளி விதை (Flax seed) எண்ணெய், வால்நெட் எண்ணெய், சோயாபீன் எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றில் இந்த ஒமேகா-3-ஃபேட்டி ஆசிட் உள்ளது. சால்மன் போன்ற சில மீன் வகைகளிலும் இந்த ஒமேகா - 3-ஃபேட்டி ஆசிட் நிறைந்து உள்ளது.

12சேச்சுரேட்டட் கொழுப்பு (Saturated fat) மற்றும் டிரான்ஸ் கொழுப்பு (Trans fat) ஆகியவை (ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரிப்பதன் மூலம்) கொரனரி மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும். அதனால், இவற்றையும் தவிர்க்க வேண்டும்.  

13இறைச்சி, பால் பொருட்கள், தேங்காய் எண்ணெய், பனை எண்ணெய் ஆகியவற்றில் சேச்சுரேட்டட் கொழுப்பு அதிக அளவில் உள்ளது. பொரிக்கப்பட்ட துரித உணவுகள், பேக்கரி பொருட்கள், அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகளில் அதிக அளவில் டிரான்ஸ் கொழுப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

14அதிக அளவில் மது அருந்துவது உடல்பருமனுக்கு வழிவகுக்கிறது. மேலும், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது. எனவே, மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி

15ஒரு நாளைக்கு குறைந்தது 30 முதல் 45 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். தொடர் உடற்பயிற்சிகள் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கின்றன. உங்களுக்குரிய ஆரோக்கியமான எடையை சரிவரப் பராமரியுங்கள். இதய நோய்களை ஏற்படுத்தும் உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்க உடற்பயிற்சி அவசியம்; மன அழுத்தத்தைக் குறைக்கவும் உடற்பயிற்சி உதவும்.

16தோட்டப் பராமரிப்பு, வீட்டு வேலைகள், மாடிப்படிகளில் ஏறி இறங்குவது, நடப்பதும் கூட நல்ல உடற்பயிற்சிதான். உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக எப்போதும் உடற்பயிற்சி செய்துகொண்டு இருக்க வேண்டும் என்று இல்லை. யோகா மற்றும் தியானப் பயிற்சி போன்றவை மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதால், மாரடைப்பு அபாயமும் குறையும்.

ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரித்தல்

17உங்கள் உடல் எடை ஆரோக்கியமானதுதானா என்பதை பாடி மாஸ் இன்டெக்ஸ் மூலம் கணக்கிடலாம். பி.எம்.ஐ. புள்ளிகள் 25 அல்லது அதற்கு மேல் இருந்தால், உஷாராகிவிட வேண்டும்.

18இடுப்பு அளவைக் கணக்கிடுவதால், வயிற்றுப் பகுதியில் எவ்வளவு கொழுப்பு உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆண்களுக்கு சராசரி இடுப்பு அளவு என்பது 40 இன்ச் அளவுக்கும் குறைவாக இருக்க வேண்டும். பெண்களுக்கு 35 இன்ச் அளவுக்கும் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.  

19பெரியவர்களுக்கு உடல் எடை கூடுகிறது என்றால், அது பெரும்பாலும் தசை எடை கூடுதலாக இருக்காது, கொழுப்பு அதிகரிப்பாகத்தான் இருக்கும். அதிக அளவிலான உடல் எடை என்பது உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரிப்பது, சர்க்கரை நோய் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுப்பதுடன் மாரடைப்புக்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்.

20குறைந்த அளவிலான உடல் எடைக் குறைப்புகூட மிகப் பெரிய பலனை அளிக்கும். உங்கள் எடையை வெறும் 10 சதவீதம் குறையுங்கள், அது உங்கள் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதுடன், ரத்தத்தில் கொழுப்பு அளவையும் குறைத்து, சர்க்கரை நோய்க்கான வாய்ப்பையும் குறைக்கிறது.

புகை பிடிக்காதீர்கள்

21புகை பிடிப்பது, புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துங்கள். மாரடைப்பு ஏற்பட மிக முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருப்பது புகையிலைப் பழக்கம். சிகரெட் புகையில் உள்ள நிகோடின் என்ற நச்சு ரத்தக் குழாயினை சுருக்கி, இதயத் துடிப்பு எண்ணிக்கை மற்றும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. சிகரெட்டில் உள்ள கார்பன் மோனாக்சைடு ரத்தத்தில் ஆக்சிஜனுக்கு மாற்றாகப் போய் உட்கார்ந்து கொள்கிறது. இதனால், உடலுக்குத் தேவையான போதுமான ஆக்சிஜன் கிடைப்பதற்காக (அதிகம் ரத்தம் செலுத்தும்படி) இதயம் கூடுதலாக வேலை செய்யவேண்டி இருக்கிறது. நீங்கள் புகைப்பதை நிறுத்தினால் அடுத்த ஓர் ஆண்டுக்குள் ஆச்சரியப்படத்தக்க வகையில் இதய நோய்க்கான வாய்ப்புகளும் குறைந்துவிடும். புகைப்பழக்கம் இல்லாத, ஆனால் ஒருவர் புகைத்துவிட்ட காற்றை சுவாசிப்பவருக்கும் கூட பாதிப்பு ஏற்படும். நீங்கள் புகைப்பதால், புகைப்பழக்கமே இல்லாத உங்கள் நண்பர்கள், குடும்பத்தினரும்கூட பாதிப்புக்கு ஆளாகின்றனர்.  

மருந்து-மாத்திரைகள்

22உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிகக் கொழுப்பு போன்ற பிரச்னைகள் இருந்தால், டாக்டர்கள் பரிந்துரைத்திருக்கும் மருந்து-மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை உங்களின் இதய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு பைபாஸ் அறுவைச் சிகிச்சை அல்லது ஆஞ்சியோபிளாஸ்டி செய்ய வேண்டும் என்று டாக்டர் பரிந்துரைத்தால், உடனடியாக அதைச் செய்து கொள்ளுங்கள். பயம் காரணமாகத் தள்ளிப் போடாதீர்கள்.

23மாரடைப்புக்கான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள். மருத்துவமனைக்குச் செல்லும் முன் ஆஸ்பிரின் மாத்திரையைப் பயன்படுத்துங்கள். அது இதயத் தசைப் பாதிப்பைக் குறைக்கும்.

24தொடர் மருத்துவப் பரிசோதனை, ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழ்நிலை, மாரடைப்புக்கான காரணிகளைக் கட்டுப்படுத்துவது போன்றவை நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும்.

பரிசோதனைகள்

25எளிய ஈ.சி.ஜி. பரிசோதனை மூலம் வலி இன்றி ஒருவரின் இதய மின் செயல்பாட்டைக் கண்டறிய முடியும். இது இதயம் எவ்வளவு வேகமாகத் துடிக்கிறது என்பதைக் காட்டும். இதயம் எந்தளவு பாதிக்கப்பட்டு உள்ளது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு உரிய சிகிச்சை அளித்தால், மாரடைப்பு வருவதைத் தடுக்க முடியும்.

உடலில் எங்கு கொழுப்பு அதிகமாக உள்ளது என்பதைக் கண்டறிவது இப்போது எளிமை. சாதாரண சி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்த்தாலே, கொழுப்பு தோலுக்கு அடியில் உள்ளதா அல்லது வயிற்றுப் பகுதிகளில் உள்ளதா என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்துவிட முடியும். இதயத் தசைகளுக்குச் செல்லும் ரத்தக் குழாயில் எவ்வளவு கொழுப்பு உள்ளது? எத்தனை ஆண்டுகளாக உள்ளது என்பதை 320 ஸ்லைஸ் சி.டி. ஸ்கேன் மூலம் கண்டறிய முடியும். எதிர்காலத்தில் ஒருவருக்குக் கொழுப்பு அடைப்பு ஏற்படுமா என்பதையும் துல்லியமாகச் சொல்லிவிட முடியும். ரத்தக் குழாயில் 0.5 மி.மீ. அளவுக்குக் கொழுப்பு படிந்திருந்தால் கூட, இந்தப் பரிசோதனை மூலம் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

அமர்வதிலும் அக்கறை காட்டுங்கள்!

ம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் திறனிலும் அறிவிலும் அகிலத்துக்கே சவால்விடும் ஆட்களாகிவிட்டோம் நாம். புதிய மென்பொருள் எழுதுகிற அளவுக்கு கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை நாம் திறமையாகக் கையாண்டாலும், பார்வைப் பாதிப்போ, முதுகெலும்புப் பிரச்னையோ வராதபடி கம்ப்யூட்டர் முன்னால் எப்படி அமர்வது என்று நம்மில் பலருக்குத் தெரியாது.  

 

''கம்ப்யூட்டர் முன்பு நாம் அமரும் முறை சரியாக இருந்தால், கண் வலி, முதுகு வலி போன்ற பிரச்னைகளை நிச்சயமாகத் தவிர்க்க முடியும்!'' என்கிறார் ஸ்போர்ட்ஸ் மெடிசின் டாக்டர் கண்ணன் புகழேந்தி. செய்தியும் படங்களுமாக கம்ப்யூட்டரைக் கையாளும் பக்குவம் குறித்து இங்கே விளக்குகிறார்...

 

இருக்கையின் நுனிப் பகுதியில் அமர்வதும் தவறு. இதனால் தொடைப் பகுதியில் ரத்த ஓட்டம் தடைப்படும். தொடைப் பகுதியில் உள்ள தசைநார்கள் இறுகி இடுப்பு வலியும் உருவாகும். தொடந்து தசை நார்கள் இறுகிய நிலையில் இருந்தால், ஆக்ஸிஜன் கிடைப்பது தடைப்பட்டு தசை நார்கள் சுருங்கிய நிலையை அடைந்துவிடும்.

பாதம் முழுவதும் தரையில் அழுந்துமாறு உட்கார வேண்டும். கால் விரல்களின் நுனிப்பகுதி மட்டும் தரையைத் தொடும்படி அமர்வது  தவறு. இதனால் காலின் பின் பக்கத்தசை இறுகி ரத்த ஓட்டம் தடைப்படும். இது கால் வலியை உண்டாக்கும். குதிகால் மட்டும் தரையில் படும்படி அமர்வதால் கால் கட்டை விரலிலும் கணுக்காலிலும் வலி ஏற்படும்.

'மடிக்கணினி' என்றால் அதனை மடியில் வைத்தபடி வேலை செய்யவேண்டும் என்பது இல்லை. எனவே, குனிந்து பார்த்து வேலை செய்யக் கூடாது. இப்படி வேலை செய்வது தலைவலி, கண் வலி, கழுத்து வலி போன்றவற்றை ஏற்படுத்தும்.

 

முதுகுத்தண்டு எலும்பு முன்னோக்கி வளையாமலும், பக்கவாட்டில் வளையாமலும் அமர வேண்டும்.

கைப்பகுதியும் மணிக்கட்டும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.

கால் மூட்டுகளை அதிகப்படியாக மடக்கியோ நீட்டியோ இருக்காமல், தலைகீழ் 'லி' வடிவத்தில் இருக்க வேண்டும்.

தாடையானது மேல் நோக்கியோ, கீழ் நோக்கியோ இல்லாமல் படத்தில் இருப்பது மாதிரி நேராக இருக்க வேண்டும்.

குடும்பத்தைக் குலைக்கும் பொங்கும் காதல்... பெருகும் மணமுறிவு...

'உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம் எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்' 

- இப்படி கவிதை மொழி பேசி, ஏங்கி ஏங்கித் தவித்துக் காதலித்து, பெற்றவர்களையும் உறவுகளையும் எதிர்த்து, சவால்களை தூசுகளாய்க் கடந்து... காதல் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகள் பெருகி வருகிறார்கள். அதேசமயம், திருமண வாழ்க்கையை பூரணமாக வாழாமல், கைப்பிடித்த வேகத்திலேயே அந்த உறவிலிருந்து சட்டப்பூர்வமாக விலகுவதும் அதிகரித்து வருகிறது!

இந்தக் காலத்தில் கணவன் - மனைவி இருவரும் சம்பாதிக்கும் குடும்பங்களில் திருமண முறிவு என்பது வெகு இயல்பான விஷயமாகிப் போய்விட்டது என்கிற நிதர்சனம், நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஏன் இந்த மன, மண முறிவுகள்?

இதைப் பற்றி அக்கறையுடன் நாம் நடத்திய ஆலோசனைகள் இங்கே...
சென்னை, குடும்பநல நீதிமன்றம். விவாகரத்துக்காகக் காத்திருக்கிறார்கள் பல பெண்கள். ''நானும் அவரும் மூணு வருஷமா லவ் பண்ணி, வீட்டை எதிர்த்து கல்யாணம் செய்துகிட்டோம். ஒரு நாலு மாசம் வரைக்கும் வாழ்க்கை நல்லாத்தான் போயிட்டு இருந்தது. என் வேலை சம்பந்தமா அடிக்கடி டூர் போக வேண்டி இருக்கும். இதுதான் என் வொர்க் நேச்சர்னு தெரிஞ்சுதான் கல்யாணம் செய்துகிட்டார். ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம், 'டூர் போகக்கூடாது'னு தினம் தினம் சண்டை, டார்ச்சர். ஒரு லெவல் வரைக்கும் பொறுத்துப் பார்த்து முடியாமதான் இப்ப கோர்ட்டுக்கு வந்தேன்'' என்று அதிக வலியின்றிப் பேசிய அந்தப் பெண்ணுக்கு வயது 25.
''நான் காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிச்சப்போ அவர் என்கூட பஸ்ல வருவார். பார்த்ததும் புடிச்சுப் போச்சு. செகண்ட் இயர் படிக்கும்போது எங்க வீட்ல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அதனால அவசரமா நானும் அவரும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஆனா, பொருளாதாரப் பிரச்னைகளை அவரால சந்திக்க முடியலை, என்னோட சின்ன தேவைகளைக்கூட நிறைவேத்த முடியலைங்கறது அப்புறம்தான் புரிஞ்சுது. இதனால தினம் சண்டை போட்டுக் கஷ்டப்படுறதைவிட, பிரிஞ்சு போயிடறதுனு முடிவு பண்ணிட்டேன். இப்ப டைவர்ஸ் கேஸுக்கு ஆகற செலவைக்கூட என் அம்மா, அப்பாதான் பார்த்துக்குறாங்க'' என்று அலட்டிக் கொள்ளாமல் சொல்லும் இந்தப் பெண்ணுக்கு வயது 22!

காதலைக் குலைக்கும் 'ஈகோ'! 

''நீதிமன்றத்துக்கு விவாகரத்துக் கேட்டு செல்வது தவறு என்கிற சிந்தனை, போன தலைமுறையில் இருந்தது. விவாகரத்துக் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது என்கிற சிந்தனையுடன்தான் வாழ தலைப்பட்டிருக்கிறது இந்தத் தலைமுறை'' என்று சுடும் உண்மையைச் சொல்லி ஆரம்பித்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்,

''எல்லாவற்றிலும் வேகம், வேகம் என்று ஓடும் இந்தத் தலைமுறையினர், பார்த்ததும் காதலிக்கிறார்கள். குடும்பம் நடத்த ஆரம்பித்ததும் ஒருவரின் ப்ளஸ், மைனஸ் தெரிய ஆரம்பிக்க, 'நீயும் சம்பாதிக்கிறாய், நானும் சம்பாதிக்கிறேன். உன் தவறுகளை எதற்காக நான் சுமக்க வேண்டும், பொறுத்துக் கொள்ள வேண்டும்?' என்கிற ஈகோ தலைக்குள் வந்தவுடன், நீதிமன்றத்துக்குள் நுழைந்து விடுகிறார்கள்'' என்று எதார்த்தத்தை எடுத்து வைத்தார்.

அதிகம் படித்தவர்கள்தான் அதிகம்! 

நீதிமன்றத்துக்கு இப்படி அவசரப்பட்டு வரும் தம்பதிகளுக்கு ஆலோசனை தருவதற்காகவே பிரத்யேகமாக கவுன்சலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரிடம் பேசியபோது... ''விவாகரத்துக்காக வரும் தம்பதிகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் மூன்று முறை கவுன்சலிங் கொடுக்கிறோம். 21-28 வயதுக்காரர்கள், 'இதுதான் தீர்வு' என்று தீர்மானித்துவிட்டே இங்கே வருகிறார்கள். நாங்கள் என்ன ஆலோசனை சொன்னாலும், அவர்கள் பொறுமையுடன் கேட்பதில்லை என்பது வருத்தமான விஷயம்.

அதிகம் படித்த ஆண்களும், பெண்களும் மனம் முழுக்க 'நான்' என்கிற ஈகோவுடன்தான் எங்கள் முன் அமர்கிறார்கள். எங்களிடம் வருகிற நூறு கேஸ்களில் ஒரு ஜோடிதான், மீண்டும் தம்பதியாக வீட்டுக்குத் திரும்பிப் போகிறார்கள். மற்ற 99 ஜோடிகளும் தனித்தனியாகவே பிரிந்து நடைபோடுவது துயரம்'' என்று கனத்த மனதுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

'அவன் என்னை டாமினேட் பண்றான்!' 

''மறுகல்யாணம் வரை தீர்மானித்துவிட்டே... நீதிமன்றம் ஏறுகிற காதல் தம்பதிகளும் உண்டு. உண்மை, சிலசமயங்களில் கற்பனையைவிட பயங்கரமானதாக இருக்கும் என்பதை இம்மாதிரியான வழக்குகளில் இருந்துதான் தெரிந்து கொள்கிறோம்'' என்று அதிர வைக்கிறார் மற்றொரு வழக்கறிஞரான சுதா.

''சாட்டிங்கில் பேசி, பழகி வீட்டுக்குத் தெரியாமல் கல்யாணம் செய்துகொண்டு, ஒரு வருடம் முடிந்ததும் வீட்டுக்குத் தெரியாமலேயே விவாகரத்து வாங்கிப் போன வழக்குகளையும் நீதிமன்றம் பார்த்திருக்கிறது.

ஆரம்பத்தில் ஏற்படுகிற 'எதிர்பாலின ஈர்ப்பை' காதல் என்று நம்பி கல்யாணம் செய்துகொண்டு, சில வருடங்கள் போன பின்பு, 'இது காதல் அல்ல... எனக்கு ஏற்ற ஜோடி இது அல்ல' என்று நீதிமன்றம் நாடுகிறவர்கள், 'நானும் அவன் அளவுக்கு சம்பாதிக்கிறேன், அப்புறம் எதுக்கு என்னை டாமினேட் பண்றான்?' என்று கேட்கும் வழக்குகள், மனைவி வேலைக்குப் போவது பிடிக்கவில்லை, அதனால் டைவர்ஸ் வேண்டும் என்று வரும் வழக்குகள், 'அவனுக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க', 'அவ எப்பவும் கம்ப்யூட்டர்ல சாட் பண்ணிட்டே இருக்கா' என்று வரும் வழக்குகளில் எல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள்தான்'' என்று தான் சந்தித்த வழக்குகளை அடுக்குகிறார் சுதா.

ஏன் பெருகுகிறது விவாகரத்து? 

காதல் தம்பதிகளிடம் ஏன் விவாகரத்து பெருகிறது என்ற கேள்விக்கு, மனநல மருத்துவர் ஷாலினியின் பதில்...

''இன்றைய பெண்ணின் தேவை மாறி வருகிறது என்பதை ஓர் ஆண் புரிந்து கொள்ளாததுதான் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம். அவன் பார்த்து வளர்ந்த அவன் அம்மாவைப் போல்... வெறும் உணவும், உடையும், நகையும் பெண்ணின் தேவை அல்ல இன்று. அவள் எதிர்பார்ப்பது சமத்துவம், சமமான மரியாதை. காரணம், பெண்ணும் இன்று ஆணுக்கு நிகராக சம்பாதிக்கிறாள், படித்து இருக்கிறாள், உலகம் தெரிந்து இருக்கிறது. அதனால் பெண் அட்வான்ஸ்டாக வளர்ந்துவிட்டாள். ஆனால்... ஒரு ஆண், ஒரு பெண்ணை நடத்தும் சிந்தனையில் இன்னும் பத்து வருடங்கள் பின்தங்கிதான் இருக்கிறான். வெறும் மல்லிகைப் பூவுக்கும் சினிமாவுக்கும் சமாதானமாகிப் போகிற பெண்தான் அவனுடைய சிந்தனையில் இருக்கிறாள். ஆனால், பெண்ணின் மனதில் இருப்பதோ... இந்தத் துணை,  நம்மை சரிசமமாக நடத்துவான் என்கிற நம்பிக்கைதான். இந்த எதிர்பார்ப்புகள் எதிரெதிர் திசையில் செல்லும்போது, விவாகரத்துதான் வழி என்று தீர்மானிக்கிறார்கள்.

காரணம் தொழில்புரட்சி! 

இது தவறு, சரி என்று சுட்டிக் காட்டுவதற்கும், வழி காட்டுவதற்கும் அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, மாமா, அத்தை என்று உறவுகள் அவர்கள் அருகில் இல்லை. அல்லது அந்த உறவுகளுக்கு இவர்களின் பிரச்னை போய் சேருவதில்லை. இன்றைய தலைமுறையினர் மனதுக்குள் ஒவ்வொருவரும் ஒரு தனித் தீவாகத்தான் வாழ்கிறார்கள். தொழில் புரட்சி ஏற்பட்ட நாடுகளில் எல்லாம் இந்தப் பிரச்னை எழுந்தது. உலகமயமாக்கலால் எழுந்துள்ள தொழிற்புரட்சியால் இன்று நாமும் அந்தப் பிரச்னையை எதிர்கொள்கிறோம்'' என்றவரிடம், இதற்குத் தீர்வுதான் என்ன என்றோம் கவலையுடன்.
''மாறும் குடும்பச் சூழ்நிலையை, தொழில் அமைப்பை படித்த தம்பதிகள் உணர்ந்து, இந்தத் திருமண உறவை இறுதி வரை எடுத்துச் செல்வதற்கு மனதளவில் முயன்றால்தான் விவாகரத்துகள் குறையும். விவாகரத்து செய்வதால் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை, சம்பந்தப்பட்ட அப்பாவும், அம்மாவும் உணர வேண்டும்!'' என்றார் ஷாலினி வேண்டுகோளாக!

சேர்வதே... பிரிவதற்காகத்தானா?


இனி, இங்கே... சிங்கிள் மதர்ஸ்! 


சமூகவியல் பேராசிரியர் முனைவர் ஆனந்தி, ''மேலைநாட்டின் தொழில்நுட்பம், உணவு, உடை நம்மை ஆக்கிரமிக்கும்போது அவர்களது கலாசாரமும் நம்மிடம் வந்து ஒட்டிக் கொள்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது. மேலைநாடுகளைப் போல் இங்கும் இனி 'சிங்கிள் மதர்ஸ்' அதிகம் இருப்பார்கள். அதை நோக்கித்தான் நகர்த்துகிறது இந்த வேகமும் தொழில் புரட்சியும். 80-கள் வரை விவசாயம் சார்ந்த நம் வாழ்க்கை முறையில் உறவுகள், வாழ்க்கை மதிப்பீடுகள், திருமணம் எல்லாவற்றுக்கும் உணர்வுப்பூர்வமான முக்கியத்துவம் இருந்தது. இன்று நம் நாட்டில், குறிப்பாக... தமிழ்நாட்டில் விவசாயம் கிட்டத்தட்ட அழிந்துவிட்டதால் அதனுடன் தொடர்புடைய சமூக கலாசாரம், திருமணம் எல்லாமே கேள்விக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது'' என்று மாறி வரும் சூழ்நிலையைச் சொன்னார்.

 விவாகரத்துகள்... சில உண்மைகள்! 

சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 4 குடும்ப நல நீதிமன்றங்கள் இருக்கின்றன. மதுரை உயர் நீதிமன்றத்தில் ஒரு குடும்பநல நீதிமன்றம் இருக்கிறது. இவற்றுடன் ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கும் சிவில் கோர்ட்டுகளிலும் தினசரி விவாகரத்து வழக்குகள் பதிவாகின்றன.
1980-களில் ஓராண்டுக்கே 20 - 30 விவாகரத்து வழக்குகள் வரைதான் ஒரு நீதிமன்றத்துக்கு வரும். இன்று தினமும் ஒவ்வொரு நீதிமன்றத்துக்கும் குறைந்தது 10 வழக்குகள் என்கிற அளவுக்கு நிலைமை கைமீறிப் போயிருக்கிறது.

 சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. 2008-ல் 25 வயதுக்குள் விவாகரத்து பெற்ற ஆண்கள் 2%, 2011-ல் 4%. 2008-ல் பெண்கள் 3%, 2011-ல் 6%.

 மும்பை, டெல்லி, லக்னோ, சென்னை போன்ற பெருநகரங்களில் விவாகரத்து வழக்குகள் அநியாயத்துக்கும் பெருகிக் கொண்டிருக்கின்றன. 1990-களில் வருடத்துக்கு 1,000 வழக்குகள் பதிவான நிலையில், அடுத்த பத்தாண்டுகளில், அதாவது 2000 ஆண்டுகளில் வருடத்துக்கு 9,000 வழக்குகள் என உயர்ந்துள்ளது.
இதில் 25-35 வயதுக்கு உட்பட்டவர்கள் 75 சதவிகிதத்தினர். திருமணம் செய்துகொண்ட 3 ஆண்டுகளுக்குள் விவாகரத்துக்கு விண்ணப்பித்தவர்கள் 85 சதவிகிதத்தினர்.

கட்டட்டும் கல்யாண களை!

'டீன் ஏஜ் வயதுக்கான பிரச்னைகள், தீர்வுகளை இதுவரை பார்த்தோம். இனி, 'திருமண வயது' என்று கொண்டாடப்படும் 21 வயதை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி பார்க்கலாமா!

ஒரு பெண் திருமணத்துக்குத் தயாராகிறார் என்றாலே... அழகு, ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் தானாகவே அக்கறை ஒட்டிக் கொண்டுவிடும். பெண்களுக்கு மிகுதியான மனப்பூரிப்பைத் தரும் மகிழ்ச்சியான தருணமல்லவா திருமணம்! நிச்சயதாம்பூலத்துக்கும், திருமணத்துக்கும் இடையில் இருக்கும் நாட்களில் இந்தப் பூரிப்பை பெண்கள் அதிகமாக உணர்வார்கள். அதைத்தான் 'பொண்ணுக்குக் கல்யாண களை வந்துடுச்சு!' என்று கேலியாகச் சொல்லி விளையாடுவார்கள் வீட்டுப் பெரியவர்கள்.

இத்தகைய பூரிப்புக்குக் காரணம், இந்த நேரம் உடலில் சுரக்கும் 'எண்டார்ஃபின்ஸ்'  (Endorphins) எனப்படும் 'ஹேப்பி ஹார்மோன்'தான். இது, மகிழ்ச்சியைத் தூண்டி முகத்தில் பொலிவை உண்டாக்கும்.

ஆனால், சிலருக்கு திருமண நாளை எதிர்நோக்கி முன்னேறும் மாதங்களில்... அளவுக்கு அதிகமாக தடதடவென எடை கூடிவிடும். இதைக் கட்டுப்படுத்த... 'ஸ்ட்ரிக்ட் டயட்', அதாவது உணவு விஷயத்தில் மிகவும் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். அதோடு, சாக்லேட், ஐஸ்க்ரீம் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. டயட் என்றதுமே இஷ்டம் போல பட்டினி கிடந்தால், அது புதி தாக வேறு பிரச்னைகளுக்கு

வழி ஏற்படுத்திவிடும். எனவே, மருத்துவர் மற்றும் டயட்டீஷியன் ஆலோசனை பெறுவது நல்லது!

இன்னொரு பக்கம், திருமணத்துக்கு தேதி குறித்துவிட்ட நிலையிலும்கூட பூரிப்பே இல்லாமல் இருப்பார்கள் சில பெண்கள். இப்படிப்பட்டவர்களுக்கு வைட்டமின் 'டி' அதிகமாக தேவைப்படும். இதற்காக சூரியஒளி அடிக்கடி உடல்மீது படும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள், சமைக்கப்படாத பச்சைக் காய்கறிகளை சேர்த்துக் கொள்வது, வெஜிடபிள் ஜூஸ் பருகுவது மற்றும் உடற்பயிற்சிகள் செய்வது என வழக்கப்படுத்திக் கொண்டால்... இவர்களையும் பொலிவடைய வைத்துவிடும் அந்த 'ஹேப்பி ஹார்மோன்'!

முகூர்த்த நாள் குறித்துவிட்டால், மண்டபம் புக் செய்கிறார்களோ இல்லையோ... பியூட்டி பார்லரில் ரெஜிஸ்டர் செய்து விடுகிறார்கள் நம் பெண்கள் பலரும். அதுவரை பார்லர் பக்கமே அடி எடுத்து வைத்திராத பெண்கள்கூட, திருமணம் என்றால் அங்கே தலைகாட்டத் தயங்குவதில்லை. இதில் தவறில்லை. ஆனால், இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங் களை மனதில் ஏற்றிக் கொண்டு, பிறகு பார்லருக்குள் செல்வது நல்லது.

தரமான பியூட்டி பார்லராகத் தேர்ந்தெடுக்க வேண்டியது, முதல் அறிவுறுத்தல். டவல், சீப்பு, க்ரீம் என்று வேறொருவருக்குப் பயன்படுத்தியதை நமக்கும் பயன்படுத்தினால், திருமண நாளில் பருக்கள், ஸ்கின் அலர்ஜி என்று அவஸ்தைப்பட நேரலாம். குறிப்பாக, வேக்ஸிங் செய்முறையில் சுகாதாரம் இல்லை என்றால்... டிரை ஸ்கின், இன்குரோயிங் ஹேர், ஹேர் ஃபாலிக்கிள்களில் இன்ஃபெக்ஷன் என பல பிரச்னைகள் வர வாய்ப்பு உண்டு. வேக்ஸிங் செய்தபின், ஆன்ட்டி செப்டிக் லோஷன் கொண்டு துடைத்தெடுக்க வேண்டியதும் அவசியம்.

ஃபேஷியல், ப்ளீச், த்ரெட்டிங், பெடிக்யூர், மேனிக்யூர், ஹேர் ஸ்பா, ட்ரிம்மிங், டீப் கண்டிஷனிங், பாடி வேக்ஸிங், அண்டர் ஆர்ம் வேக்ஸிங், ஃபுல் பாடி மசாஜ்... என உடல் முழுவதும் பார்லரில் புதுப்பொலிவு ஏற்றுவார்கள். இந்த ட்ரீட்மென்ட்களால் சருமத் துவாரங்கள் திறந்து, அழுக்குகள் வெளியேறியிருக்கும். சருமம் அப்படி சென்சிட்டிவ் நிலையில் இருக்கும்போது, அதிகம் வெயிலில் அலையக் கூடாது.

அடுத்ததாக, திருமண நாளை ஒட்டி பீரியட்ஸ் டேட் இருந்தால்... அதுவும் ஒரு பிரச்னையாக மணப்பெண்ணை வதைக்கும். பொதுவாக, மணப்பெண்ணின் சௌகரியம் கேட்டே திருமண நாள் குறிப்பார்கள். என்றாலும், தவிர்க்க முடியாத சூழலில் இப்பிரச்னையைச் சந்திக்க நேரும்போது, மாதவிடாயைத் தள்ளிப்போடுவதற்காக சிலர் மாத்திரைகளைச் சாப்பிடுவார்கள். இது முழுக்கத் தவறான செயல். அந்த மாத்திரைகள்... முகம், கை, கால் வீக்கத்தை ஏற்படுத்தலாம். சோர்வையும் அதிகப்படுத்தி விடக்கூடும். இதுபோன்ற சங்கடங்களில் சிக்கி சிரமப்படுவதைவிட, 'மாதவிடாய்' தரும் சின்ன சிரமம்... பரவாயில்லை என்று திடப்படுத்திக் கொள்வதே நல்லது.

Monday, January 30, 2012

30 வகை சீஸன் சமையல் !

டாக்டர்களிடம் போனதுமே முதலில் வரும் அட்வைஸ்... 'சாப்பாட்டுல நிறைய காய்கறியை சேர்த்துக்கோங்க' என்பதுதான். அதற்காக, சீஸன் இல்லாத சமயங்களிலும் விளைந்துவரும் காய்கறிகளை, கிலோ 100 ரூபாய், 200 ரூபாய் என்று கொடுத்து வாங்கி

சமைக்கத் தேவையில்லை. சீஸனில் விலை மலிவாக வரும் காய்கறிகளே போதும்! 'இந்த நேரத்தில் உனக்கு இந்த சத்து தேவை. நீ இந்தக் காயைச் சாப்பிட வேண்டும்' என்று இயற்கையே நம்முடைய உடல் நலனில் அக்கறை கொண்டு விளைவிக்கும் காய்கறிகள் அவை!

 

இங்கே உங்களுக்கு உதவுவதற்காக... 30 வகை சீஸன் சமையல் ரெசிபிகளை பரிமாறுகிறார் சமையல்கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார்.

பனங்கிழங்கு புட்டு

தேவையானவை: பனங்கிழங்கு - 3, சின்ன வெங்காயம் - 10, பச்சை மிளகாய் - 3, பூண்டு - 2 பல், சீரகம் - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பூண்டு, மஞ்சள்தூள் இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதை தோல் சீவிய பனங்கிழங்கில் தடவி வேகவிடவும். வெந்தவுடன் நாரை உரித்துவிட்டு உதிர்த்துக் கொள்ளவும். காடாயில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், உதிர்த்த கிழங்கு, உப்பு சேர்த்துக் கிளறவும். இறக்குவதற்கு முன்... சீரகம், தேங்காய் துருவலை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி சேர்த்துக் கிளறினால்... சுவையான, சத்தான பனங்கிழங்கு புட்டு ரெடி!

 மரவள்ளிக்கிழங்கு கட்லெட்

தேவையானவை: மரவள்ளிக்கிழங்கு (வேக வைத்து, மசித்தது) - ஒரு கப், கேரட், வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 3, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பொட்டுக்கடலை மாவு - 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மரவள்ளிக்கிழங்கை நன்கு வேக வைத்து, மசித்துக் கொள்ளவும், கேரட்டை துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மசித்த கிழங்குடன் கேரட் துருவல், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, பொட்டுக்கடலை மாவு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். சூடான தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி, விருப்பமான வடிவில் தட்டி இருபுறமும் சிவக்க விட்டு எடுக்கவும்.

சாஸுடன் சாப்பிட, மிகவும் சுவை யாக இருக்கும்.

 பீஸ் புலாவ்

தேவையானவை: பாஸ்மதி அரிசி - ஒரு கப், பட்டாணி -  கால் கப், பச்சை மிளகாய் - 4, தக்காளி, வெங்காயம் - தலா பாதி அளவு, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு - சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தக்காளி, வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு தாளிக்கவும். தக்காளி - வெங்காயம் விழுதைச் சேர்த்துக் கிளறவும்.  கீறிய பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுதையும் சேர்த்துக் கிளறவும். இதனுடன் பட்டாணி, அரிசி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்துக் கலக்கவும். கொதி வந்தவுடன் சிறிதளவு புதினா, கொத்தமல்லி சேர்த்துக் கிளறி மூடவும். ஆவி வர ஆரம்பித்ததும் குக்கரில் 'வெயிட்' போட்டு, அடுப்பை 'சிம்'மில் வைத்து 7 நிமிடம் கழித்து இறக்கினால்... பீஸ் புலாவ் ரெடி.

இதற்கு தயிர் பச்சடி, சாஸ் தொட்டு சாப்பிடலாம்.

 பீஸ் ஃப்ரைடு ரைஸ்

தேவையானவை: பாஸ்மதி அரிசி - ஒரு கப், பட்டாணி - அரை கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பூண்டு - 5 பல், பொடியாக நறுக்கிய தக்காளி, நீளமாக நறுக்கிய வெங்காயம் - தலா ஒன்று, சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், தக்காளி சாஸ் - அரை டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காய்த்தாள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பட்டாணி, அரிசியைத் தனித்தனியே வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் வெண்ணெயை சூடாக்கி... இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். வேக வைத்த பட்டாணி, சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்துக் கிளறவும். தேவையான உப்பு சேர்க்கவும். இதனுடன் வேக வைத்த சாதத்தை சேர்த்துக் கிளறி, வெங்காயத்தாள் தூவி அலங்கரித்தால்... பீஸ் ஃப்ரைடு ரைஸ் ரெடி.

 ஆலு மட்டர்

தேவையானவை: உருளைக்கிழங்கு - 2, பட்டாணி - கால் கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பட்டை - சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று, சீரகம் - கால் டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிது, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், மல்லித்தூள் - ஒன்றரை டீஸ்பூன், எண்ணெய்,  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், தக்காளியை நறுக்கி, விழுதாக அரைத்துக் கொள்ளவும். நறுக்கிய உருளைக்கிழங்கு, பட்டாணியை தனித்தனியே வேக வைத்து, எடுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் தாளித்து... வெங்காயம் - தக்காளி விழுதைச் சேர்த்து வதக்கவும். இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்க்கவும். பிறகு வேக வைத்த பட்டாணி, உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து, சிறிதளவு நீர் விட்டுக் கிளறவும். எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கி, கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.

 மட்டர் பனீர்

தேவையானவை: பனீர் துண்டுகள் - 100 கிராம், பட்டாணி - கால் கப், தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, இஞ்சி -  பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், முந்திரி விழுது - 2 டேபிள்ஸ்பூன்,        மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மல்லித்தூள் - ஒன்றரை டீஸ்பூன், சீரகம், சோம்பு - தலா கால் டீஸ்பூன்,  பட்டை - சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று, புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.  

செய்முறை: பட்டாணியை வேக வைத்து எடுத்து வைக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பு தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்க்கவும். வேக வைத்த பட்டாணி சேர்த்து, நீர் ஊற்றி கிளறவும். அரைத்த முந்திரி விழுது, உப்பு சேர்க்கவும். கொதித்து வரும்போது, பனீர் துண்டுகளைச் சேர்த்து கிளறி, நறுக்கிய புதினா, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

சப்பாத்தி, பூரிக்கு ஏற்ற சைட் டிஷ் இது.

 முள்ளங்கி ரைஸ்

தேவையானவை: சாதம், முள்ளங்கித் துருவல் - தலா ஒரு கப், பச்சை மிளகாய் - 3, வெங்காயம், தக்காளி,  - தலா ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், சோம்பு - கால் டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, பிரிஞ்சி இலை (சிறியது) - ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.  

செய்முறை: வெங்காயம், தக்காளியை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய், பட்டை, சோம்பு மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும். காடாயில் நெய், எண்ணெயை விட்டு சூடாக்கி, பிரிஞ்சி இலை தாளித்து... வெங் காயம், தக்காளியை வதக்கவும். இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிள காய் விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் துருவிய முள்ளங்கி,  மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சுருள வதக்கவும். பிறகு, சாதத்தை சேர்த்து நன்கு கிளறி, நறுக்கிய புதினா, கொத்தமல்லி தூவி அலங்கரித்தால்... முள்ளங்கி ரைஸ் ரெடி!

 கோபி பராத்தா

தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், காலிஃப்ளவர் துருவல் - அரை கப், வெங்காயம் (பொடியாக நறுக்கவும்) - ஒன்று, இஞ்சித் துருவல், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய், நெய் - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெயை சூடாக்கி, வெங்காயத்தை வதக்கவும். அதனுடன் சுத்தம் செய்த காலிஃப்ளவர் துருவல், இஞ்சித் துருவல், சீரகத்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து சுருள வதக்கி, ஆற வைக்ககவும். கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும். மாவை சப்பாத்தியாக இட்டு, அதன் நடுவில் காலிஃப்ளவர் கலவையை வைத்து மூடி, மீண்டும் சப்பாத்தியாக இட்டு, சூடான தோசைக்கல்லில் நெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுத்தால்... கோபி பராத்தா தயார்.

 மங்களூர் மொச்சை கிரேவி

தேவையானவை: மொச்சை - ஒரு கப், உரித்த சின்ன வெங்காயம் - அரை கப்,  பெரிய வெங்காயம் - ஒன்று, தேங்காய் துருவல் - கால் கப், கசகசா - 2 டீஸ்பூன் (விழுதாக அரைத்துக் கொள்ளவும்), கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

வறுத்து அரைக்க: தனியா, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், சிவப்பு மிளகாய் - 6, மிளகு - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: வறுத்து அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை தோலுடன் தணலில் தோல் கருகும் வரை சுடவும். பிறகு, தோலை உரித்துவிட்டு மைய அரைக்கவும். குக்கரில் எண்ணெயை சூடாக்கி... சின்ன வெங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும். வறுத்து அரைத்த பொடி, வெங்காய விழுது, மொச்சை, உப்பு சேர்த்து வதக்கி, தேவையான தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். கொதி வந்தவுடன் மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கி வைக்கவும். மூடியைத் திறந்து, தேங்காய் துருவல், அரைத்த கசகசா விழுதைச் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.

இது கர்நாடக ஸ்பெஷல் அக்கி ரொட்டிக்கு (அரிசி ரொட்டி) ஏற்ற சைட் டிஷ்!

 முள்ளங்கி சட்னி

தேவையானவை: முள்ளங்கி - 2, தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, காய்ந்த மிளகாய் - 5, இஞ்சி - சிறிய துண்டு, கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முள்ளங்கி, தக்காளி, வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி... நறுக்கிய காய்கறிகள், இஞ்சி, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். ஆறியதும் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து சேர்க்கவும். இட்லி, தோசை, தயிர்சாதம் சப்பாத்தி என எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ் ரெடி!

 கோஸ்  மொச்சை கிரேவி

தேவையானவை: முட்டைகோஸ் (துருவியது) - ஒரு கப், பச்சை மொச்சை - அரை கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, சீரகம் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மல்லித்தூள் - ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெயை சூடாக்கி, சீரகம் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இஞ்சி - பூண்டு விழுது, மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறவும். முட்டைகோஸ், மொச்சை சேர்க்கவும். வதங்கியவுடன் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெந்தவுடன் தேவையான உப்பு சேர்த்து, எல்லாம் ஒன்றாக சேர்ந்து கிரேவி பதம் வந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

இது சாதம், சப்பாத்தி, இட்லி, தோசைக்கு அருமையான காம்பினேஷன்.

 மூலி பராத்தா

தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், முள்ளங்கித் துருவல் - அரை கப், பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும்) - 2, சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு, நெய் - தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் முள்ளங்கித் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், சீரகத்தூள், உப்பு சேர்த்து பிசிறிக் கொள்ளவும். பின்னர் தேவையான நீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து, சப்பாத்தியாக இட்டு, சூடான தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். நெய் தடவி பரிமாறவும்.

 மரவள்ளி அடை

தேவையானவை: கடலைப்பருப்பு, புழுங்கல் அரிசி,  - தலா அரை கப், துவரம்பருப்பு, உளுந்து - தலா கால் கப், காய்ந்த மிளகாய் - 10, மிளகு, சீரகம், சோம்பு - தலா கால் டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, மரவள்ளிக் கிழங்கு துருவல் - ஒரு கப், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பருப்பு வகைகள், அரிசியை ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். மரவள்ளிக்கிழங்கை முக்கால் பாகம் வேக வைத்து, தோலுரித்து, துருவிக் கொள்ளவும். ஊற வைத்த பருப்பு வகைகள், அரிசியை அரைக்கவும். பாதி அரைத்தவுடன் உப்பு, காய்ந்த மிளகாய், மிளகு, சோம்பு, சீரகம், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவில் வெங்காயம், மரவள்ளிக் கிழங்குத் துருவல் சேர்த்துக் கலக்கி, சூடான தோசைக் கல்லில் அடைகளாக ஊற்றி, இருபுறமும் எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும். இதை, தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையோ சுவை!

 சர்க்கரைவள்ளிக் கிழங்கு கோலா உருண்டை

தேவையானவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு (வேக வைத்து, மசித்தது) - ஒரு கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், சோம்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பட்டை, கிராம்பு - சிறிதளவு, பொட்டுக்கடலை மாவு - கால் கப், வெங்காயம் - ஒன்று, புதினா, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெயை சூடாக்கி, வேக வைத்து மசித்த வள்ளிக்கிழங்கு, இஞ்சி - பூண்டு விழுது, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிக் கொள்ள வும். ஆறியதும், நறுக்கிய வெங் காயம், புதினா, கொத்தமல்லி, பொட்டுக்கடலை மாவு சேர்க்க வும். சிறிய உருண்டைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்தால்... சர்க்கரை வள்ளிக் கிழங்கு கோலா உருண்டை ரெடி.

 காய்கறி ஆம்லெட்

தேவையானவை: கடலை மாவு - அரை கப், சின்ன வெங்காயம் - 5, தக்காளி - ஒன்று, வேக வைத்த பட்டாணி, கேரட் துருவல் - தலா கால் கப், பச்சை மிளகாய் - 2, கொத்தமல்லி தழை - சிறிதளவு,   இஞ்சித் துருவல் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: எண்ணெயை சூடாக்கி, சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய தக்காளி, கேரட் துருவல், வேக வைத்த பட்டாணி,  இஞ்சித் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். ஆறியதும் கடலை மாவுடன் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி மாவை தோசைகளாக ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லி தழை  தூவி, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

 காய்கறி பிரட்டல்

தேவையானவை: கேரட், உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, பீன்ஸ் - 10, உதிர்த்த காலிஃப்ளவர் - 10 துண்டுகள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

அரைத்துக்கொள்ள: தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், சோம்பு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், சிவப்பு மிளகாய் - 6, கசகசா - கால் டீஸ்பூன், பொட்டுக்கடலை - 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: அரைக்க கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். காய்கறிகளை சதுரமாக வெட்டி வேக வைக்கவும்.  கடாயில் எண்ணெயை சூடாக்கி... வெங்காயம், தக்காளியை வதக்கவும். வதங்கியதும், அரைத்த விழுது, வேக வைத்த காய்கறிகள், உப்பு சேர்த்து வதக்கவும். தண்ணீர் தெளித்து வேகவிடவும். பச்சை வாசனை போய், நன்கு சுருண்டு வரும்போது இறக்கிப் பரிமாறவும்.

 வெஜ் ஜல்ஃப்ரைசி

தேவையானவை: கேரட்,  உருளைக்கிழங்கு - தலா ஒன்று, பீன்ஸ் - 10, பட்டாணி - கால் கப், குடமிளகாய் - ஒன்று, தக்காளி, வெங்காயம் - தலா 2,  பட்டை கிராம்பு,

ஏலக்காய் - சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், மல்லித்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காய்கறிகளை விரல் நீளத்துக்கு நறுக்கிக் கொள்ளவும். ஒரு தக்காளி, வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, பட்டை, கிராம்பு ஏலக்காய் தாளித்து, இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி - வெங் காய விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் மீதமுள்ள ஒரு தக்காளி, வெங்காயத்தை நறுக்கி சேர்க்கவும். மற்ற காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள் சேர்த்துக் கிளறி, தண்ணீர் சேர்த்து வேகவிடவும். காய்கறிகள் வெந்தவுடன், உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கிப் பரிமாறவும்.

இது, ஃப்ரைடு ரைஸ், சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ்.

 சீஸ்  வெஜ் கட்லெட்

தேவையானவை: உருளைக்கிழங்கு - 2, வெங்காயம், கேரட் - தலா ஒன்று, சீஸ் - 4 க்யூப்ஸ், கோஸ் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், பிரெட் தூள் - சிறிதளவு, எண் ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெயை சூடாக்கி... வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், கோஸ், பச்சை மிளகாய் - இஞ்சி - பூண்டு விழுது, கரம் மசாலாத் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். ஆறிய கலவையுடன் துருவிய சீஸ் சேர்க்கவும்.

இதை வட்டமாக தட்டி, பிரெட் தூளில் புரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.

 நெல்லிக்காய் தயிர் பச்சடி

தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 2, தயிர் - அரை கப், பச்சை மிளகாய் - ஒன்று, சீரகம் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: நெல்லிக்காயை துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாய், சீரகம், தேங்காய் துருவலை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் நெல்லித் துருவல், அரைத்த விழுது, உப்பு சேர்த்து தயிருடன் கலக்கவும். எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்தால்... நெல்லிக்காய் தயிர் பச்சடி ரெடி.

 நெல்லிக்காய் தொக்கு

தேவையானவை: நெல்லிக்காய் - 20-25, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன் (வறுத்துப் பொடிக்கவும்), நல்லெண்ணெய் - கால் கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: நெல்லிக்காயை கொட்டை நீக்கி, பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய நெல்லிக்காய், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். உப்பு சேர்க்கவும். நன்கு வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் போது கடுகு, வெந்தயப்பொடி சேர்க்கவும். 5 நிமிடம் கிளறி, இறக்கியதும் ஆறவிட்டு, சுத்தமான பாட்டிலில் போட்டு வைக்கவும்.

 நெல்லி ஜாம்

தேவையானவை: நெல்லிக்காய் - 20, சர்க்கரை - கால் கிலோ.

செய்முறை: நெல்லிக்காயை வேக வைத்து கொட்டை நீக்கி, துண்டுகளாக்கி, உலர விடவும். அடுப்பில் பாத்திரத்தை ஏற்றி, சூடானதும் சர்க்கரைப் பாகு காய்ச்சவும். சர்க்கரை கரைந்து வரும்போது நறுக்கி வைத்திருக்கும் நெல்லிக்காயைச் சேர்க்கவும். பாகு இறுகி வரும்போது இறக்கி, ஆற வைத்துப் பின் பாட்டிலில் போடவும். தினசரி ஒரு துண்டு வீதம் சாப்பிட, நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

 காய்கறி  புளி மண்டி

தேவையானவை: வெண்டைக்காய் - 4, கத்திரிக்காய் - ஒன்று, அவரைக்காய் - 5, வாழைக்காய், சுரைக்காய் - பாதி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 3, பச்சை மொச்சை - கால் கப், சின்ன வெங்காயம் - 10,  மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு (அரிசி களைந்த நீரில் ஊற வைக்கவும்), கடுகு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காய்கறிகளை பெரிய துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் தாளிக்கவும். காய்கறிகளை போட்டு வதக்கவும். மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும். புளித் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். காய்கறிகள் வெந்து சேர்ந்தாற்போல் வரும்போது இறக்கி வைக்கவும்.

 பாலக் பக்கோடா

தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், பாலக்கீரை - ஒரு கட்டு, வெங்காயம் - ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு, சீரகம், சோம்பு - தலா கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பை 2 மணி நேரம் ஊறவிடவும். ஊறிய பருப்புடன் உப்பு, பச்சை மிளகாய், சீரகம், சோம்பு, இஞ்சி சேர்த்து அரைக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், கீரை சேர்த்துப் பிசையவும். மாவை  சூடான எண்ணெயில் பக்கோடா போல் கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

 கத்திரிக்காய் டிலைட்

தேவையானவை: பெரிய கத்திரிக்காய் - ஒன்று, மைதா மாவு - கால் கப், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், பிரெட் தூள் - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கத்திரிக்காயை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். மைதா மாவில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து பஜ்ஜி மாவு பதத் துக்கு கரைக்கவும். கத்திரித் துண்டுகளை மாவில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டியெடுத்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

 பச்சைப் பட்டாணி வடை

தேவையானவை: உரித்த பச்சைப் பட்டாணி - ஒரு கப், பொட்டுக்கடலை மாவு - கால் கப், வெங்காயம் - ஒன்று, சோம்பு, மிளகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: உரித்த பச்சைப் பட்டாணி, சோம்பு, மிளகு, சீரகம், சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். அதனுடன் பொட்டுக்கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து வடை மாவு போல் பிசைந்து கொள்ளவும். எண்ணெயை சூடாக்கி, மாவை அதில் வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

 கல்யாணப் பூசணி பச்சடி

தேவையானவை: மஞ்சள் பூசணி - கால் கிலோ, மிளகாய்த்தூள், மல்லித்தூள் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 5, கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மஞ்சள் பூசணியை துண்டுகளாக்கி, மஞ்சள்தூள் சேர்த்து வேக விட்டு... ஒன்றிரண்டாக மசிக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் தாளிக்கவும். மசித்த பூசணியை சேர்த்து, உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்துக் கலக்கி கொதிக்கவிட்டு, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

 மரவள்ளிக்கிழங்கு கீர்

தேவையானவை: மரவள்ளிக்கிழங்குத் துருவல் - அரை கப், பால் - அரை லிட்டர், சர்க்கரை - ஒரு கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், முந்திரி, திராட்சை - சிறிதளவு, பாதாம் பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: மரவள்ளிக்கிழங்கை பாதி வேக வைத்து, துருவிக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு நெய்யை சூடாக்கி, முந்திரி, திராட்சையை வறுத்துக் கொள்ளவும். மீதி நெய்யில் மரவள்ளிக் கிழங்குத் துருவலை வதக்கவும். பாலைக் காய்ச்சி, கொதி வரும்போது வதக்கிய மரவள்ளிக் கிழங்குத் துருவலை சேர்த்து வேகவிடவும். அதனுடன் சர்க்கரையை சேர்த்து... பால் சுண்டி வரும்போது, ஏலக்காய்தூள், பாதாம் பவுடர், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கினால்.... வித்தியாசமான கீர் ரெடி! சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறலாம்.

 பட்டாணி கீர்

தேவையானவை: பச்சைப் பட்டாணி - ஒரு கப், பால் - அரை லிட்டர், சர்க்கரை - முக்கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை - சிறிதளவு.

செய்முறை: பச்சைப் பட்டாணியை ஆவியில் 10 நிமிடம் வேகவைத்து, பிறகு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பாலைக் காய்ச்சி, அரைத்த விழுதைச் சேர்த்துக் கொதிக்கவிட்டு, மிதமான தீயில் 10 நிமிடம்  அப்படியே வைக்கவும். பின்னர் அதில் சர்க்கரையைச் சேர்க்கவும். எல்லாம் நன்றாகச் சேர்ந்து வரும்போது வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கினால்... சூப்பர் பட்டாணி கீர் ரெடி.

 பனங்கிழங்கு  வெல்ல பாயசம்

தேவையானவை: பனங்கிழங்கு - 4, வெல்லம் - முக்கால் கப், தேங்காய்ப் பால் - 2 கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை - சிறிதளவு.

செய்முறை: பனங்கிழங்கை வேக வைத்து, நாரெடுத்து, துருவிக் கொள்ளவும். வாணலியில் நெய்யை சூடாக்கி, துருவலை வதக்கி, ஒன்றரை கப் தேங்காய்ப் பாலில் வேகவிடவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி சேர்க்கவும். ஏலக்காய்த்தூள், முந்திரி, திராட்சை சேர்க்கவும். மீதமுள்ள அரை கப் தேங்காய்ப் பாலை சேர்த்து, கொதி வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

 வெஜ் ஊறுகாய்

தேவையானவை: கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி, முள்ளங்கிக் கலவை - ஒரு கப், மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், கடுகு, வெந்தயப்பொடி - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், இஞ்சி - விரல் நீளத்துண்டு, பூண்டு - 5 பல், புளி - எலுமிச்சை அளவு, நல்லெண்ணெய் - அரை கப், உப்பு - தேவையான அளவு (விருப்பப்பட்டால் பேரீச்சை துண்டுகள் சேர்க்கலாம்).

செய்முறை: காய்கறிகளை சிறிய துண்டுகளாக நறுக்கி, ஆவியில் வேக வைக்கவும். ஈரம் போக உலர விடவும். வாணலியில் எண்ணெயை ஊற்றி, சூடானதும் பூண்டு, இஞ்சி (பொடியாக நறுக்கியது) வதக்கவும். இதனுடன் காய்கறிகள், மஞ்சள்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும் கடுகு - வெந்தயப் பொடி சேர்த்து எண்ணெய் பிரியும்போது இறக்கி, பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.

காய்கறிகளை சமைக்க நேரம் இல்லாதபோது கைகொடுக்கும் இந்த ஊறுகாய்.

Think And Grow Rich by Napoleon Hill

Think And Grow Rich by Napoleon Hill - The Master Mind Principle: two or more persons working together in complete harmony toward a mutual goal or goals...Napoleon Hill's philosophy teaches you what you were never taught. Specifically: How to Recognize, Relate, Assimilate and Apply principles whereby you can achieve any goal whatsoever that doesn't violate Universal Law - the Law of God and the rights of your fellowman - Think And Grow Rich  by Napoleon Hill

http://www.ziddu.com/download/18451768/NapoleonHill-ThinkAndGrowRich.pdf.html